ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
BIG STORIES
சாலையில் சுற்றி திரிந்த 2 வயது ஆண் குழந்தை.. தாயை கொன்ற தோழி.! நகைக்காக நடந்த கொடூரம்
Nov 08, 2025 04:34 PM
608
நகைக்காக நடந்த கொடூரம்
திண்டிவனம் சாலையோரம் 2 வயது ஆண் குழந்தை ஆதரவற்று சுற்றித்திரிந்த சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பமாக, மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்ற தாயை 4 சவரன் நகைக்காக தோழியே கொலை செய்து கரும்பு காட்டில் வீசிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திண்டிவனம் எஸ்.கே.பி கல்லூரி அருகே சாலையில் ஓரமாக 2 வயது ஆண்குழந்தை ஒன்று அழுது கொண்டே சுற்றிக் கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தில் எவரும் இல்லாத நிலையில் இதனை பார்த்த பெண் ஒருவர் அந்த குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். குழந்தையை வைத்து விசாரணையை முன்னெடுத்த போலீசார், அந்த குழந்தை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் - அம்சா தம்பதியரின் ஆண் குழந்தை என்பதை கண்டுபிடித்தனர்.
கடந்த 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு தனது ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற அம்சா மாயமான நிலையில், தாயுடன் சென்ற இந்த குழந்தை மட்டும் திண்டிவனத்துக்கு எப்படி வந்தது? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர். .
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று இரு சக்கரவாகனத்தில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் அந்த குழந்தையை சாலையோரம் இறக்கி விட்டு செல்வதை கண்டறிந்தனர். அந்த பைக்கை வைத்து இது தனது மனைவி அம்சாவின் தோழி நேத்ராவுடையது என்று அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா மற்றும் அவரது காதலன் கொல்லைகொட்டாய் திருப்பதி ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்சா மாயமான வழக்கு துப்பு துலங்கியது.
15 ந்தேதி திருவண்ணாமலைக்கு பேருந்து மூலம் சென்ற அம்சா, பெரியார் சிலை அருகே இறங்கி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக, அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட் ஓரமாக குழந்தையுடன் நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் காதலன் திருப்பதியுடன் சென்ற நேத்ரா, தனது தோழி அம்சாவை பார்த்துள்ளார். அவரது கழுத்தில் 4 சவரன் தங்க சங்கிலி கிடப்பதை பார்த்ததும் அதனை கொள்ளையடிக்கும் திட்டத்துடன் “வா ஆட்டோவில் ஏறு , மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்” என்று ஏமாற்றி
ஆட்டோவில் ஏற்றியுள்ளார். மருத்துவமனைக்கு செல்லாமல் வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருப்பதியின் வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்சாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையை கொள்ளையடித்ததாகவும், பின்னர் இருவரும் சேர்ந்து அம்சாவின் சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி பள்ளிகொண்டா பட்டு அருகே உள்ள கரும்பு தோப்பில் அம்சாவின் சடலத்தை வீசி விட்டு தப்பி சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே அம்சாவின் 2 வயது ஆண் குழந்தை அழுது கொண்டே இருந்ததால், சம்பவத்தை திசைதிருப்ப குழந்தையை திண்டிவனம் எஸ் கே பி கல்லூரி அருகே சாலையில் ஓரமாக விட்டு சென்றதாக இருவரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர் கரும்புத் தோட்டத்தில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த அம்சாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை கையில் கிடைத்த பின்னர் 20 நாட்களுக்கு மேலாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்ததால் இந்த கொலை குறித்து துப்பு துலங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் , நான்கு சவரன் தங்க நகைக்காக தனது ஊரைச் சேர்ந்த பெண்ணை கடத்தி கொலை செய்து அவர்களது குழந்தையை நெடுஞ்சாலை ஓரம் அனாதையாக தவிக்க விட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்க நகைகள் அணிந்து தனியாக வெளியே செல்லும் பெண்கள் , அறிமுகமான நபர்களிடம் கூட உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் காவல்துறையினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu