முகப்பு
புஷ்பானா அல்லு அர்ஜுன்னு நினைச்சியா? மிளகாய் பொடி வெங்கடேசன் டா; அமித்ஷாவை சந்தித்தும் கைதான கிரைம் ஹிஸ்ட்ரி!
Jun 17, 2025 01:23 PM
146
கொலைமிரட்டல், கடத்தல், கட்டப்பஞ்சாயத்து வெங்கடேசன்... அமித்ஷாவை சந்தித்தும் கைதான கிரைம் ஹிஸ்ட்ரி!
புஷ்பா பட பாணியில் செம்மரக்கடத்தல்... தொழில் அதிபரை துப்பாக்கியை காட்டி மிரட்டல்... ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் செம்மரம் கடத்தியதாகவும் அதிகாரிகளை தாக்கியதாக காத்திருக்கும் 53 வழக்குகள்... ஆந்திராவில் மட்டுமே 40 வழக்குகள்... ஆந்திர போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி என இண்டர்நேஷனல் தாதாவான மிளகாய் பொடி வெங்கடேசன் கைதுதான், தற்போது நிழலுலக தாதாக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த மிளகாய் வெங்கடேசன்? எதனால் கைதுசெய்யப்பட்டார்? இவரது, குற்றப்பின்னணி என்ன? என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த கிரைம் செய்தி தொகுப்பு...
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் என்கிற கே.ஆர்.வெங்கடேஷ். இவர் மீது, ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்குகள் மட்டுமல்ல, ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.
தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளாரா எனவும் தேர்தல் பறக்கும் படை சோதனைகள் நடத்தப்பட்டு இருந்தது. இவர், பாஜக OBC அணியின் மாநிலச் செயலாளராக பதவி வகிப்பார். திடீரென, கைதாகி சிறைக்கு செல்லும்போது பதவியிலிருந்து நீக்கப்படுவார். பிறகு, மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார். இப்போது, மீண்டும் கைதாகியிருக்கிறார். அதனால், தற்போது மீண்டும் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதற்கான பின்னணி இதுதான்...சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் தீபன் சக்ரவர்த்தி. இவர், நுங்கம்பாக்கம் பேனசோனிக் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், பாடியநல்லூரைச் சேர்ந்த கணபதிலால் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல்ஸ் கடைக்கு, சுமார் 48 லட்ச ரூபாய் மதிப்பில் பொருட்களை சப்ளை செய்தததாகவும் அதற்கான தொகையை கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதேபோல், சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த கோகுலவாசன் என்பவரும் சுமார் 50 லட்ச ரூபாய்க்கு கணபதிலால் கடைக்கு பொருட்களை சப்ளை செய்ததாகவும் அவருக்கும் அதற்கான தொகையை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இருவருக்குமே கணபதிலால் பொருட்களுக்கான பணம் கொடுக்காத நிலையில், கோகுலவாசன், தீபன் சக்ரவர்த்தியை அழைத்துக் கொண்டு பாடியநல்லூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான மிளகாய் பொடி வெங்கடேசனிடம் சென்றுள்ளார்.
அப்போது, கணபதிலாலிடமிருந்து பணத்தை பெற்றுத்தர, கமிஷனாக கோகுலவவாசனிடம் ருபாய் 8 லட்சமும், தீபன் சக்கரவர்த்தியிடம் ரூபாய் 12 லட்சமும் கேட்டுள்ளார் மிளகாய் மொடி வெங்கடேசன். அதற்காக, தலா ரூபாய் 1 லட்சம் என இருவரும் அட்வான்ஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், கணபதிலாலிடமிருந்து பணத்தைத் திருப்பி வாங்கி தராததால் அதுகுறித்து கேட்டுள்ளார், தீபன் சக்கரவர்த்தி. இந்த நிலையில்தான், தீபன் சக்ரவர்த்தியை பாஜக நிர்வாகிகள் வெங்கடேஷ் உட்பட மூவரும் சேர்ந்து கொலைமிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, தீபன் சக்ரவர்த்தி செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரும் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த வாரம் மதுரை வந்தார். அவரை சந்திக்க பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் லிஸ்ட் போட்டுக்கொண்டிருந்தனர். மதுரை அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் இந்த முடிவுகளை மீறி, அமித்ஷாவை வரவேற்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றார், வெங்கடேசன். இதனைப் பயன்படுத்திக்கொண்டு மிளகாய் பொடி வெங்கடேசன், அமித்ஷாவை சால்வை கொடுத்து வரவேற்றது, பா.ஜ.கவில் நெடியை வீச வைத்தது.
அந்த சந்திப்பு புகைப்படத்தை, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட மிளகாய் பொடி வெங்கடேசன்,தமிழ்நாடு காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலங்கானா காவல்துறை என பலரையும் தனது பதிவில் Tag செய்தது சர்ச்சை ஏற்படுத்தியது. அதாவது, தனது மீதான குற்றப்புகார்களை விசாரிக்கும் போலீஸாரை தான் யார் என்று தெரிகிறதா? என்னை நெருங்கமுடியாது என மிரட்டியதாக கூறப்பட்டது.
இந்தநிலையில்தான், தீபன் சக்கரவர்த்தி கொடுத்த கொலை மிரட்டல் புகாரின் பேரில், செங்குன்றம் போலீசார் 4 பிரிவுகளில்கீழ் வழக்குப் பதிவு செய்து, பணம் கொடுக்கல் வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த புகாரில் பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் மிளகாய் பொடி வெங்கடேசன், பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட 45 வயது கணபதிலால், 42 வயது கோகுலவாசன் என மூவரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கலில், கட்டப்பஞ்சாயத்து செய்த பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது, சர்ச்சையை தொடர்ந்து மிளகாய் பொடி வெங்கடேசனை பா.ஜ.,வில் இருந்து நீக்கி, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu