முகப்பு
விசாரணை வளையத்தில் டாஸ்மாக் எம்.டி... வாட்ஸ் அப்பில் பேசியது என்ன..? அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை
May 16, 2025 02:45 PM
550
விசாரணை வளையத்தில் டாஸ்மாக் எம்.டி... வாட்ஸ் அப்பில் பேசியது என்ன..?
சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் காலை முதல் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் திடீரென அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விசாகனின் வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யும் மதுபானங்களில் முறைகேடு நடப்பதாக, ஏற்கனவே பதிவு செய்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை சப்ளை செய்யும் தனியார் மதுபான தொழிற்சாலைகள் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது. இதனை தொடர்ந்து ஏற்கனவே இரண்டு முறை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான விசாகனுக்கு சம்மன் அனுப்பி இருந்த அமலாக்கத்துறை அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இன்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியது.
சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே விசாகன் வீடு அருகே சாலையோரத்தில் வாட்ஸ் ஆப் சேட்களின் ஸ்கிரீன் ஷாட் ஆவணங்கள் சிதறிக்கிடந்தன.
டாஸ்மாக் ஏலம் தொடர்பாக நடைபெற்ற சேட்களின் ஸ்கிரீன் ஷாட் ஆவணங்களும் அங்கு கிடந்த நிலையில் அவற்றை வீட்டில் இருந்து சிலர் வெளியே வீசியதாக கூறப்படுகிறது. ஆவணங்கள் சிதறிக்கிடந்த இடத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது விசாகன் மகன் வீட்டில் இல்லாத நிலையில், அவரை அழைத்து வீட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாகன் பயன்படுத்தும் லேப்டாப்புகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், வங்கி அதிகாரி ஒருவரின் துணையுடன் பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாகன் மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விசாகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக வீட்டில் விசாரணை நடந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக விசாகனிடம் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாகனின் மனைவியும் அழைத்து செல்லப்பட்ட நிலையில், வெளியே காக்க வைத்த அதிகாரிகள் அவரை விசாரிக்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu