BIG STORIES
காதலிச்சு கைவிடுவியா..? மருத்துவரின் மனைவிக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் ஊசி..! ஆட்டோவில் நர்சு விபரீத சம்பவம்
Jan 27, 2026 03:44 AM
41
மருத்துவரின் மனைவிக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் ஊசி
காதலித்து ஏமாற்றிய மருத்துவரை பழிவாங்குவதற்காக நர்சு ஒருவர் , எச்.ஐ.வி நோயாளியின் ரத்ததை ஊசி மூலம் மருத்துவரின் புது மனைவிக்கு ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நர்சு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் கருணாகர். தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அரசு மருத்துவமனையில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 9 ஆம் தேதி மதியம் கருணாகரின் மனைவி பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்ற போது மர்ம நபரின் பைக் ஒன்று அவர் மீது மோதியது. கீழே விழுந்ததால் கருணாகரின் மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அப்போது அங்கு ஆட்டோவில் வந்த பெண் ஒருவர் கருணாகரின் மனைவிக்கு உதவி செய்வது போல ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். சிராய்ப்பு காயங்களுடன் ஆட்டோவுக்குள் அமர்ந்து இருந்த கருணாகரின் மனைவிக்கு ஆட்டோவில் இருந்த பெண் திடீரென்று எதிர்பாராத நேரத்தில் வலியை போக்க ஊசி போடுவதாக கூறி ஊசி மருந்து ஒன்றை செலுத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாகரின் மனைவி, யார் நீங்கள்? என்ன ஊசி செலுத்தினீர்கள்? என்று கேட்டதால் அந்த பெண்ணும் அவருடன் வந்த இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் தனது கணவர் டாக்டர் கருணாகருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கருணாகர் கர்னூல் மூன்றாவது நகர காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை புகாராக தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகள் மூலம் அந்த பகுதியில் சுற்றி திரிந்த நர்சு வசுந்தரா ,ஜோதி, ஜஸ்வந்த், ஸ்ருதி, ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்ததில் மருத்துவர் கருணாகரை பழிவாங்க அவரது மனைவிக்கு எச்.ஐ.வி. நோயாளி ஒருவரின் ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியது தெரியவந்தது. இதற்காண காரணம் குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
ஆரம்பத்தில் மருத்துவர் கருணாகர் , மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த வசுந்துராவை காதலித்து வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு இருவரும் சென்று வந்த நிலையில் திருமணம் என்று வந்தவுடன் நர்சு வசுந்தராவுடனான காதலை கைவிட்ட கருணாகர் மருத்துவமனையில் உதவி பேராசிரியையாக உள்ள பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது வசுந்துராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது . தன்னை காதலித்து ஏமாற்றிய கருணாகருக்கும் அவரது மனைவிக்கு எய்ட்ஸ் நோயை பரப்ப திட்டமிட்டுள்ளார்.
அதன்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.ஐ.வி பாசிட்டிவ் நோயாளி ஒருவரிடம் மருத்துவ பரிசோதனைக்கு என்று வேறு ஒரு நர்சு மூலம் ரத்தம் எடுத்துள்ளார் வசுந்துரா அதனை வீட்டில் உள்ள பிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. அதன் படி சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய கருணாகரின் மனைவியை பைக்கில் பின் தொடர்ந்து சென்று ஜஸ்வந்த் அவரை இடித்து கீழே தள்ளியுள்ளான்.
அப்போது அங்கு ஆட்டோவில் ஊசியுடன் தயாராக இருந்த வசுந்தரா, கருணாகரின் மனைவிக்கு உதவுவது போல நடித்து அவரை தூக்கி ஆட்டோவில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தி உள்ளார். அப்போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட வலி குறையும் என்று கூறி எச்.ஐ.வி நோயாளியின் ரத்ததை , ஊசி மூலம் கருணாகரின் மனைவிக்கு வசுந்த்ரா செலுத்தியது தெரியவந்ததாகவும், மருத்துவர் என்பதால் தனக்கு செலுத்தப்பட்ட ஊசி குறித்து சந்தேகம் எழுப்பியதால் இவர்களின் சதி அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து நர்சு வசுந்தரா, ஜோதி, ஜஸ்வந்த், ஸ்ருதி, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். எச்.ஐ.வி நோயாளிகளிடமிருந்து இரத்தத்தை சேகரித்து கொடுத்த நர்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தன்னை காதலித்து கைவிட்ட காதலனை பழிவாங்க நர்சு செய்த இந்த விபரீத செயலால் அந்த இளம் மருத்துவர் எஸ்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானாவில் பெற்றோர் எதிர்ப்பை மீறி இளைஞரை காதலித்த பெண்ணுக்கு பெண்ணின் தந்தையே ஊசி மூலம் எஸ்.ஐ.வி நோயாளியின் ரத்தம் ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ ராஜூ வெட்ஸ் ராம் பாய்” என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடதக்கது.
தமிழ் நாடு அரசு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் சுபாஷ் கூறும் போது, எச்.ஐ.வி பாசிட்டிவ் நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை ப்ரிட்ஜில் வைத்து பதப்படுத்தி, பின்னர் ஊசி மூலம் எந்த நபருக்கு செலுத்தப்படுகின்றதோ அந்த நபருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் தான் ஏற்படும் என்று உறுதிபடுத்தினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu