தமிழ்நாடு
குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த 4 பேர்.. பிடித்து ஒப்படைத்தும் தப்பவிட்ட போலீஸ்.. அலறவிட்ட 1,000 பேர்!..
May 26, 2025 05:48 AM
910
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த வீரக்கல்லில், வெள்ளைமாலை வீருமாறம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஒரு நாள் இரவு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த திருவிழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு ஒரு நாள் இரவு தங்கி திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்காக பாத்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் குளிக்கும் போது வீரக்கல் அருகே வண்ணம்பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள், தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து அந்தப் பெண் கூச்சலிட்டதால், பொதுமக்கள் அந்த நான்கு இளைஞர்களை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். அவர்களை சம்பந்தப்பட்ட செம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், குளிக்கும் பெண்கள் வீடியோ எடுத்த 4 நபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தும், அவர்களை போலீசார் தப்பிக்க விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் - பொதுமக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகாலை 3 மணி முதல் செம்பட்டி 4 ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தேனி - திண்டுக்கல் சாலை, மதுரை - பழனி சாலையில் கடும்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனால், போராட்டக்காரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கலந்து சென்றனர். இந்நிலையில், விழா கமிட்டி தலைவர் திண்டுக்கல் ராமராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த, இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மேலும், திருவிழாவில் வீடியோ எடுத்த 4 இளைஞர்கள், வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புகிறவர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி, அவர்களைத் தேடி வந்த நிலையில், செம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த வண்ணப்பட்டியைச் சேர்ந்த ராமர் மகனான 20 வயது கல்லூரி மாணவர் நவீன், இதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆகியோரை கைது செய்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மேலும் இவர்களது நண்பர்கள், இதே பகுதியைச் சேர்ந்த ஹரி மற்றும் விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தபோது, பொதுமக்கள் அந்த நான்கு இளைஞர்களையும் கையும் களவுமாக மடக்கிப் பிடித்து, செம்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தபோது, அவர்களை தப்பவிட்ட காவர்கள் யார்? யார்? அவர்கள் தப்பவிட்ட காரணம் என்ன? என்பது குறித்தும் உயரதிகாரிகள் விசாரணை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu