BIG STORIES
சண்டையை வேடிக்கை பார்க்க சென்றவர் மீது காரை ஏற்றிய கொடுமை..! அண்டை வீட்டாரின் பொறாமை
Jan 25, 2026 10:23 AM
8
நாகை அருகே பக்கத்து வீட்டில் நடந்த குடும்ப சண்டையை பார்க்க ஓடிய நபர் மீது ஆம்னி காரை விட்டு ஏற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் , இந்த சம்பவத்தை அரங்கேற்றிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
நாகப்பட்டினம் அய்யனார் சன்னதி பகுதியை சேர்ந்தவர் கிருபா. இவருக்கும் மதுரையை சேர்ந்த சிவரஞ்சித்குமாருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இரண்டு குழந்தைகள் மதுரையில் சிவரஞ்சித்குமாரிடமும், பெண் குழந்தையை நாகப்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டு விட்டு கிருபா வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18 ம் தேதி தனது மாமியார் மாரியம்மாள் வீட்டில் உள்ள தனது பெண் குழந்தையை அழைத்துச் செல்ல சிவரஞ்சித்குமார் தனது உறவினர்களுடன் ஆம்னி காரில் வந்தார்.
அப்போது மாரியம்மாள் குடும்பத்தினருக்கும், சிவரஞ்சித்குமார் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இரு குடும்பத்தினரும் சாலையில் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது சிவரஞ்சித்குமார் தனது பெண் குழந்தையை காரில் தூக்கிப்போட்டு கொண்டு மதுரைக்கு அழைத்துச்செல்ல முற்பட்டார்.
அப்போது அதே தெருவில் வசிக்க கூடிய பிராபகரன் என்பவர் சத்தம் கேட்டு தனது வீட்டில் இருந்து வெளியே வந்து சண்டை நடக்கும் இடத்திற்கு வேடிக்கை பார்க்க சென்றார். குழந்தையை காரில் ஏற்றிக் கொண்டு காரை கிளப்பிய சிவரஞ்சித்தோ, தன்னை தடுக்க தான் அவர் வந்திருப்பதாக நினைத்து அவர் மீதும் சாலையில் நின்றவர்கள் மீதும் ஆம்னி காரை விட்டு மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதற்குள்ளாக ஓடும் காரில் இருந்து அவரது குழந்தையும் கீழே குதித்து காயம் அடைந்தது.
ஆம்னி கார் மோதியதில் சாலை ஓரம் தூக்கி வீசப்பட்டதில் பிரபாகரன் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் அடைந்தார்.
குழந்தை காயம் அடைந்ததால் காரை ஓட்டிய சிவரஞ்சித்தை இரு தரப்பினரும் பிடித்து அடிக்க பாய்ந்தனர்
இதையடுத்து அவர் மயக்கம் வந்தது போல நடித்து படுத்துக் கொண்டார், இதனால் அவரை அடிக்க வந்தவர்கள் திகைத்து நின்றனர்
பின்னர் சற்று நேரத்தில் எழுந்து சென்ற சிவரஞ்சித் தனது ஆம்னி காரை கிளப்பிக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரை விட்டு மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிவரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பிரபாகரன் உதவி வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu