முகப்பு
நீதிபதியின் காட்டமான உத்தரவு கண்டு கொள்ளா காவல்துறை தீபம் ஏற்ற தடுப்பதன் பின்னணி..!
Dec 05, 2025 01:49 AM
5
வெல்லபோவது யார் ? நீதிபதியா ? காவல்துறையா ? தீபம் ஏற்றும் விவகாரம்.. தீர்ப்புகளை ஏற்க மறுப்பது ஏன் ?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பாரென உத்தரவிட்டனர். இதனையடுத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி தெரிவித்தார். தீபம் ஏற்றவது உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், அதை கருத்தில் கொண்டு வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் காணொளி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும் என்பதற்காகவே கோவில் செயல் அலுவலர் ஆஜராக உத்தரவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரையும், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனையும் காணொளி வாயிலாக ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, ஒரு கட்டத்தில் சீருடையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றார்.
இதையடுத்து மாலை 5.30 மணிக்குள் காவல் ஆணையர் லோகநாதன், சீருடையுடன் காணொளியில் ஆஜரானார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா? என அவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டார். பேரிகார்டுகளை அமைத்து மாலை 3.30 மணி முதல் நடவடிக்கை எடுத்த தாகவும், கூட்டம் அதிகமாகி பிரச்சனை எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்ததாகவும் காவல் ஆணையர் லோகநாதன் விளக்கம் அளித்தார்.
எந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு 144 தடை உத்தரவு தொடர்பாக பரிந்துரை அனுப்பினீர்கள் என காவல் ஆணையரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். சுமார் மாலை 5.45 மணியளவில் 144 தடை உத்தரவு தொடர்பாக பரிந்துரை அனுப்பியதாகவும், இதன் பேரில் மாலை 6.10 மணி அளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டதாகவும் கூறிய காவல் ஆணையர், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது, மதிக்கக்கூடாது என்பது காவல்துறையின் நோக்கம் அல்ல என்றும், பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.
இதனை அடுத்து தமது உத்தரவுகளை வாசித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் 144 தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இரவு 10:30 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், மனுதாரர் உள்ளிட்ட சிலர் மட்டும் தீபம் ஏற்றலாம் என்றும், அவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் மதுரை காவல் ஆணையர் லோகநாதன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் நீதிபதி உத்தரவிட்ட படி தீபம் ஏற்ற சென்றவர்களை 2 வது நாளாக மீண்டும் தடுத்து நிறுத்தியது தமிழக காவல்துறை. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பதாக கூறிய காவல்துறையினர் தீபம் ஏற்ற செல்லகூடாது என்று தடுத்ததோடு, 144 தடை உத்தரவு இருப்பதாக கூறி கலைந்து போகச்சொல்லி எச்சரித்தனர்.
சாமானிய மக்களிடம் நீதிமன்ற உத்தரவு எனகூறி மேல் முறையீடு செய்யகூட அவகாசம் தராமல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழக காவல்துறையினரின் வழக்கம், ஆனால் நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் தீபம் ஏற்ற கூறிய உத்தரவை மட்டும் நிறைவேற்றக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறி பா.ஜ.கவினர் வாக்குவாதம் செய்தனர்
ஒரு கட்டத்தில் குற்றஞ்சாட்டிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 2014 ஆம் ஆண்டு இதே போன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் , தற்போது உள்ள முறையே தொடர வேண்டும் என்று அப்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும், அதனையே தாங்கள் ஏற்பதாகவும் தெரிவித்தார்.
தீபம் ஏற்றப்படுமா ? இல்லையா ? என்ற நிலை மாறி , இந்த விவகாரத்தில் நீதிபதிகளின் உத்தரவு நிறைவேற்றப்படுமா ? அல்லது தமிழக காவல்துறையினரின் பிடிவாதம் வெல்லுமா ? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. வீண் வாதத்தில் செய்தாலும்... பிடிவாதத்தால் செய்தாலும்... குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu