RECENT NEWS

Mayday Call என்றால் என்ன..?

முகப்பு

கடவுளின் குழந்தையை காக்கவேண்டியவர்களே கொன்று புதைத்த கொடூரம்..தோண்ட தோண்ட அதிர்ச்சி!..

May 26, 2025 05:52 AM

346

கடவுளின் குழந்தையை காக்கவேண்டியவர்களே கொன்று புதைத்த கொடூரம்..தோண்ட தோண்ட அதிர்ச்சி!..

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் பகுதியில், மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான தனியார் சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் மனவளம் குன்றிய 23 மாணவர்கள் தங்கி படித்துவந்தனர். இந்நிலையில், சோமனூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் 21 வயது வருண் காந்த், அங்கு மூன்று மாதத்திற்கு முன்பு சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் உள்ளே சென்று காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்களை சந்திக்கவோ பேசவோ கூடாது என காப்பக நிர்வாகிகள் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால், பிள்ளைகள் என்ன நிலையில் உள்ளார்கள் என்பதை பெற்றோர்கள் அறியமுடியாத நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில்தான், “உங்கள் மகன் வருண் காணாமல் போய்விட்டார்” என வருணின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த வருணின் தந்தை ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் காப்பக நிர்வாகிகளிடம் சென்று “எங்கு, எப்படி காணாமல் போனார்?” என கேட்டபோது, “கடந்த 15 ஆம் தேதி பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, காப்பகத்தில் உள்ள சிறுவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றோம். அப்போது, கடைக்கு சென்ற வருணை காணவில்லை” என தெரிவித்துள்ளனர்.

மேலும், “ஆழியார் காவல்நிலையத்தில் வருண் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்தோம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” எனவும் காப்பக நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதோடு, வருண் ஆழியார் அணை அருகே நடந்து செல்லும் சி.சி.டி.வி காட்சியையும் காண்பித்துள்ளார்கள். இதனால், தவித்துப்போன வருணின் தந்தை ரவிக்குமார், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், காணாமல் போன வருணை தேடி உள்ளார். ஆனால், அவர்களால் வருணை கண்டுபிடிக்க முடியவில்லை.

சந்தேகமடைந்த வருணின் தந்தை ரவிக்குமார் உள்ளிட்ட உறவினர்கள், காப்பக ஊழியர்களிடம் விசாரித்தபோது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தது. “வருண் 15 ஆம் தேதிக்கு முன்பே காணாமல் போய்விட்டார். அவரை காப்பக நிர்வாகிகள் அடித்து சித்திரவதை செய்தனர். அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் கட்டில் ஆகியவற்றை வேறு அறைக்கு மாற்றினார்கள்” என திடுக்கிடவைக்கும் தகவல்களைக் கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், தனது உறவினர்களிடம் இது குறித்து கூறவே, அங்கிருந்த மற்ற சில ஊழியர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்போது, வருணைப் போலவே, மற்ற மாணவர்களையும் காப்பக நிர்வாகிகள், மாலை வேளைகளில் அடித்து சித்திரவதை செய்துள்ளார்கள். வருணை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதில், கால் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது” என தெரிவித்துள்ளனர். மிரண்டுபோன ரவிக்குமார், மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, வருணின் உறவினர்கள் கூறும்போது, “காப்பகத்தில் வருண் காணாமல் போனது தொடர்பாக, நிர்வாகிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகிறார்கள். வருண் கடுமையாக தாக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக, போலீசார் விசாரணையை ஆரம்பித்ததும், காப்பக நிர்வாகிகளின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. அங்கு, இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிசிடிவி காட்சிகளின், பேக்கப் இருப்பதாக காப்பகத்தினர் கூறினார்கள். இதுவே, அவர்கள் மீது சந்தேகத்தை அதிகப்படுத்தியது” என தெரிவித்தனர்.

அது மட்டுமல்ல, ஆழியாறு அணைக்கு அழைத்துச் சென்ற நாளில், வேறொரு சிறுவன் தூரத்தில் நடந்து செல்வதைப் போன்ற ஒரு சிசிடிவி காட்சியை அவர்கள் காண்பித்துள்ளனர். அங்கு நடந்து சென்றது வருண் இல்லை என்றும் வருணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டி சிங் மற்றும் வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான், வருணை கடந்த 11 ஆம் தேதியே காப்பகத்தில் இருந்தவர்கள், அடித்து கொலை செய்து பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.நாகூர் மல்லம்பாறை காடு பகுதியில் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் புதைத்தது தெரியவந்தது. இந்த கொலையை மறைக்கவே, கடந்த 15 ஆம் தேதி சுற்றுலா சென்ற இடத்தில், வருண் காணாமல் போனதாக காப்பகத்தினர் நாடகமாடியதை, போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

முதற்கட்டமாக, காப்பகத்தின் அறக்கட்டளை நிர்வாகியான கிரி ராம், மேற்பார்வையாளர் நித்தீஷ், காப்பக ஊழியர் ரங்கநாயகி ஆகிய மூன்று பேரை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டதில், பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூர் பகுதியில் உள்ள காப்பகத்தின் உரிமையாளர் கவிதாவின் தோட்டத்தில் வருணின் உடலை சாக்குப்பையில் கட்டி குழிதோண்டி புதைத்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, புதைக்கப்பட்ட இடத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டிசிங் தலைமையில், வருணின் தந்தை ரவிக்குமார் உள்ளிட்ட உறவினர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மனவளம் குன்றிய இளைஞர் வருண் காந்தை கொலை செய்த வழக்கில்
பங்குதாரர் கிரிராம், மேற்பார்வையாளர் நித்தீஸ்
பணிப்பெண் ரங்கநாயகி, செந்தில் பாபு ஆகியோர் மீது கொலை குற்றம் அடைத்து வைத்தல், தாக்குதல் நடத்தியது, கூட்டுசதி உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ்
வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடையவர்ளை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆனாலும், வருண்காந்த் அடித்து, படுகொலை செய்யப்பட்டதற்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மனவளம் குன்றிய குழந்தைகளை கடவுளின் குழந்தைகள் என்பார்கள். அவர்களது மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் கொடுத்து காக்கவேண்டிய காப்பக ஊழியர்களே அடித்து, சித்திரவதை செய்து, கொன்று, புதைத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. மற்ற மாணவர்களை காப்பாற்றி முறையான காப்பகத்தில் சேர்க்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...'' அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies