முகப்பு
"ஜனநாயகன்" வெளியீடு எப்போது?.. மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவு.. என்ன சொல்கிறது தணிக்கை வாரியம்?..
Jan 27, 2026 09:41 AM
59
தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கோரும் வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷா மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்படத்தை தற்போதைக்கு வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், ஜனநாயகன் படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப்பிரச்சனைகளை உருவாக்குவது தொடர்பாக இருக்கும் வசனங்கள் நாட்டின் மதஒற்றுமையை சீர்குலைக்க கூடும் என்று கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வசனங்கள் தொடர்பாக தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகார் மிகவும் தீவிரமானவை என கருதியதால் தான் சென்சார்போர்டு தலைவர் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆனால் சென்சார் போர்டு தலைவரின் கருத்துகளை கேட்டறியாமல் தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மனுதாரரான கேவிஎன் புரடக்சன்ஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க எதிர்மனுதாரராக சென்சார்போர்டுக்கு தனி நீதிபதி போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் சென்சார்போர்டு தலைவரின் முடிவுக்கு எதிராக தயாரிப்பாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சென்சார்போர்டு தலைவரின் முடிவை தனி நீதிபதி ரத்து செய்துள்ளது இயற்கை நீதி அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சென்சார்போர்டு தலைவரின் கருத்துகளையே கேட்காமல் அவரது முடிவை ரத்து செய்வது எப்படி நீதியாகும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா அமர்வு ஆணையிட்டது.
மேலும் வழக்கை தனி நீதிபதி பி.டி ஆஷா முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்காக சென்சார் போர்டு தலைவரின் மறுதணிக்கை முடிவுக்கு எதிராக ஜனநாயகன் படத்தயாரிப்பாளர் மனுவை திருத்தி தனி நீதிபதியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆணையிட்டுள்ளனர்.
மனு தாக்கலுக்கு பிறகு சென்சார்போர்டு பதில் அளிக்க போதுமான அவகாசம் வழங்கி ஜனநாயகன் சென்சார் வழக்கை தனி நீதிபதி விரைவாக விசாரிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை தற்போதைக்கு வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த விசாரணையின் போது தணிக்கை சான்றிதழ் கொடுக்க தனி நீதிபதி உத்தரவிட்டாலும் சென்சார்போர்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகனுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும் உச்சநீதிமன்றத்தை சென்சார்போர்டு அணுக கூடும். இதனால் ஜனநாயகன் வெளியீட்டிற்கான சிக்கல் தொடர்கிறது.
ஒருவேளை படத்தை மறுதணிக்கை செய்ய தனி நீதிபதி அனுமதித்தாலும், அந்த செயல்முறை முடிந்து சான்றிதழ் வழங்க குறைந்தபட்சம் 20 நாட்கள் அவகாசம் உள்ளது என்கிறார்கள்.
அனைத்தும் முடிந்தாலும் கூட பிப்ரவரி மாத இறுதியில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் அரசியல் கட்சி தலைவரான விஜயின் திரைப்படத்தை வெளியிட முடியாது. இதனால் தற்போதைய சூழலில் தேர்தலுக்கு முன்பாக ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது.
அதே சமயம் ஜனவரி 5ம் தேதி மறுதணிக்கை என சென்சார்போர்டு எடுத்த முடிவுக்கு உடன்பட்டு சம்மதம் தெரிவித்திருந்தால் தற்போது ஜனநாயகன் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு வெளியாகியிருக்க கூடும் என திரையுலகினர் கூறி வருகின்றனர்.
சென்சார் போர்டு தலைவரின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற முடிவு காரணமாகவே ஜனநாயகன் திரைப்படம் தற்போது முடங்கும் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu