BIG STORIES
மேற்காசியாவில் தொடரும் 'போர்'.. கொ**லப்பட்ட உச்சபட்ச தலைவர்.. தப்புக்கணக்கு போட்டுவிட்டதா ஈரான்..?
Mar 02, 2026 02:46 AM
32
மேற்காசியாவில் தொடரும் 'போர்'.. கொ**லப்பட்ட உச்சபட்ச தலைவர்..
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவமும், இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரானும் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது வீடும், ஈரானிய புரட்சிகர காவல்படையின் தலைமை அலுவலகமும் ஏவுகணை வீசி தரைமட்டமாக்கப்பட்டன.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் அசிஷ் நசீர், ராணுவத் தலைமை அதிகாரி அப்துல் ரஹீம் மொசாவி உள்ளிட்ட 7 முக்கியத் தலைவர்களும், 40 ராணுவ கமாண்டர்களும் கொல்லப்பட்டனர். அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ஈரானியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் 27 ராணுவத் தளங்கள் மீதும், துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, சர்வதேச விமான நிலையம், பாம் (Palm) தீவு உள்ளிட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
ஈரான் தாக்குதலால், மேற்காசியாவில் உள்ள துபாய், தோகா, குவைத் உள்ளிட்ட பல விமான நிலையங்கள் மூடப்பட்டன. எமிரேட்ஸ், எதிஹாட் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள் மேற்காசியாவுக்கான தங்களது விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இதனால், ஏராளமான பயணிகள் விமான சேவை இல்லாமல் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை பதிலுக்குத் தாக்காமல், அண்டை நாடுகளைத் தாக்குவதா என ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல் ஈரானின் தப்புக் கணக்கு என அமீரகம் தெரிவித்துள்ளது. ஈரானின் 165 ஏவுகணைகள், 541 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக அமீரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அதிகாலையில் தொடங்கிய தாக்குதல் 90 நிமிடங்களில் முடிந்துவிட்டதாகவும், சுமார் 500 இலக்குகளைக் குறிவைத்து சூப்பர்சோனிக் போர் விமானங்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஒரு நிமிட தாக்குதல் நேரத்துக்குள் ஈரான் உச்சபட்ச தலைவர் உள்பட ராணுவ கமாண்டர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது மிகவும் கொடூரமான தாக்குதல் எந்த நேரத்திலும் தொடுக்கப்படும் என ஈரானிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது. பதில் தாக்குதலை ஈரான் நிறுத்தவில்லை என்றால், இதுவரை கண்டிராத தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தெரிவித்துள்ளார்.
இழிவான தாக்குதலில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கும், கமேனி கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu