BIG STORIES
கார் ஓட்டிச் சென்ற பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற ஆக்டிங் ஓட்டுனர் சிக்கியது எப்படி? நகையை பறிக்க மர்டர் பிளான்
Nov 07, 2025 04:19 PM
388
நகையை பறிக்க மர்டர் பிளான்
நிலம் வாங்குவதற்கு உதவியாக இருப்பதாக நடித்து, பெண்ணின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாக ஆக்டிங் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். மனைவி கொலை சம்பவம் குறித்து அறிந்து வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் மற்றும் உறவினர்கள், காவல் நிலையத்தில் வைத்து ஓட்டுனரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிகுமார், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளி நாட்டில் இருந்து கணவர் அனுப்பும் பணத்தை வைத்து சில இடங்களில் நிலம் வாங்கி வந்தார் மகேஸ்வரி, சம்பவத்தன்று காலை புதிய நிலம் ஒன்றை பார்க்க வெளியே புறப்பட்டார். தனது சொகுசு காரில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடபொய்கை அருகே உள்ள சாய்பாபா காலனி பகுதிக்கு சென்றார்.
அங்கிருந்து நில புரோக்கர் ஒருவருக்கும், தனது தந்தைக்கும் தான் நிலம் பார்க்க வந்திருக்கும் தகவலை கூறி இடத்தின் லொகேசனை செல்போனில் அனுப்பி வைத்த நிலையில், நீண்ட நேரமாக மகேஸ்வரி வீடு திரும்பவில்லை. மகேஸ்வரி குறிப்பிட்ட லொகேசனுக்கு புரோக்கர் சென்று பார்த்தபோது அங்குள்ள தைலமர காட்டுக்கு அருகே அவரது காரிலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மகேஸ்வரி சடலமாக கிடந்தார்.
உடனடியாக நில புரோக்கர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். மகேஸ்வரியின் தலையில் கல்லால் தாக்கியும், கார் கதவு இடுக்கில் வைத்து நைத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதும் அவரது கழுத்து மற்றும் கைகளில் அணிந்திருந்த 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார். மகேஸ்வரி வீட்டில் இருந்து புறப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில் அவர் தனியாக காரை ஓட்டிச்சென்றது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் காணப்பட்ட செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போலீசார், குறிப்பிட்ட நேரத்தில் மகேஸ்வரியின் செல்போனுடன் சந்தேகத்துக்கிடமான செல்போன் ஒன்றின் சிக்னல் இருந்ததை கண்டறிந்தனர். அந்த செல்போனுக்கு மகேஸ்வரி அழைத்திருப்பதும் தெரியவந்தது. அதனை வைத்து அவருக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்த ஆக்டிங் ஓட்டுனரும் , பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருமான சசிக்குமார் என்பவரை பிடித்து விசாரித்தனர். முதலில் தனக்கும் கொலைக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தான் அங்கு செல்லவே இல்லை என்றும் சசிக்குமார் மறுத்தார், ஆனால் வழியில் மகேஸ்வரியின் காரில் ஏறி சசிக்குமார் சென்றதை, போலீசார் சிசிடிவி காட்சியுடன் உறுதிப்படுத்தியதால், மகேஸ்வரி கொலைக்கான மர்மம் விலகியது.
நிலம் ஒன்றை வாங்கி விற்ற மகேஸ்வரி, நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து புதிய இடங்களை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையே மகேஸ்வரி சொந்தமாக வாங்கிய புதிய காருக்கு ஆக்டிங் ஓட்டுனராகவும், பின்னர் கார் ஓட்டுவதற்கும் கற்றுக் கொடுத்த சசிக்குமார் என்பவர் மகேஸ்வரியிடம் நகை பணம் ஏராளமாக இருப்பது தெரிந்து கொண்டு அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி தனக்கு தெரிந்த இடம் ஒன்று இருப்பதாக கூறி மகேஸ்வரியை ஏமாற்றி அழைத்து சென்று உள்ளார். கொலை பழியை நிலபுரோக்கர் மீது போட வேண்டும் என்பதற்காக வழியில் மகேஸ்வரி மூலமாகவே போன் செய்து நிலத்தின் மதிப்பை அறிவதற்காக புரோக்கரை சம்பவ இடத்துக்கு வரச்சொல்லி லொகேசன் அனுப்ப வைத்துள்ளர்.
சம்பவ இடத்தில் வைத்து நிலத்தை காண்பிப்பது போல கவனத்தை திசைதிருப்பி பெரிய கல்லால் மகேஸ்வரியின் பின்னந்தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகின்றது. ரத்த வெள்ளத்தில் தடுமாறிய மகேஸ்வரி காரில் ஏறி தப்ப முயன்ற போது, காரின் கதவால் அவரது கழுத்தை நசுக்கி கொடூரமாக கொலை செய்து விட்டு, அவரது தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றதாக சசிகுமார் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். சசிக்குமாரிடம் இருந்து 13 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டது.
கொலை நடந்த இடத்தை அடையாளம் காட்ட போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்ட சசிகுமாரை , காவல் நிலையம் அழைத்து வந்த போது, மகேஸ்வரியின் கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவனை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று கூறிய உறவினர்கள், அவர்களையும் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மகேஸ்வரியின் உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர். தங்க நகையின் விலை லட்சத்தை நெருங்கிய நிலையில், நகைகளுடன் தனியாக வெளியே செல்லும் பெண்கள் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu