BIG STORIES
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து ரூ 2500 கோடி அப்பார்ட்மெண்ட்... Alliance பில்டர்ஸ் மோசடி..! இப்போ Urbanrise ஆக மாறிட்டாங்க..!
Feb 12, 2026 01:34 AM
40
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து ரூ 2500 கோடி அப்பார்ட்மெண்ட்... Alliance பில்டர்ஸ் மோசடி..!
சென்னை கொரட்டூரில் 15. 75 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து 2500 கோடி மதிப்புடைய 9 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்ற அலையன்ஸ் என்ற கட்டுமான நிருவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த குடியிருப்போர் , கட்டுமான நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை கொரட்டூரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் பிரமாணடமாக கட்டப்பட்ட அலையன்ஸ் நிறுவனத்தின் ஆர்கிட் ஸ்பிரிங்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2036 குடும்பத்தினர் இந்த மெகா மோசடியால் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்..!
கொரட்டூரில் உள்ள 590 மற்றும் 591 ஆகிய சர்வே எண்ணில் உள்ள 15. 75 ஏக்கர் நிலப்பரப்பில் 9 பிளாக்குகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அலையன்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் கட்டியது. இதில் கட்டப்பட்ட 2036 வீடுகளையும் 50 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை விலை வைத்து மொத்தமாக 2500 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏராளமான மக்கள் வங்கிக்கடன் மூலம் இந்த வீடுகளை வாங்கிருந்த நிலையில் இந்த குடியிருப்பு அமைந்துள்ள சர்வே எண் 590 மற்றும் 591 ஆகிய நிலம் மடத்துக்கு சொந்தமானது என்று அண்மையில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.
இதையடுத்து இந்த குடியிருப்பில் வீடு வாங்க கடன் கொடுத்த தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அந்த வீடுகளுக்கான மதிப்பை ஜீரோவாக்கியதுடன் , பணத்தை திரும்ப செலுத்த வீட்டு உரிமையாளர்களை நிர்பந்தித்ததாக கூறப்படுகின்றது. மேலும் அங்கு விற்கப்பட்ட வீடுகளுக்கான பத்திர பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கோடிகளை கொட்டி கிளப் வசதியுடன் கூடிய சொகுசு குடியிருப்புகளை வாங்கியவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த உத்தரவு வந்த பின்னரும் அலையன்ஸ் நிறுவனம் எந்த ஒரு நடவடிகையும் மேற்கொள்ளாத நிலையில் , கோவில் நிலத்தில் 2036 குடியிருப்புகளை கட்டி அலையன்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், அந்த நிறுவனத்திற்கு பல முறை மெயில் அனுப்பியும் அந்த ஒரு பதிலும் இல்லை என்று குற்றஞ்சாட்டிய குடியிருப்போர் தங்கள் உள்ளக்குமுறலை புகாராக தமிழக டிஜிபி அலுவலகத்தில் தெரிவித்தனர்
டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த கையோடு குடியிருப்பு வாசிகள் அலையன்ஸ் நிறுவனத்துக்கு சென்றனர், அதன் பெயர் தற்போது அர்பன்ரைஸ் என்று மாற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு நியாயம் வேண்டும் என்றும் தாங்கள் பெயருக்கு பட்டா வேண்டும் என்றும் கூறி அந்த அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
சிலர் தாங்கள் கையோடு எடுத்துச்சென்ற சாப்பாட்டை அந்த நிறுவனத்திற்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். யாரும் கலைன் து செல்வது போல தெரியாததால் இரவு அந்த நிறுவனத்தில் வழக்கறிஞர் ஜோசப் என்பவர் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த குடியிருப்பு வாசிகளை சந்தித்தார். சர்வே எண், 590 மற்றும் 591 ஆகியவை கோவில் இடம் என்பது பொய்யானது என்றும் இந்து சமய அறை நிலையத்துறை அதற்கு உரிமை கொண்டாடவில்லை என்றும் தெரிவித்தார்
இந்த நிலத்தை தனது தந்தை மடத்துக்கு தானமாக உயில் எழுதி வைத்ததாக சதீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்ததாகவும், தினமும் இதில் வரும் வருமானத்தை வைத்து அன்னதானம் செய்ய வேண்டும் என்று அவர் உயிலில் குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதை விசாரித்த தாசில்தார், ஆர்டிஓ ஆகியோர் செய்த தவறால் நிலத்தை மடத்துக்கு சொந்தமானது என்று தற்காலிகமாக தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்
டிசம்பர் மாதம் தீர்ப்பு வந்த நிலையில் 2 மாதம் ஏன் தாமதம் ? என்று குடியிருப்போர் கேட்டதற்கு கிறிஸ்துமாஸ் மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறை தான் காரணம் என்று சமாதானப்படுத்தினார். நீதிமன்றத்தில் அந்த உத்தரவுக்கு தடை வாங்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றார் ஜோசப்
இது போன்று அடுக்குமாடி குடியிருப்புகளின் வீடு வாங்குவோர் , கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பாமல், மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu