BIG STORIES
''வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது'' அன்புமணி மீது ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு
May 30, 2025 01:51 AM
241
''வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது'' அன்புமணி மீது ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு
பா.ம.க.வின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல்வேறு தவறுகளை செய்யும் அன்புமணி, தனது தாய் மீது கூட ஆத்திரத்தில் பாட்டிலை தூக்கி வீசியதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க அன்புமணியும், அவரது மனைவியும் தனது கால்களை பிடித்து கதறி அழுததாகவும் ராமதாஸ் பகிரங்கமாக கூறினார்...
புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, கட்சியில் முகுந்தன் சேர்ந்து 4 மாதங்கள்தான் ஆகிறது, அதற்குள் இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? எனக்கேட்டு ஆவேசத்தில் மைக்கை கீழே போட்டுவிட்டு சென்றார்.
அந்த சம்பவம் முதலே கட்சியில் இருவருக்கும் இடையே சலசலப்புகள் நிலவி வந்த நிலையில் அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், தாமே அப்பொறுப்பில் செயல்படுவேன் என்றும் ராமதாஸ் அறிவித்தார். இதனை மறுத்த அன்புமணி தாமே கட்சியின் தலைவர் என திட்டவட்டமாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தருமபுரியில் பேசிய அன்புமணி தான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவி நீக்கம்? என கட்சிக்காரர்களையும் மக்களையும் திசைதிருப்பும் வகையில் கேட்டதாகவும்,தவறுகளை மறைத்து அன்புமணி அனுதாபம் பெற முயற்சித்தித்தாகவும் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி பொதுக்குழுவில் அன்புமணியின் செயல் ஏற்க முடியாதது என்றும் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் ராமதாஸ் கூறினார். மேடையில் அமர்ந்து கால்களை ஆட்டிக் கொண்டிருந்த அன்புமணி, தன் தலை மீது மைக்கை போடாதது தான் குறை என்றும் விமர்சித்தார்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளை அன்புமணி மரியாதை குறைவாகவே நடத்தி வந்ததாக விமர்சித்த ராமதாஸ், மறைந்த காடுவெட்டி குருவைகூட அவர் உரிய மரியாதையுடன் நடத்தவில்லை என்றார்.
இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து முகுந்தன் விவகாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது உன் 2வது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியிடம் அவரது தாயார் கேட்டதாகவும், அப்போது அவர் மீது அன்புமணி பாட்டிலை தூக்கி வீசியதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
2024 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேண்டும் என தாம் கூறிய நிலையில், அன்புமணி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றதாக அவர் தெரிவித்தார். இயற்கையான கூட்டணியான அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் சேர்ந்து போட்டியிருந்தால் பா.ம.க. 3 இடங்களிலும், அ.தி.மு.க. 6, 7 இடங்களிலும் வென்றிருக்கும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமியிடம் பேசி கூட்டணியை தாம் உறுதி செய்திருந்த நிலையில், அன்புமணியும், சௌமியாவும் திடீரென தைலாபுரம் வந்து பா.ஜ.க. கூட்டணிதான் வேண்டும் எனக்கேட்டு ஆளுக்கொரு காலைப் பிடித்து அழுததாகவும் ராமதாஸ் கூறினார். பா.ஜ.க. கூட்டணி வேண்டாம் என்றால் தாம் கொள்ளி போட வேண்டும் என அன்புமணி கூறியதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.
தேவைப்பட்டால் தன்னால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டு நீக்க முடியும் என்றும் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக, கட்சி விவகாரம் தொடர்பாக தொண்டர் எழுதிய கடிதத்தை ராமதாஸ் உத்தரவின்பேரில் பதற்றத்துடன் தடுமாறியபடி படித்த நிர்வாகி ஒருவர் திடீரென தன்னால் அதனை முழுவதும் படிக்க முடியாது எனக்கூறி கடிதத்தை ராமதாஸ் அருகே வைத்துவிட்டு நகர்ந்தார்.
மகன் அன்புமணியுடன் கட்சியில் சலசலப்புகள் நிலவி வரும் சூழலில், திடீரென செய்தியாளர்களை கூட்டி சரமாரி குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சோழிங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பா.ம.க. நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க உள்ளதாகவும், அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu