முகப்பு
அரிவாளுடன் காவல் நிலையம் ஓடிய 8 ஆம் வகுப்பு மாணவன் இந்த அவலத்திற்கு யார் பொறுப்பு..! கேலிப்பேச்சுக்கு ... அரிவாள் வீச்சா?..
Apr 16, 2025 12:26 PM
203
பள்ளி மாணவன் கையில் அரிவாள் எடுக்க என்ன காரணம் ? மாணவர்களின் கேலிப்பேச்சு அரிவாள் வீச்சுக்கு காரணமா ?
கதையை ரத்தமும் சதையுமாக இயல்பாக சொல்கிறேன் என்று... நெல்லை மாவட்டம் அல்வாவுக்கு மட்டுமல்ல அருவாவுக்கும் பேமஸ் என்று டயலாக் வைத்து.. உசுப்பேற்றி விட்ட சினிமாக்காரர்களின் சேட்டையால் இன்று பள்ளி மாணவன் கையில் அரிவாள் எடுத்து சக மாணவனையும் , ஆசிரியையும் வெட்டும் அவலம் அரங்கேறி இருக்கின்றது.
பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவனை சக மாணவன் ஒருவன் , வகுப்பறையில் வைத்து அரிவாளால் வெட்டியுள்ளான். அதனை தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அத்தோடு நிற்காமல் கையில் அரிவாளுடன் தப்பிச்சென்ற சிறுவன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைய மிரண்டு போயிருக்கிறார்கள் போலீசார்.
உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செல்ல, தகவல் அறிந்து அதிர்ந்து போய் வந்திருக்கின்றனர் கல்வி அதிகாரிகள் அங்கு நடந்தது என்ன ? என்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் பென்சில் பிரச்சனையில் அந்த சிறுவன் , சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். இருவரும் சிறுவர்கள் தானே பெரிய பகை எல்லாம் கிடையாது என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்
அதே நேரத்தில் போலீசார் கூறும் காரணம் நம்பும்படியாக இல்லை என்று வெட்டுப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்தார். வெட்டி விட்டு காவல் நிலையம் செல்கிறான் என்றால் பின்னணியில் வேறு யாரோ இருக்கின்றனர் ?என்று சந்தேகம் தெரிவித்தார்
தங்கள் வீட்டு பிள்ளை பள்ளிக்கூடம் செல்ல வே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வெட்டுப்பட்ட சிறுவன் மிகுந்த பயத்தில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் தெரிவித்தனர்
இந்த அரிவாள் வெட்டு விவகாரம் கேள்வி பட்டு மாணவ மாணவியர்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பற்ற பள்ளியில் இருந்து தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
பல்வேறு தரப்பினரும் பள்ளியில் நடந்த இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காலை முதல் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைத்த அரிவாளால் வெட்டிய மாணவன், சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
முதலில் பென்சில் பிரச்சனை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு மாணவர்களுக்கிடையே செய்யப்பட்ட வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கேலிப்பேச்சு காரணமாக இருந்துள்ளது தெரியவந்ததாக கூறப்படுகின்றது. வெட்டுப்பாட்ட மாணவன் ஏற்கனவே இந்த பள்ளியில் படித்து வரும் நிலையில் , வெட்டிய மாணவன் இந்த கடந்த கல்வி ஆண்டில் தான் இந்த பள்ளியில் சேர்ந்திருக்கிறான். விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்கும் அவன் படிப்பிலும் கெட்டிக்காரனாக இருந்துள்ளான். வகுப்பில் 3 வது மதிப்பெண் பெற்று வந்த நிலையில் தான் சக மாணவனுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கு முன்பாக அந்த மாணவனுக்கு பெற்றோர் புதியதாக பென்சில் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளனர், அது மாயமான நிலையில் அதே போன்ற பென்சிலை வெட்டுப்பட்ட மாணவன் கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. தனது பென்சிலை எடுத்து வைத்திருப்பதாக கூறி கேட்டதால் இரு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை அப்போதே பேசி தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இது மட்டுமே அரிவாள் வெட்டுக்கு காரணமில்லை என்று சொல்லப்படுகின்றது.
அரிவளால் வெட்டிய மாணவன், விளையாட்டில் ஆர்வத்துடன் இருப்பதால் அவன், நடந்து செல்லும் விதத்தை வைத்து அவனை , வெட்டுப்பட்ட மாணவன் தினமும் கேலி செய்து வந்ததாக கூறப்படுகின்றது. படிப்பது 8 ஆம் வகுப்பு என்றாலும் வயதுக்கு மிஞ்சிய பேச்சு பேசியதாகவும், இதனால் அவன் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளான்.
இந்த நிலையில் தான் தன்னை தொடர்ந்து இழிவு படுத்தி வரும் மாணவனை வெட்டுவதற்காக வீட்டில் இருந்து அரிவாளை புத்தகப் பையில் மறைத்து பள்ளிக்கூடத்திற்கு எடுத்து வந்துள்ளான். வழக்கம் போல வம்பிழுக்க ஆரம்பித்ததும் அரிவாளை எடுத்து இரு இடங்களில் வெட்டியதாகவும், தன்னை பிடிக்க முயன்ற ஆசிரியை கையிலும் வெட்டியதாகவும் சம்பந்தப்பட்ட சிறுவன் தன்னுடைய ஆதங்கத்தை போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே கேலி கிண்டல் பேச்சுக்களை சகஜம் என்றாலும் எல்லை மீறும் ஆபாச பேச்சுக்களை ஆரம்பத்திலேயே ஆசிரியர்கள் தடுத்திருந்தால் இந்த விவகாரம் அரிவாள் வெட்டு வரை போயிருக்காது என்று கூறப்படுகின்றது. கொலை செய்து விட்டு காவல் நிலையத்துக்கு அரிவாளுடன் சரண் அடைவதை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்பதாக கூறி அந்த சிறுவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக கூறப்படுகின்றது.
சமூகத்துக்கு என்னமாதிரியான பாடத்தை திரைப்பட இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிரார்கள் என்பதற்கு இந்த அரிவாள் வெட்டு சம்பவமே சாட்சி . அதே நேரத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் சக மாணவனை மதிக்க கற்றுக்கொடுங்கள் கிண்டல் கேலி பேச்சுக்கள் விபரீதத்தில் முடியும் என்று எச்சரியுங்கள் என்று சுட்டிக்காட்டும் போலீசார், கூடுமானவரை பள்ளி செல்லும் குழந்தைக்ளின் கையில் ஸ்மார்ட் போன்களை கொடுத்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அறிவை மலுங்கடிக்காதீர் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பது பழமொழி, இப்ப காலம் மாறிபோச்சி, அந்த குழந்தை நல்லவராவதும் கெட்டவராவதும் சேரும் சேர்க்கையினிலே என்பது புதுமொழி..! பள்ளிக்கூடத்திற்கு படிக்க செல்கிறோம் என்பதை மறந்து யார் கெத்து ? யாரு பெருசு ? என்று சண்டித்தனம் செய்தால் படிப்பும் கெட்டு வாழ்க்கையும் வீணாகும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் மாணவர்களின் மண்டையில் உறைக்கும் வகையில் கொட்டிச் சொல்லிக் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்... படிக்கின்ற காலத்தில் கையில் அரிவாளை தூக்கினால் பாதை மாறும்... குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu