முகப்பு
உயிரையே கொடுத்த நண்பனுக்கு பச்சை துரோகம் செய்த நண்பன்; 25 நாட்கள் மண்ணுக்குள் புதைந்த மர்மம்!
May 29, 2025 03:36 PM
221
உயிரையே கொடுத்த நண்பனுக்கு பச்சை துரோகம் செய்த நண்பன்;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் 23 வயது அர்ஜூன். பெயிண்டிங் வேலை செய்துவரும் இவரை கடந்த 25 நாட்களுக்கும் மேலாக காணவில்லை. இதுகுறித்து, ஒசூர் நகர போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பின்னணி வெளிவர ஆரம்பித்தது. ஆனால், யாருக்காக உயிரைவிட்டாரோ அவராலேயே இத்தனை நாட்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்துதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாகுல் அமீது எனபவர் வைத்திருந்த, ரூ.40 ஆயிரம் காணாமல் போனது. இதனால், சாகுல் அமீது தனது நண்பர் சூபி என்பவர் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சினையில், சாகுல் அமீதுவால், சூபி தாக்கப்பட்டார்.
இதுகுறித்து, சூபி தனது நண்பன் அர்ஜூனிடம் கூறி முறையிட்டுள்ளார். இதனால், கோபமடைந்து அர்ஜூன், சாகுல் அமீதுவிடம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அர்ஜூனையும், சாகுல் அமீது தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அர்ஜூன், சாகுல் அமீதைப் பார்த்து “உன்னை கொல்லாமல் விட மாட்டேன்” என ஆத்திரத்தோடு கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால், கோபம் அடைந்த சாகுல் அமீது, கடந்த மே 2 ஆம் தேதி தனது நண்பர்கள் பவன் பிரகாஷ், சைபு ஆகியோருடன் வந்து, அர்ஜூனை ராயக்கோட்டை அவுசிங் போர்டு அருகில் வைத்து, காரில் கடத்தி சென்றுள்ளார். பிறகு, அவரை கொடூரமாக தாக்கி படுகொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடலை சூளகிரி அருகே சின்னாறு பக்கமாக உள்ள காட்டுப்பகுதியில் புதைத்ததும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 25 நாட்கள் கழித்து சாகுல் அமீது, பவன் பிரகாஷ், சைபு ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோதுதான் உண்மை தெரிய ஆரம்பித்துள்ளது. மூவரையும் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். 25 நாட்களாக அர்ஜூனை காணாமல் தேடிவந்த நிலையில், போலீஸார் விசாரணை செய்யும்போது, சூபி வாய் திறக்காமலேயே இருந்து வந்ததாக கூறப்படுவதுதான் துரோகத்தின் உச்சக்கட்டம் என்கிறார்கள், அர்ஜூனின் உறவினர்கள்.
அதாவது, சாகுல் அமீது தன்னை தாக்கியதாக அர்ஜூனிடம் சூபி முறையிட்டதால்தான், நட்புக்காக சாகுல் அமீதுவிடம் சண்டை போட்டுள்ளார், அர்ஜூன். அதனைத் தொடர்ந்துதான், சாகுல் அமீதுவால் அடித்து படுகொலை செய்யப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டுள்ளார், அர்ஜூன்.
எனவே, அர்ஜூன் காணாமல் போனதுமே, சூபிக்கும் சாகுல் அமீதுக்குமான பிரச்சனை, அதனைத் தொடர்ந்து சாகுல் அமீதுவுக்கும் அர்ஜூனுக்குமான பிரச்சனையை போலீஸாரிடம் சூபி கூறியிருந்தாலே இந்தப் படுகொலைப் பின்னணி அப்போதே வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.
ஆனால், வாய் திறக்காமல் இருந்ததால் 25 நாட்கள் மண்ணில் புதைந்து கிடந்திருக்கிறது நட்புக்காக கொலை செய்யப்பட்ட அர்ஜூனின் உடல். எனவே, கொலை பின்னணியை மறைத்த குற்றத்துக்கு சூபியையும் தண்டிக்கவேண்டும் என்கிறார்கள், அர்ஜூனின் உறவினர்கள், ஆதங்கமாக!
கொலையாளிகள், முன்னிலையில் அர்ஜூன் உடலை போலிசார் தோண்டி எடுத்து, உடல்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். 25 நாட்களாக காணாமல் போன அர்ஜூனின் உடலை தோண்டி எடுத்ததைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
மேலும், ரூ 40 ஆயிரம் தொடர்பான பிரச்சனைதானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu