அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை
Jul 18, 2025
முகப்பு
மனைவியின் கல்லறை அருகே ஒரு குடில்; விரட்டப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கில் முகத்தைக்கூடப் பார்க்காமல் சென்ற ‘பாச’ மகள்!
Jun 25, 2025 12:29 PM
126
முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக..! “கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது”
முத்துக்கு முத்தாக நான்கு பிள்ளைகள்...சொத்துக்காக விரட்டப்பட்ட தந்தை... மனைவியின் கல்லறை அருகே ஒரு குடில் அமைத்து வாழ்ந்து வந்த சோகம்... அநாதை பிணமாய் அடக்கம் செய்யப்பட்ட தந்தையின் இறுதிச்சடங்கில், முகத்தைக்கூடப் பார்க்காமல் சென்ற பாச மகளின் ஈவு இரக்கமற்ற செயல்... இப்படி இதயம் உருகவைக்கும் சோக சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பொற்றைவாரம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது செல்லச்சாமி. இவருக்கு திருமணமாகி ரோசிலி என்ற மனைவியும் மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் என நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில், செல்லச்சாமி தனது நான்கு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனையடுத்து, பிள்ளைகள் அனைவரும் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், செல்லச்சாமி அவருக்கு சொந்தமான வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த 10 வருடங்களுக்கு முன் அவரது கடைசி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூரப்படுகின்றது. அதோடு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவியும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் செல்லச்சாமி தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இவருக்கு சொந்தமான சொத்தை இவரது பாச மகள் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து, சொத்தை எழுதி வாங்கிய பாச மகள் அந்த சொத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரை மகள் உட்பட மகன்கள் கவனிக்காமலும் வீடுகளில்கூட இடம் கொடுக்காமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அனாதையாக்கப்பட்டு, உறங்குவதற்குக்கூட இடம் இல்லாமல் பரிதவித்த முதியவர் செல்லச்சாமி, தனது மனைவியின் கல்லறை அருகே ஒரு குடில் அமைத்து ஒரு கட்டில் போட்டு, மழையிலும் வெயிலிலும் வாடியவாறு அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் உணவை சாப்பிட்டப்படி, பரிதாபமாக கிடந்து வந்துள்ளார்.
இதனால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, உடல் முழுவதும் புண் ஏற்பட்டு புழுக்கள் உருவாகி சிரமப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், முதியவர் செல்லச் சாமியை மீட்டு உடலை சுத்தம் செய்து, புத்தாடைகள் உடுத்தி, ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்தனர்.
காப்பகத்தில் தங்கி இருந்த முதியவர் செல்லச்சாமி, காலை உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராததை தொடர்ந்து, காப்பகத்தில் சேர்த்த சமூக ஆர்வலர்களே இணைந்து, செல்லச் சாமியின் மனைவியை அடக்கம் செய்திருந்த இடத்திற்கு அருகில் பள்ளம் தோண்டி, இறுதி சடங்குகள் நடத்தி அடக்கம் செய்தனர்.
இந்தநிலையில்தான், அங்கு வந்த அவரது பாச மகள், இறுதி சடங்குகள் நடப்பதற்கு முன்பே தந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல், அலட்சியமாக அங்கிருந்து திருப்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது செயல், அங்கு நின்றிருந்த ஊர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியது.
முத்துக்கு முத்தாக வளர்த்த பிள்ளைகள்... ஆனால், சொத்துக்கு சொத்தாக வளர்ந்து, சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டதும் தந்தையை விரட்டிவிட்டு, அவரது இறுதிச்சடங்கைக்கூட செய்யாமல் அநாதையாக்கிவிட்டு சென்றது, “கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது” என்கிறார்கள், அப்பகுதி மக்கள் வேதனையோடு!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu