கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
முகப்பு
சசிக்குமாருக்காக காத்திருந்து உயிர் விட்ட மொக்கச்சாமி.. சுப்பிரமணியபுரம் பெரியமனுஷன்..!
Jun 05, 2025 01:15 PM
65
சில்லறைத்தனமான சேட்டைகள், நட்பு, காதல், நம்பிக்கை, அந்த நம்பிக்கையின் நன்றியுணர்ச்சியால் அவர்கள் குற்றத்தில் வீழ்வது, அவர்களது பிரிவு, துரோகம், அஸ்தமனம் என தமிழ் சினிமாவில் ஒரு புதிய ட்ராக்கை உருவாக்கிய படம்தான் சுப்பிரமணியபுரம். சசிகுமார் இயக்கி, ஜெய்யுடன் நடித்து, 2008 வெளியான இந்த படம், இப்போதும் தமிழ்சினிமாவில் மறக்கமுடியாத திரைக்கதையைக் கொண்ட படம்.
ஒவ்வொரு காட்சிகளையுமே மிக நேர்த்தியாக செதுக்கியிருப்பார், இயக்குநர் சசிகுமார். இப்படத்தில், பல சுவாரஸ்யமான காட்சிகளையும் கதாப்பாத்திரங்களையும் கூறினாலும் ‘மொக்கச்சாமி’ கதாப்பாத்திரம்தான் படத்தின், சீரியஸ் வேட்டைக்கு நடுவே, சிரிக்கவைத்து ரசிகர்களை ஆற்றுப்படுத்தக் கூடிய கதாப்பாத்திரம்.
அதுவும், மொக்கச்சாமி என்பதற்கு பதில், “ஏம்பா சுத்தபத்தமா தான இருக்க?” என்றால் உடனே நினைவுக்கு வந்துவிடும் கதாப்பாத்திரம் அது. அதுவும் “ஏ ராசாத்தி தண்ணி கொண்டுவா... சுத்தபத்தமாதான இருக்கு?” என அவரும் ராசாத்தியும் அடுத்தடுத்து பேசும் வசனங்களும்...அதனைத் தொடர்ந்து சேட்டைக்கார இளைஞர்கள், அவரை உள்ளே வைத்து கதவைப் பூட்டிவிட, பின்பக்கம் வழியாக சாக்கடையில் விழுந்து ஓடிவரும் காட்சிகள் எல்லாம், திரையரங்கையே சிரிப்பால் ஆர்ப்பரிக்கவைத்த காட்சிகள்.
அதுவும், “தோட்டம் கொண்ட ராசாவே...” பாடல் ஊர்த்திருவிழா ரேடியோ செட்டில் ஒலிக்க, அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள், செம்ம அலப்பறை. சுப்பிரமணியபுரம் பட மாபெரும் ஹிட்டுக்குப் பிறகு, எங்கு பார்த்தாலும் “சுத்தபத்தமா தான இருக்க?” என கிராமப்புறங்களில் கிண்டலடிக்கும் அளவுக்கு பிரபலமானது, இந்த மொக்கச்சாமி கதாப்பாத்திரம். இவரது உண்மையான பெயர், முருகன். அதுவும், இலைக்கடை முருகன் என்றால் இவரை ஆரம்பத்தில் அப்பகுதியில் தெரியும்.
மதுரை மாநகர் மூன்றுமாவடியை அடுத்த தமிழ்நகர் பகுதியில் வசித்துந்த இலைக்கடை முருகன், சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் இலை கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு, ஐந்து மகள்கள் உள்ளனர். இவரது, அப்பா முத்தையா நாடகக் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். அவரது, ஏழாவது மகன் தான் இந்த இலைக்கடை முருகன் .
நடிகரும் இயக்குநருமான சசிகுமாருடன் ஏற்பட்ட பழக்கத்தில், இவரது பேச்சு மற்றும் நடிப்பைப் பார்த்து ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், இவருக்கு நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார், சசிகுமார்.
சுப்பிரமணியபுரம் படத்தில் மொக்கசாமி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர், இலைக்கடை முருகன். இதனைத் தொடர்ந்து கொம்பன், வேலாயுதம், தோரணை உள்ளிட்ட படங்களிலும் ‘மலையாளி’ என்ற மலையாள திரைப்படம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தது குறித்து, ஏற்கனவே ஊடகங்களுக்கு பேட்டியளித்த இலைக்கடை முருகன், “அந்த படத்தில் நடித்த ராசாத்தியுடம் தொடர்பில்தான் இருக்கிறேன். நட்பாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என ஜாலியாக கூறியுள்ளார். மேலும், அந்த சுப்பிரமணியபுரம் படத்தில் மொக்கச்சாமி கதாப்பாத்திரத்தில் நடித்ததால், படம் பார்த்துவிட்டு வந்தபிறகு, தனது மனைவி இரண்டு நாட்கள் மெளனமாக அதாவது கோபமாக இருந்ததாகவும் “ஏய் சினிமாடி... விடுறி...ஏண்டி இப்படி இருக்க?” என சமாளித்து சமாதானப் படுத்தியதாகவும் சிரித்துகொண்டே கூறியுள்ளார், இலைக்கடை முருகன்.
மேலும், சத்தியம் தியேட்டரில் 100 வது நாள் பட விழாவுக்கு வரச்சொல்லியுள்ளார் சசிக்குமார். அப்போது ஷீல்டு கொடுத்துள்ளார். கரு பழனியப்பன், கெளதம் வாசுதேவ் மேனன், அமீர் எல்லோரும் இருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டிய இலைக்கடை முருகன், “ எனக்கு குருநாதர் சசிகுமார்தான். ஷீல்டு வாங்கும்போது சசிகிட்டப் போயி காலை தொட்டுட்டேன். தம்பி... அங்கிட்டு போயி நின்னுட்டார். ‘என்னண்ணே நீங்க எவ்ளோ பெரிய வயசுக்காரரு. என்னைய வந்து இப்படி காலில் விழலாமா?’ என கேட்டார். ‘எனக்கு குருநாதர் நீதனப்பா...உன்கிட்ட மரியாதை செய்யுறதுல தப்பில்லையே?’ அப்படின்னேன்.
அதற்குப்பிறகு, இன்னைக்குவரைக்கும் கூப்பிடல. அவர் என்னைக்காவது கூப்பிடுவார்ன்னு இருக்கேன். நானும் அந்தம்மாவும் சேர்ந்து நடிச்சா அந்த படம் நல்லாருக்கும்” என தனது எதிர்பார்ப்பையும் ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார், இலைக்கடை முருகன். ஆனால், கடைசிவரை அவரது ஆசை நிறைவேற வில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.
இந்தநிலையில்தான், சிறிது நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். ஜூன் 4 ஆம் தேதி காலை நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார், இலைக்கடை முருகன். அவர், இறந்தாலும், அவர் நடித்த கதாப்பாத்திரமான மொக்கச்சாமி நகைச்சுவை கதாப்பாத்திரம், ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உயிர்ப்போடுதான் இருக்கும்!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu