முகப்பு
சுத்தியலால் அடித்தே சிதைக்கப்பட்ட பாட்டி- பேரன் காரணம்... 2 சந்தேகம் 1 திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்..!
Apr 18, 2025 08:53 AM
237
சுத்தியலால் அடித்தே படுகொலை செய்யப்பட்ட 2 உயிர்கள்... நாடகம் ஆடிய காதல் ஜோடி சிக்கியது எப்படி?
ஈரோடு மாவட்டத்தில் நடந்த பாட்டி -பேரன் இரட்டை படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, படுகொலைக்கான பின்னணியில் இருந்தது இரண்டு காரணங்கள். ஆனால், காட்டிக் கொடுத்தது அந்த ஒற்றைக் காரணம்தான். திருட்டு வழக்குபோல் சித்தரித்து, நாடகம் ஆடிய காதல் ஜோடி சிக்கியது எப்படி? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்துள்ள தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாதப்பா - தொட்டம்மா தம்பதியர். இவர்களது, மகன் 11 வயது ராகவன். இதே கிராமத்தில் சிறுவன் ராகவனின் 50 வயது பாட்டி சிக்கம்மாவும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு சென்று விளையாடுவதும் இரவு கதைச் சொல்லி ராகவனை பாட்டி தூங்கவைப்பதும் என தொடர்ந்துகொண்டிருந்தது.
வழக்கம்போல், கடந்த 12 ஆம் தேதி இரவு சிறுவன் ராகவன், பாட்டி சிக்கம்மா வீட்டிற்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளார். விடிந்ததும் காலை வீட்டிற்கு வரவேண்டிய ராகவன்வரை வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த மாதப்பா, தனது அம்மா சிக்கம்மா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, இடி இறங்கியதுபோல் இருந்தது. ரத்த வெள்ளத்தில் சிக்கம்மாவும் மகன் ராகவனும் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாதப்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாளவாடி அருகே தொட்டகாஜனூர் இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளியை பிடிக்கும் வரை, உடலை எடுக்க விடமாட்டோம் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
கொலையாளி, பாட்டியையும் பேரனையும் மிகக்கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதேநேரத்தில், கொள்ளை அடிப்பதற்கு வந்திருந்தால் 53 வயது பாட்டியோ, 11 வயது சிறுவன் ராகவனோ இரண்டுபேருமே திருடர்களை எதிர்த்து தாக்கும் வலிமைக் கொண்டவர்கள் அல்ல. திருடுவது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் வலிமை இல்லாத இவர்கள் இருவரையும் சாதாரணமாக தாக்கிவிட்டு, தப்பித்திருக்கலாம். ஆனால்,
இவ்வளவு கொடூரமாக ஆயுதத்தால் அடித்து சித்திரவதை படுகொலை செய்வார்களா? என்ற ஒரே சந்தேகம்தான், திருட்டை தாண்டி வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது என்ற கோணத்திலும் விசாரிக்க ஆரம்பித்தது, காவல்துறை. அப்போதுதான், நடந்தது திருட்டுக்கான இரட்டைப் படுகொலை அல்ல. அதற்குப்பின்னால், வேறு இரண்டு காரணங்கள் இருப்பது தெரியவந்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் ஒன்று... கணவரை இழந்த பாக்யாவிற்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த ஜே.சி.பி. ஓட்டுநர் நாகேஷுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், 53 வயது மாமியார் சிக்கம்மா இந்த உறவு குறித்து வெளியில் சொல்லிவிடுவதாக மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
காரணம் இரண்டு...11 வயது சிறுவன் ராகவனின் தந்தை மாதப்பாவின் அண்ணிதான் பாக்யா. அண்ணன் இறந்தபிறகு, “உனக்குத்தான் குழந்தை இல்லையே, அந்த சொத்துக்களை எனது மகன் பெயருக்கு எழுதிவைங்களேன்” என அண்ணி பாக்யாவிடம் மாதப்பா அடிக்கடி கேட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், இரண்டு காரணத்துக்காக இரண்டு பேரையும் பழிதீர்க்கவேண்டும். ஆனால், திருட்டுபோல் இருக்கவேண்டும் என திட்டம் போட்டிருக்கிறது நாகேஷ்- பாக்யா ஜோடி.
சம்பவத்தன்று, நள்ளிரவில் சிக்கமாவின் வீட்டுக்கு சென்று பேரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிக்கமாவை சுத்தியலால் மிகக்கொடூரமாக அடித்து படுகொலை செய்துள்ளார், காதல் மோகத்தில் இருந்த நாகேஷ். அடுத்ததாக, கொலை சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்கவும் “என் ஆளின் சொத்தை உன் பெயருக்கு எழுதிவைக்கணுமா?” என அருகே தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் ராகவனையும் சுத்தியலால் அடித்து மிகக்கொடூரமாக படுகொலை செய்தது, நாகேஷின் வாக்குமூலத்தின்மூலம் தெரியவந்துள்ளது. திருட்டுபோல் சித்தரிக்க, சிக்கம்மாவின் வீட்டில் இருந்த நான்கு பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று தனது ஜேசிபி எந்திரத்தில் மறைத்து வைத்துள்ளார், நாகேஷ் என்பதும் தெரியவந்தது.
கொடூர படுகொலைகளில் ஈடுபட்ட நாகேஷ் மற்றும் படுகொலைக்கு தூண்டுதலாக இருந்த பாக்யா இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதுவும், கொடூர இரட்டைப் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நாகேஷுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், பாக்யாவுடன் திருமணத்தை மீறி தொடர்பில் இருந்த நாகேஷ், யாருக்காக, எதற்காக இந்தப்படுகொலைகளைச் செய்தாரோ அதை இனி தொடரமுடியாது. எந்த சொத்துக்காக தனது மகனைப்போல் பார்க்கவேண்டிய சிறுவனை பாக்யா படுகொலை செய்யத்தூண்டினாரோ அந்த சொத்தையும் அனுபவிக்கமுடியாது. இனி, இருவரும் தனித்தனியாக வெவ்வேறு சிறைகளில் “உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்ட” எனசொல்லிக்கொண்டு நரக வாழ்க்கையை அனுபவிக்கவேண்டியதுதான்.
எந்தப்பாவமும் செய்யாத சிறுவன் படுகொலை செய்யப்பட்டதோடு, நாகேஷின் எந்த பாவமும் செய்யாத மனைவியும் பிள்ளைகளும் நிர்கதியாய் நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். எந்த ஒரு படுகொலையுமே பிரச்சனைக்கு தீர்வாக அமையாது, என்பதற்கு இந்த படுகொலைகளும் ஓர் உதாரணம்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu