முகப்பு
பிரதமர் மோடி அமல்படுத்திய புதிய தொழிலாளர் சட்டங்கள்..! 40 கோடி பேருக்கு என்ன நன்மை?
Nov 22, 2025 04:25 PM
73
பிரதமர் மோடி அமல்படுத்திய புதிய தொழிலாளர் சட்டங்கள்..! 40 கோடி பேருக்கு என்ன நன்மை?
பல ஆண்டுகளாக இருந்த 29 பழைய சட்டங்களுக்குப் பதிலாக, பிரதமர் மோடியின் நடவடிக்கையால், நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள், நவம்பர் 21 ஆம் முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த புதிய சட்டங்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் முதல் ஆன்லைன் செயலிகள் மூலம் வேலை செய்பவர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கியது.
சம்பளம் எப்படி கொடுக்கப்பட வேண்டும், தொழிலாளர்களை எப்படி பாதுகாக்க வேண்டும், நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இந்த சட்டங்கள் மாற்றியமைக்கின்றன.
இந்த புதிய சட்டங்கள், gig எனப்படும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் platform தொழிலாளர்களை முதன்முறையாக சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன.
இனி, அனைத்து ஊழியர்களுக்கும் நியமனக் கடிதங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒரு குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துகின்றன.
மேலும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் விதிகள் அனைத்து வேலை இடங்களிலும் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெண்களுக்காக, பாதுகாப்பு நிபந்தனைகளுடன் இரவு நேர வேலைகளைச் செய்ய இந்த சட்டங்கள் அனுமதிக்கின்றன.
40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ESIC எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் காப்பீடு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு தொழிலாளி இருந்தாலும், ஆபத்தான தொழிற்சாலைகளும் இதில் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய சட்டங்களை குறித்து கூறும்போது, "சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களை மையமாகக் கொண்ட மிக விரிவான மற்றும் முற்போக்கான சீர்திருத்தங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார். "இது நமது தொழிலாளர்களுக்கு பெரும் அதிகாரத்தை அளிக்கிறது.
மேலும், இது நிறுவனங்களுக்கு சட்ட விதிகளைப் பின்பற்றுவதை எளிதாக்குகிறது மற்றும் 'வணிகம் செய்வதை எளிதாக்குவதை' ஊக்குவிக்கிறது" எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
"அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் சரியான நேரத்தில் சம்பளம், பாதுகாப்பான வேலை இடங்கள் மற்றும் நமது மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளுக்கான ஒரு வலுவான அடித்தளமாக செயல்படும்" என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும், "தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு சூழலை இவை உருவாக்கும்.
இந்த சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும், உற்பத்தித்திறனை உயர்த்தும் மற்றும் 'விக்சித் பாரத்' அதாவது ‘வளர்ந்த இந்தியா‘ என்பதை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, முதல் முறையாக, gig எனப்படும் தற்காலிக பணி', 'பிளாட்ஃபார்ம் வேலை' மற்றும் 'அக்ரிகேட்டர்கள்’ எனப்படும் தொகுப்பாளர் பணி ஆகியவை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட கால ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட universal account numbers அதாவது உலகளாவிய கணக்கு எண்கள் மாநிலங்களுக்கு இடையேயும் சமூகப் பாதுகாப்பு நன்மைகளை எடுத்துச் செல்லும்.
இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மின்னணு ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், டப்பிங் கலைஞர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் டிஜிட்டல் மற்றும் ஆடியோ விஷுவல் துறைகளில் உள்ள மற்றவர்களும் இந்த சட்டங்களின் கீழ் வருவார்கள்.
இந்த புதிய சட்டங்கள், தொழிலாளர்களுக்கு ஒரு புதிய பாதுகாப்பையும், நிறுவனங்களுக்கு எளிதான செயல்பாடுகளையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் நலனுக்கும் ஒரு பெரிய படியாக அமையும் என அரசு கருதுகிறது. குறிப்பாக, அமைப்புசாரா துறையில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
மேலும், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகளையும், பாதுகாப்பான வேலை சூழலையும் இது உறுதி செய்யும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இப்புதிய சட்டம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறும்போது, "அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைப் பாதுகாக்கும், இளைஞர்களுக்கு முறையான நியமனக் கடிதங்களை வழங்கும், பெண்களுக்கு சம ஊதியம், 40 கோடி தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறிப்பிட்ட கால ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு கிராஜுயிட்டி மற்றும் கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் ஆகியவற்றை உறுதி செய்யும்" என கூறியதோடு "இந்த சீர்திருத்தங்கள் சாதாரண மாற்றங்கள் அல்ல, மாறாக பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்களின் நலனுக்காக எடுத்த ஒரு பெரிய நடவடிக்கை.
இந்த புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் சுயசார்பு இந்தியா நோக்கிய ஒரு முக்கியமான படியாகும், மேலும் 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய புதிய உத்வேகத்தை அளிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu