முகப்பு
உலுக்கிய விமான விபத்துகள்.. இந்தியாவில் அப்போதும் இப்போதும் நடுவானில் நடந்த அந்த தவறு..!
Jun 15, 2025 02:31 PM
261
இந்தியாவையே உலுக்கிய விமான விபத்துகள் அப்போதும் இப்போதும் நடுவானில் நடந்தது என்ன?
இந்தியாவையே அதிரவைத்த இந்த மாபெரும் விமான விபத்து எப்படி நடந்தது? 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தின் தொடர்பு, ஒரு நிமிடத்திலேயே துண்டிக்கப்பட்டது ஏன்? விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்த சிக்னல், அதற்குப்பிறகு கிடைக்காமல் போனது ஏன்? திடீரென ஏற்பட்ட இந்த விபத்துக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறன. இந்தநிலையில், இதற்கு முன் இந்தியாவையே உலுக்கிய விமான விபத்துகள் குறித்தும், நடுவானில் நடந்த தவறு என்ன? என்பது குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
1962 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி...சிட்னியில் இருந்து ரோமிற்கு புறப்பட்டது, அலிட்டாலியா என்ற இத்தாலிய விமான நிறுவனத்தின், விமானம்.
பாங்காக்கில் இருந்து விமானம் புறப்பட்டபோது மொத்தம் 94 பேர் விமானத்தில் இருந்தனர். இவர்களில் 85 பேர் பயணிகள். இந்த விமானம் மாலை 6.38 மணியளவில் பம்பாய் விமான நிலையத்தை நெருங்கியது. ஆனால், அப்போது விமானம் பாதுகாப்பான உயரத்தைவிட மிகக் குறைந்த உயரத்தில் பறக்கத் தொடங்கியது. அடுத்த நிமிடமே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் ஜுன்னர் பகுதியில், 6.39 மணிக்கு விமானம் அருகில் இருக்கும் தேவந்தயாச்சி மலையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த அனைவருமே விபத்தில் உயிரிழந்தனர். விமானம், போதுமான உயரத்தில் பறக்காததே விபத்திற்குக் காரணம் என பிறகு கண்டறியப்பட்டது.
அடுத்தது, 1973 ஆண்டு மே 31 ஆம் தேதி...பல முக்கியப் பிரமுகர்கள் உட்பட 65 பயணிகளுடன், இந்தியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737-2A8 ரக சாரங்கா விமானம், சென்னையிலிருந்து புறப்பட்டது.
இந்த விமானம், இப்போதுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள அப்போதைய தில்லி பாலம் விமான நிலையத்தை நெருங்கியபோது, உயரழுத்த மின்சாரக் கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தில் பிரபல அரசியல்வாதிகளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பாலதண்டாயுதம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவகி கோபிதாஸ், தொழிலதிபர்களான மல்லிகார்ஜுன் ரெட்டி ககானி, ரகுநாத ரெட்டி ககானி உள்பட 48 பேர் உயிரிழந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் பான் சிங் பவுரா, பிரபல மலையாள எழுத்தாளர் வி.கே. மாதவன் குட்டி உள்ளிட்ட 17 பேர் உயிர் பிழைத்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தை நெருங்கியபோது புழுதிப் புயல் வீசியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அடுத்தது, பம்பாய் விமான விபத்து... அதாவது, 1978 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பம்பாயிலிருந்து துபாய்க்குப் புறப்பட்டது ஏர் இந்தியாவின், எம்பரர் அசோகா எனப் பெயரிடப்பட்ட, போயிங் 747 ரக விமானம்.
இந்த விமானம், பம்பாய் சாண்டா க்ரூஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அரபிக் கடலுக்கு மேலே பறக்க துவங்கியுள்ளது. விமானி விமானத்தை வலது புறமாகத் திருப்பியுள்ளார். பிறகு, மீண்டும் விமானம் வழக்கத்தைப் போல பறக்க ஆரம்பித்துள்ளது. இதற்குப் பிறகு இடதுபுறமாகச் சாய ஆரம்பித்த விமானம் மீண்டும் வழக்கமான நிலைக்கு வரவேயில்லை.
ஓடு பாதையிலிருந்து புறப்பட்டு 101 விநாடிகளே ஆகியிருந்த நிலையில், விமானம் அரபிக் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ஒரு விமானி, உயரம் குறித்து சரியாக அறியாமல் அளித்த கட்டளைகளே விமானம் விபத்திற்குள்ளாகக் காரணம் என விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. இந்த மாபெரும் விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 213 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அடுத்ததாக, 1988 ஆண்டு அக்டோபர் 19 ஆம்தேதி இதே அகமதாபாத்தில் 133 பேரை பலிகொண்ட விமான விபத்து... அதாவது, இந்தியன் ஏர்லைன்ஸின் போயிங் விமானம், அன்று காலை ஐந்தே முக்கால் மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் கொஞ்சம் தாமதமாக 6.05 மணிக்குப் புறப்பட்டது. ஓடுபாதைக்கு இரண்டரை கி.மீ. முன்பாகவே விமானம் மரங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 135 பேரில் 133 பேர் உயிரிழந்தனர். விமானிகளின் தவறே இந்த விபத்திற்குக் காரணம் என பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, விமானம் புறப்பட்டபோது, பனி மூட்டமாக இருந்ததால், போதுமான அளவுக்கு ஓடுபாதை தெரியாத நிலை இருந்துள்ளது. அப்படி, ஓடுபாதை தெரியாவிட்டால் 500 அடி உயரத்திற்குக் கீழே விமானம் இறங்கக்கூடாது. ஆனால், இரண்டு விமானிகளுமே விமானம் தொடர்ந்து உயரம் இழப்பதைக் கவனிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அடுத்ததாக, 92 உயிர்களை பலிகொண்ட பெங்களூரு விமான விபத்து. அதாவது, 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு வந்த இந்தியன் ஏர்லைன்சின் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம், மும்பை விமான நிலையத்திலிருந்து காலை 11.58மணிக்குப் புறப்பட்டுள்ளது. விமானத்தில் 139 பயணிகளும், விமானிகள் உள்பட 7 பணியாளர்களும் என 146 பேர் பயணித்துள்ளனர். பிற்பகல், 12.53க்கு விமானம் பெங்களூருவை நெருங்கியுள்ளது. 9 ஆம் எண் ரன்வேயில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமானம் குறிப்பிட்ட உயரத்தைவிட கீழே பறந்துகொண்டிருந்ததால், விமானத்தின் சக்கரங்கள் கர்நாடகா கோல்ஃப் கிளப் மைதானத்திலேயே தரையைத் தொட்டுவிட்டன. இதனால், விமானம் மிக மோசமாகக் குலுங்க ஆரம்பித்துள்ளது. இதில், விமானப் பயணிகள் பலர் சிதறி விழுந்துள்ளனர். விமானம் சாலையைக் கடந்து ஓரிடத்தில் தரையில் மோதி நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதற்கு முன்பே, விமானத்தின் என்ஜின்களும் சக்கரங்களும் விமானத்திலிருந்து பறந்துபோய் விழுந்துள்ளன. இந்த விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர். 54 பேர் உயிர் தப்பினர். பலருக்கு தலையிலும் கால்களிலும்தான் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
விசாரணையில் விமானியின் தவறே விபத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. ஆனால், இந்திய வர்த்தக விமானிகள் சங்கம், விமான காக்பிட் டிசைனில் இருந்த தவறுகளே விபத்திற்குக் காரணம் எனக் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, 349 உயிர்களை பலிகொண்ட சாக்ரி - தாத்ரி விமான மோதல்...இந்திய விமான வரலாற்றிலேயே மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று என கூறப்பட்டது. காரணம், இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட பெரு விபத்து இது. அதாவது, 1996 நவம்பர் 12 ஆம் தேதி... சௌதியா நிறுவனத்தின் போயிங் 747-168 B ரக விமானம், 312 பயணிகளுடன் டில்லியில் இருந்து புறப்பட்டு முதலில் டெஹ்ரானுக்கும் பிறகு ஜெட்டாவுக்கும் செல்வதாக இருந்துள்ளது.
கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Ilyushin ரக விமானம், கஜகஸ்தானில் உள்ள சிம்கென்ட் விமான நிலையத்திலிருந்து டில்லியை நோக்கி வந்துகொண்டிருந்துள்ளது. பத்து பேர் விமானப் பணியாளர்கள் மற்றும் விமானிகள் என 37 பேர் பயணம் செய்த இந்த விமானத்தை, கிர்கிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த விமானம் மாலை 6.32 மணியளவில் டில்லியில் இருந்து புறப்பட்டது.
அப்போது, அதே நேரத்தில் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முயன்றுகொண்டிருந்து. வெவ்வேறு உயரங்களில் பறக்கும்படி இரண்டு விமானங்களுக்கும் கட்டளையிடபட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
இரண்டு விமானங்களின் இடது புற றெக்கைகளும் ஒன்றோடு ஒன்று உரசியதில் விபத்து ஏற்பட்டது. சௌதியாவின் விமானம் அதிவேகத்தில் கீழே விழுந்து நொறுங்க, அதற்கு அருகிலேயே கஜகஸ்தானின் விமானமும் விழுந்து நொறுங்கியது. இரண்டு விமானங்களிலும் இருந்த 349 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து, விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த கட்டளைகளை, கஜகஸ்தான் விமானத்தில் இருந்தவர்கள் சரியாக புரிந்துகொள்ளாததே, இந்த கொடூர விபத்துக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணம் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.
அடுத்ததாக, 60 உயிர்களை பலிகொண்ட பாட்னா விமான விபத்து... அதாவது, 2000 ஆவது ஆண்டு, ஜூலை 17 ஆம் தேதி காலை சுமார் ஆறே முக்கால் மணியளவில் கொல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 58 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் முதலில் பாட்னாவுக்கும் பிறகு லக்னோவிற்கும் சென்றுவிட்டு, டில்லியைச் வந்தடைய வேண்டியது. இந்த விமானம் ஏழரை மணியளவில் பாட்னாவை நெருங்கியுள்ளது. விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், விமானம் ஓடுபாதையை தவறவிட்டதால் பிறகு, மீண்டும் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விமானம் வேகமாக உயரத்தை இழக்கத் துவங்கி, காந்தி பார்க் பெண்கள் பள்ளிக்குப் பின்னால் இருந்த அரசுக் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், தரையில் இருந்தவர்கள் உட்பட 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அடுத்ததாக, 158 உயிர்களை பலிகொண்ட மங்களூரு விமான விபத்து... அதாவது, 2010 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்கு சொந்தமான Boeing 737-8HG (SFP) விமானம் 166 பேருடன் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம், காலை 6.05 மணிக்கு மங்களூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது.
மங்களூர் விமான நிலையத்தின் ஓடுபாதையும் ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருந்தது. விமானம் தரையைத் தொட்ட பிறகு, குறிப்பிட்ட தூரத்திற்குள் விமானம் நிற்கவில்லை. ஓடுபாதையை தாண்டி விமானம் வந்தால், அதனை நிறுத்த மணல் கொட்டப்பட்டிருந்தது. ஆனால், விமானம் அந்த மணல் பரப்பையும் தாண்டிச் சென்றுள்ளது.
அப்படிச் செல்லும்போது பக்கவாட்டில் இருந்த ஆண்டெனா கோபுரத்தின் மீது றெக்கை ஒன்று மோதியுள்ளது. இதனால், விமானம் குன்றிலிருந்து தலைகுப்புற கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் கீழே விழுந்ததும் தீப்பிடித்து எரிந்தது. இதனால், 160 பேர் விமானத்தில் இருந்தனர். விமானிகளும் பணியாளர்களும் சேர்ந்து ஆறு பேர். இந்த 166 பேரில் 158 பேர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர். அந்த நேரத்தில் மழை ஏதும் பெய்யவில்லை. விமானி போதுமான தூரத்திற்கு பார்க்கும் வகையில்தான் காலநிலை இருந்தது. ஆனாலும் இப்படியொரு விபத்து ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.
அடுத்ததாக, 21 உயிர்களை பலிகொண்டு, 100 மேற்பட்டோரை காயமடைய வைத்த கோழிக்கோடு விமான விபத்து... அதாவது, 2020 ஆம் ஆண்டு... கொரோனா தொற்று பரவல் காரணமாக, வளைகுடா நாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்க வந்தே பாரத் என்ற பெயரில் விமான சேவைகள் அப்போது இயக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக 2020 ஆகஸ்ட் ஏழாம் தேதி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இந்த விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தை இரவு 7.40 மணிக்கு வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் கோழிக்கோட்டை நெருங்கியது. அப்போது மழை பெய்துகொண்டிருந்தது.
இதனால், மிகக் குறைவான தூரமே பார்க்க முடிந்தது. முதலில் 28 வது ரன்வேயில் விமானம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து எதிர்த்திசையில் 10ஆம் எண் கொண்ட ரன்வேயில் தரையிறங்க அனுமதி கேட்டார் விமானி. அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியபோது, ஓடுபாதைக்குப் பதிலாக நிறுத்துமிடங்களுக்குச் செல்வதற்கான C என்ற பாதையில் விமானம் தரையிறங்கிவிட்டது. கோழிக்கோடு விமான நிலையம் ஒரு உயரமான குன்றின் மீது அமைந்துள்ள விமான நிலையம். விமானம் தரையிறங்கிய ஓடுபாதை மிகச் சிறியதாக இருந்ததால், குறிப்பிட்ட தூரத்தில் விமானியால் விமானத்தை நிறுத்த முடியவில்லை.
இதனால், ஓடுபாதையைத் தாண்டிச் சென்ற விமானம், குன்றின் மீது விழுந்தது. விமானத்தின் முன்பகுதி உடைந்து நொறுங்கியது. 184 பயணிகள், விமானிகள் 2 பேர், விமான பணியாளர்கள் 4 பேர் என 190 பேர் இருந்தனர். இந்த விபத்தில், இரண்டு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில்தான், 2025 ஜூன் 12 ஆம் தேதி இந்தியாவையே உலுக்கிய விமான விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் பறவைகள் மோதி இருக்கலாம் என்று கூறப்பட்டது. ‘விமானம் புறப்படும்போது அதன் றெக்கை மடிப்புகள் ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம்’ என கூறும் நிபுணர்கள், ‘றெக்கையின் மடிப்புகள் சரியான நிலையில் இல்லையென்றால், அதற்கு மனிதப் பிழை ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம். ஆனால், அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு காணொளி தெளிவாகவும் தரமாகவும் இல்லை’ இப்படி, விபத்துக்கான காரணம் குறித்து, கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu