முகப்பு
ஓம் சிவாய நமஹ... பணமெல்லாம் ஸ்வாஹா...சிவனடியார்களுக்கு விபூதி அடித்த ஜல்சா பார்ட்டி!
Nov 14, 2025 05:59 AM
54
ஓம் சிவாய நமஹ... பணமெல்லாம் ஸ்வாஹா...சிவனடியார்களுக்கு விபூதி அடித்த ஜல்சா பார்ட்டி!
சிவன் தலங்களுக்கு வரும், கடவுள் நம்பிக்கை கொண்ட பக்தர்களை ஏமாற்றிப் பணம் பறித்து கார், பங்களா, என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ‘சிவன் அருளால் கட்டு உடலை கொண்டுள்ளேன்.. சிவனடியானும் நானே சிவனும் நானே’ எனக்கூறி மோசடியில் சிக்கிக் கொண்ட சுவாதீஸ்வரன் இவர் தான்...
நானே சிவன், அமெரிக்காவில் சிவன் கோவில் கட்டுவதாக அதில் தனது தனி விமானத்தில் அழைத்து செல்வதாக புருடா விட்டு சிவ பக்தர்களிடம் மோசடி செய்தவரின் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெருமாள் (57) மற்றும் அவருடன் 22 பேர் இணைந்து சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில்...
அம்பத்தூர், செல்லியம்மன் நகர், ஐ.எஃப்.சி காலனி பகுதியில் வசிக்கும் சுவாதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை ஜெகதீசன், ராஜமோகன் என்கிற சுவாமிநாதன், ஜீவா அம்மையார் ஆகியோர்,
“திருகைலாசம் ஆன்மிக சுற்றுலா” என்ற பெயரில் சிவபக்தர்களை அணுகி, ரூ.5,000 முதல் ரூ.95,000 வரை தனித்தனியாக பணம் வசூலித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் தங்களை “சிவபக்தர்களுக்கான டிரஸ்ட்” சார்பாக கைலாசா சுற்றுலா ஏற்பாடு செய்கிறோம் என்று நம்பவைத்து, ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் ரூ.35,000 முதல் ரூ.90,000 வரை தொகை வசூலித்துள்ளனர். பெரும்பாலானோர் G-Pay, ஆன்லைன் வங்கி பரிமாற்றம் மற்றும் நேரடியாக கையில் பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால், பணம் செலுத்திய பின், சுற்றுலா தேதியை தொடர்ந்து தள்ளிவைத்து, பின்னர் சுவாதீஸ்வரன் தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, இடம் மாறிச் சென்றுள்ளார்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அவரைத் தொடர்பு கொண்டபோது ஆபாசமாகவும் மிரட்டலாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, “யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள், எனக்கு பயமில்லை, என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என ஆணவமாகவும் திமிராகவும் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடியில் சுவாதீஸ்வரனின் தாயும், திருவல்லிக்கேணி தபால் நிலையம் எதிரிலுள்ள சிவன் கோவிலில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் செல்வி என்ற பெண்ணும் உடந்தையாக இருந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
சுவாதீஸ்வரன் சென்னை, தி.நகர், பாண்டிச்சேரி, ஆந்திரா பகுதிகளிலும் இதேபோல் நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், வசூலித்த பணத்தில் பல சொத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் இதுவரை வந்த புகாரில் ரூ.10 லட்சத்து 95 ஆயிரம் வரை பணத்தை சுவாதீஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மோசடியாக வசூலித்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் உள்ள முக்கிய சிவன் தலங்களுக்கு சென்று, அங்கு வரும் பெண் பக்தர்களை இமாலயத்தில் உள்ள கைலாசாவிற்கு குறைந்த கட்டணத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி நம்ப வைத்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு கோவிலில் உள்ள பெண் பணியாளர்களை இடை தரகர்களாக பயன்படுத்தி, அவர்களுக்கு 10 பேரை பிடித்து விட்டால் பணம் இல்லமால் விமானம் மூலமாக கைலாச அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும் விமானம் மூலமாக அழைத்து செல்வதற்கு ஒருவருக்கு தலா 45 ஆயிரமும், ரயில் மூலமாக சென்று குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அழைத்து செல்ல ஒருவருக்கு தலா 35 ஆயிரம் என பேசி, குறைந்த விலையில் ஆன்மிக சுற்றலாவும், விமானத்திலேயே செல்லாதவர்கள் விமானத்தில் செல்லலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதிலும் ஆஃபராக 10 பேரை சேர்த்துவிட்டால் ஒருவருக்கு இலவசம் என்பதாகவும், அமெரிக்காவில் சிவனாலயம் ஒன்றை கட்டி வருவதாகவும், அங்கு தனி விமானத்தில் அனைவரையும் அழைத்து செல்வதாகவும் ஆசை வார்த்தைக்கூறியுள்ளார்.
குழுவாக இணைந்தால் மண்டபத்திலோ, கோவில் வளாகத்திலோ கூட்டத்தை ஏற்பாடு செய்து பல்வேறு வசதிகளை செய்வதாக வாக்குறுதி அளித்து பணத்தை வாங்கிக் கொண்டு சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றியுள்ளார்.
கேட்கும் பொழுதெல்லாம் பகல்ஹாம் தாக்குதலால் போர் நடைப்பெறுகிறது, இயற்கை பேரிடர் என பல்வேறு பொய்களை கூறி ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பிறகு, நானே சிவன் என சொல்லிக்கொண்டு ஏமாற்றிய சுவாதீஸ்வரன் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த செல்வி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விவரம் அறிந்து 10 மேற்பட்டோர் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் குவிந்தனர்.
தனக்கு உடல் நிலை சரியில்லாத போதும் சிகிச்சைக்காக வைத்து இருந்த பணத்தை கட்டி ஏமாந்து விட்டதாக மூதாட்டி ஒருவர் கதறி அழுதார்.
மிதமிஞ்சிய தங்களது பக்தியை பயன்படுத்தி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதோடு, ‘சிவன் சொத்து குல நாசம் உங்கள் பணத்தை ஏமாற்றமாட்டேன்’ என சொல்லி சொல்லியே காலம் தாழ்த்தி தங்களை ஏமாற்றி, மிரட்ட துவங்கியதாக வேதனையோடு தெரிவித்த அவர்கள், தங்கள் பணத்தை மீட்டு கொடுக்கும்படியும் வேறு யாரும் ஏமாறாமல் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் படியும் கோரிக்கை வைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu