BIG STORIES
காலங்களைக் கடந்து நிற்கும் இசையும்- கவிதைகளும்.. கண்ணதாசன் 99.. எம்.எஸ்.விஸ்வநாதன் 98
Jun 24, 2025 11:21 AM
2497
காலங்களைக் கடந்து நிற்கும் இசையும்- கவிதைகளும்.. கண்ணதாசன் 99.. எம்.எஸ்.விஸ்வநாதன் 98
கவியரசு கண்ணதாசனுக்கும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் இன்று பிறந்தநாள். திரையுலகில் சாதனைகள் பல படைத்திட்ட இருவரின் நினைவுகளைப் போற்றும் செய்தித் தொகுப்பு இதோ உங்களுக்காக…
கவிஞர் கண்ணதாசனும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஈருடல் ஓருயிராய் இசையுலகில் பயணித்தவர்கள். காதல், தத்துவம், பாசம், ஆன்மிகம் என எதை எழுதினாலும் தனி முத்திரையைப் பதித்தவர் கண்ணதாசன் அவரது எண்ணற்ற திரைப்படப் பாடல்களுக்கு இதயத்தோடு இரண்டறக் கலக்கும் வகையில் இசையமைத்தவர் எம்எஸ் விஸ்வநாதன்.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் வழங்கிய இசை ஆறு இன்னும் வற்றாது ஓடிக் கொண்டே இருக்கிறது.
ஒரு பாடல் கேட்பவர்களின் காதுகளில் நுழைந்து இதயத்தில் பதிந்துவிட்டதென்றால் அந்தப் பாடலுக்குத் தெய்வத்தன்மை கிடைத்து விட்டதென்ற என்பார்கள்- ஏனெனில் அவற்றுக்கு அழிவென்பதே இருக்காது.
எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் என பன்முகத் திறமை கொண்டிருந்தாலும் கண்ணதாசன் எழுதிய அற்புதமான திரைப்பாடல்கள்தான் இன்னும் உயிர்ப்போடு நிற்கின்றன.
காதலின் மகத்துவத்தை கவிதை வரிகளாக்கி அவற்றை நெஞ்சங்களில் இடம்பெறச் செய்தவர் கண்ணதாசன்.. காதலின் மென்மையை இசையால் மெருகேற்றியவர் எம்எஸ் விஸ்வநாதன்...
எம்எஸ்வி-யின் இசையால் கண்ணதாசன் பாடல்கள் வலிமை பெற்றனவா, அல்லது கண்ணதாசன் வரிகளால் எம்எஸ்வியின் இசைக்கு இனிமை கூடியதா என வியக்காதார் இருக்க முடியாது.
பாசம், குடும்ப உறவுகள் சார்ந்த பாடல்களில் கண்ணதாசனுடன் எம்எஸ்வி கைகோர்த்து நிகழ்த்திய மாயாஜாலங்கள் இனி எந்தக் காலத்திலும் சினிமாவில் காண முடியாத பொற்காலங்கள்.
சோகம், இழப்பு, பிரிவு, மரணம் போன்ற மானுடத் தத்துவங்களைக் கடைகோடி மக்களுக்கும் பாடல்களாகக் கொண்டு சேர்த்தவர்கள் கண்ணதாசன்- விஸ்வநாதன் ஆயிரக்கணக்கான பாடல்களில் இசையாக எம்எஸ்வியும், வரிகளாக கண்ணதாசனும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல…
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu