முகப்பு
நடிகர் ஸ்ரீகாந்த் உச்சம் டூ சரிவு..! ஸ்ரீகாந்திற்கு என்ன நடந்தது..?
Jun 25, 2025 12:54 PM
118
நடிகர் ஸ்ரீகாந்த் உச்சம் டூ சரிவு..! ஸ்ரீகாந்திற்கு என்ன நடந்தது?
சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது ஆகிய விருதுகளை பெற்றவர் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருவார், என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், இன்று போதைப்பொருள் வழக்கில் சிக்கி, சிறை சென்றிருக்கிறார். ஸ்ரீகாந்தின் சருக்கிய பக்கங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவரது தந்தை எஸ்பிஐ வங்கி ஊழியர். சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ரீகாந்த், பிறகு என்ன செய்வது? என்றெல்லாம் பெரிதாக யோசிக்காமல், மாடலிங் மீது கவனம் செலுத்தி வந்தார். அப்போதுதான் அவருக்கு சினிமா வாய்ப்பு கதவை தட்டியிருக்கிறது.
‘காதல் வைரஸ்’, ஷாம் நடிப்பில் வெளியான ‘12B’ படங்களில் முதலில் ஸ்ரீகாந்த் தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அந்த வாய்ப்புகள் பறிபோனது. அதன் பிறகு பாரதிராஜா, பாலசந்தர் படங்களில் நடிக்க தேர்வாகி அதுவும் மிஸ்ஸானது. அதன்பின், ஸ்ரீ காந்திற்கு ”ரோஜா கூட்டமே!” பூங்கொத்து கொடுத்து ஆதரவு கொடுத்தது..
ஆம்.. இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா கூட்டம்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார் ஸ்ரீகாந்த். முதல் படமாக இருந்தாலும், ஸ்ரீகாந்திற்கு நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இளம் வயதில், துள்ளலான நடிப்பால் கவனம் ஈர்த்துவந்த ஸ்ரீகாந்திற்கு தொடர்ச்சியாக ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற படங்கள் வரிசை கட்டி வந்து, கல்லாப்பெட்டிகளை நிரப்பியது.
‘பார்த்திபன் கனவு’ படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது ஆகிய விருதுகளை பெற்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி சில படங்களில் நடித்துவந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஆரம்பத்தில், ஒரு புதிய சிக்கல் அவரது மனைவியால் ஏற்பட்டது.
நடிகர் ஸ்ரீகாந்தும், சென்னையை சேர்ந்த வந்தனா என்பவரும் காதலித்துவந்தனர். பின்னர் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து 3 மாதங்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தனர். ரகசிய திருமணம் செய்து, 3 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு, தன்னை மனைவியாக ஏற்க மறுப்பதாக வந்தனா, ஸ்ரீகாந்த் மீது போலீஸில் புகார் அளித்தார்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில் வந்தனாவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. பிறகு இரு வீட்டாரும் சமரசம் பேசி, கடந்த 2008 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ளன.
இதற்கிடையே அடுத்தடுத்து கதைகளை தேர்வு செய்வதில் சொதப்பல் ஏற்பட்டதால், நடிகர் ஸ்ரீகாந்தின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது மற்றொரு மிகப்பெரிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, பிரசாத்தின் தயாரிப்பில் “தீங்கிரை” என்ற பெயரில் படம் ஒன்றில் ஸ்ரீகாந்த் நடித்து வந்துள்ளார். அப்போது பிரசாத்திடம் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மூலமாக போதைப் பொருள்களை ஸ்ரீகாந்த், பயன்படுத்தி வந்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார். கடந்த ஒன்றரை வருடங்களாக சட்ட விரோதமாக போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது ஸ்ரீகாந்த் வசமாக பிடிப்பட்டிருக்கிறார்.
சேர்க்கை சரியில்லை என்றால், வாழ்க்கையே சரியாக இருக்காது என்பது போல, நடிகர் ஸ்ரீகாந்தின் வாழ்க்கையிலும் நிரூபணமாகி இருக்கிறது. இதுப்போன்ற, போதை வலையில் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும் தானா? அல்லது மற்ற நடிகர், நடிகைளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற பல்வேறு கோணத்திலும், ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu