BIG STORIES
வில்லா வில்லன்கள்.. ரூ 1.5 கோடிக்கு வாங்கினோம்.. தண்ணீரில் தவிக்கிறோம்..! குடியிருப்பு வாசிகள் வேதனை
Dec 05, 2025 04:17 PM
17
வில்லா வில்லன்கள்.. ரூ 1.5 கோடிக்கு வாங்கினோம்.. தண்ணீரில் தவிக்கிறோம்..! குடியிருப்பு வாசிகள் வேதனை
திருப்போரூர் அருகே மாம்பாக்கத்தில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய வில்லா வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்ல இயலவில்லை என்று குடியிருப்பு வாசிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னைக்கு மிக அருகில் என்று .... செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில், s&p தி அட்ரஸ் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் கட்டி விற்ற வில்லா வீடுகளை வாங்கிய குடியிருப்புவாசிகளின் ஆதங்க குரல் தான் இது..!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியில் எஸ் & பி தி அட்ரஸ் எனும் தனியார் குடியிருப்பு கட்டுமான நிறுவனம் 18 ஏக்கர் நிலப்பரப்பில் 390 தனி தனி வீடுகள் கட்டி விற்று வருகிறது. இங்குள்ள ஒவ்வொரு வில்லா வீடும் ஒன்றரை கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை விற்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதில் 150 வீடுகள் விற்பனையாகி அதில் வீடுகளை வாங்கியவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வருகின்றனர், தற்போது பெய்த மழையின் காரணமாகவும் அருகில் உள்ள மாம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியாகும் உபரி நீரினாலும் நீரானது வீடுகளை சூழ்ந்தது. சுற்றிலும் புதிய கட்டுமானங்கள் வந்ததால் மழை நீர் வடிய வசதி இல்லாமல் போனதால் செய்வதறியாது திகைத்த குயிருப்புவாசிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் குடியிருப்பு வாசிகள் கடந்த 4 நாட்களாக வெளியே செல்ல முடியாமலும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்
இது சம்பந்தமாக கட்டுமான உரிமையாளர்களிடம் பல முறை சொல்லியும் செவி சாய்க்கவில்லை என குமுறலை வெளியிட்ட குடியிருப்பு வாசிகள் , வீடுகளை விற்பனை செய்யும் போது இங்கு முறையான சாலை வசதி, கிளப் ஹவுஸ், பூங்கா, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மழைநீர் வடிகால்வாய் என அனைத்து வசதிகளும் உள்ளது என ஏமாற்றி விற்றுவிட்டதாக தெரிவித்தனர்
மழை நீரில் கழிவு நீர் கலப்பதால் வீட்டில் உள்ள குழாய்களில் கழிவு நீர் வருவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவித்தனர், எனவே தமிழக அரசு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு , உடனடியாக மழை நீர் வடிகால் வாய் அமைத்து தர கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
கோடிகளை கொட்டி புதிய வீடுகளை வாங்குவோர் , நாம் குடியிருக்க போகும் இடம் ஏரியாவா ? அல்லது ஏரியின் நீர்வழிப்பாதையா ? என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu