தமிழ்நாடு
சாதி பலத்தை காட்டுவதற்காக சிறையில் திட்டம் தீட்டி அட்டூழியம் யார் இந்த கொலைகார கொடூரர்கள் ?
Mar 04, 2026 07:24 AM
39
சாதி பலத்தை காட்டுவதற்காக சிறையில் திட்டம் தீட்டி அட்டூழியம் யார் இந்த கொலைகார கொடூரர்கள் ?
நாங்குநேரி அருகே இரவில் பெட்ரோல் குண்டு வீசி ஊர் ஊராக சென்று தாக்குதல் நடத்திய கொலை வெறிக்கும்பலை சிறையில் இருந்தபடியே ரவுடி ஒருவன் இயக்கியதாக தகவல் வெளியான நிலையில் , தனக்கு சம்பந்தமில்லை என்று மற்றொரு ரவுடி வீடியோ வெளியிட்டுள்ளான். சாதி பலத்தை காட்டுவதற்காக கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டி வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது
நாங்குநேரி அடுத்த பெரும்பத்து, கடம்போடு வாழ்வு, புளியங்குளம் ஆகிய 3 கிராமத்திற்குள் பைக் மற்றும் காரில் சென்று பெட்ரோல் குண்டு வீசி கண்ணில் பட்டவர்களை எல்லாம் தலையில் சரமாரியாக வெட்டி வீசிய முகமூடி கும்பலின் கொலை வெறி ஆட்டத்தால் இருவர் கொல்லப்பட்டனர். 7 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதலில் கடம்போடு வாழ்வு என்ற கிராமத்தில் இரவு 7;30 மணிக்கு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரை மறித்து வெட்டியகும்பல், அங்கிருந்து பெரும்பத்து கிராமத்திற்குள் நுழைந்து அங்குள்ள டீக்கடையின் மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்கினர். அங்கிருந்து அச்சத்தில் அலறியடித்து ஓடியவர்களை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளது அந்த கும்பல்
இதில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவரும், வடமாநில தொழிலாளியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி ஆகியோரும் படுகாயமடைந்தனர். அடுத்ததாக அருகிலுள்ள புளியங்குளம் கிராமத்துக்குச் சென்று நடத்திய தாக்குதலில் சசிகுமார் மற்றும் வீராங்குளத்தை சேர்ந்த கணேசன் ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர்.
ஒரு மணி நேரத்திற்குள் மூன்று கிராமங்களில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய கும்பல் “நவீன் வாழ்க... நவீன் வாழ்க” என பிரபல ரவுடி நவீனுக்கு ஆதரவாக கோஷமிட்டு சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கொலைவெறிக் கும்பல் முகமூடி அணிந்திருந்த நிலையில் எதற்காக ரவுடி நவீனின் பெயரை குறிப்பிட்டு சென்றனர் என்று போலீசார் விசாரித்தனர்.
இதற்கிடையே போலீசாரிடம் சிக்கிய 3 பேர் மூலம் கொலைவெறியாட்டத்தின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. நெல்லையில் தீபக்ராஜா கொலையில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி லெப்ட் முருகன் என்பவன் போட்டுக் கொடுத்த ஸ்கெட்சின் படி , தங்கள் சாதியின் பலத்தை காட்டுவதற்காக, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த கொடூர கொலைகளை செய்ததாக தெரியவந்தது. தீபக்ராஜா கொலை சம்பவத்துக்கு பின்னர் தங்கள் சாதியில் யார் பெரியவர் என்று ரவுடிகளான நவீனுக்கும், லெப்ட் முருகனுக்கும் இடையே போட்டி உருவாகி உள்ளது. பிணையில் வெளிவந்துள்ள நவீனை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கொலையாளிகளை நவீன் வாழ்க என்று கோஷமிட வைத்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் 8 வருடங்களுக்கு முன்பு பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் காமராஜ் என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சிக்கு பழிக்கு பழியாக மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பழிக்கு பழிவாங்கவும் சுற்றி உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் சாதியினரை கண்டால் அஞ்சி நடுங்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தாக்குதலுக்கு லெப்ட் முருகன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக சொல்லப்படுகின்றது. இதுவரை 7 பேரை கைது செய்துள்ள போலீசார்.பின்னணியில் உள்ள மற்றவர்களை தேடிவருகின்றனர்.
இதற்கிடையே செவ்வாய்கிழமை காலை இந்த படுகொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட சென்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் ஆவேசமான பெண்கள் போலீசாருடம் வாக்குவாதம் செய்தனர்
போலீசாரின் தடுப்பு அரணையும் மீறி சென்று ஏர்வாடி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu