முகப்பு
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை வெளியான அதிர்ச்சி பின்னணி..!
Jun 17, 2025 01:17 PM
196
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை.. காந்தியின் புகழை பயன்படுத்தி மோசடி செய்தது அம்பலம்..!
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்னாப்பிரிக்க நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்..
அகிம்சை வழியே சுதந்திர தீயை மூட்டிய மகாத்மா காந்தி அவர்களுக்கு, இந்தியா மட்டுமின்றி, உலக அளவிலும் அவரது புகழ் போற்றப்பட்டுவருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து ஓர் ஆண்டுகாலம் இருந்த காந்தி, பின் சுட்டுக்கொல்லப்பட்டார். மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் இன்னும் மனித உரிமை ஆர்வலர்களாக பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் காந்தியின் கொள்ளு பேத்தியான ஆசிஷ் லதா ராம்கோபின் என்பவர் தற்போது பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
56 வயதான ஆசிஷ் லதா ராம்கோபின், தென் ஆப்பிரிக்காவில் அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இவர் அரசியல், சமூக பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருவதோடு, அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவர் கடந்த 2015ஆம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவரை அண்மையில் ஆசிஷ் லதா சந்தித்துள்ளார். மகாராஜ் ஆடைகள், காலணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களுக்கும் கடன்களும் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகாராஜை சந்தித்த காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா, தனக்கு 6 மில்லியன் ரேண்ட் அதாவது இந்திய மதிப்பில் 3.22 கோடி ருபாய் பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு துணிகள் விநியோகம் செய்ய இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை நிரூபிக்க ஏற்கனவே செய்து வைத்திருந்த போலி ஆவணங்களையும், காட்டியுள்ளார். முதலில் ஆசிஷ் லதா கூறியவற்றை சந்தேகத்துடன் அனுகிய மகாராஜ், பின்னர், அவர் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால், அவரை நம்பி மகாராஜ் 6 மில்லியன் ரேண்ட் பணம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து பல நாட்கள் கடந்தும் வாங்கிய பணத்தை ஆசிஷ் லதா திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஆசிஷ் லதா கொடுத்த ஆவணங்களும் போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஜ், ஆசிஷ் லதா மீது பண மோசடி வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம், பண மோசடி செய்யப்பட்டது உறுதியானதால் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆசிஷ் லதா தற்போது 50 ஆயிரம் ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
ஆசிஷ் லதாவின் தாய் எலா காந்தி, தென் ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமானவர். இவரது பணிகளை பாராட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றிருக்கும் சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu