BIG STORIES
கழுத்துல 3 இன்ச் அறுத்திருக்கான்.. அவன மாதிரிதாங்க இருப்பா என் பாப்பா!" நடந்தது என்ன? தாயின் பதறவைக்கும் வாக்குமூலம்!
Jul 24, 2025 04:12 PM
182
தனது அப்பா தன்னை வெளியில் அழைத்து செல்கிறார், என்றதும் அந்த ஆறு வயது பெண் குழந்தை எப்படிப்பட்ட மகிழ்ச்சியோடு, என்னென்ன எதிர்பார்ப்புகளோடு, கிளம்பி சென்றிருக்கும்?
ஒரு ஹோட்டலுக்குள் செல்லும்போது, அப்பா தனக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக்கொடுக்கப்போகிறார் என்கிற ஏக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் நம்பித்தானே அப்பாவின் கைப் பிடித்து, அந்த குழந்தை ஆசையாக சென்றிருக்கும்?
அப்படிப்பட்ட கொண்டாட்ட மனநிலையில் அந்த தனியார் தங்கும் அறையில் இருந்த, அந்த குழந்தையின் கழுத்தை, அறுக்க அந்த அப்பனுக்கு எப்படித்தான் மனம் வந்தது?” மனமே ஆறாமல், ரணத்தோடு கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள், அந்த கொடூர தகப்பன் செய்த படுகொலை செய்தியைப் பார்த்த, பொதுமக்கள்.
அம்மா - அப்பா ஒன்று சேர்ந்து விடுவார்கள். அவர்களுடன் ஓடியாடி, விளையாடி, மகிழ்ச்சியாக வாழப்போகிறோம் என எத்தனை எத்தனை ஆசைகளையும் கனவுகளையும் சுமந்துகொண்டிருந்திருக்கும் அந்த பிஞ்சு குழந்தை?
ஆனால், எல்லாம் நிராசையாய் மாறிப்போய், நம்பவைத்து கழுத்தறுபட்ட நிலையில், குளிர்சாதன பெட்டிக்குள் மூச்சற்று கிடக்கிறது, அந்த சின்னஞ்சிறு பிள்ளை.
அதைப்பார்த்து தலையில் அடித்துக்கொண்டு, ஈரக்குலை நடுங்க கதறிக்கொண்டிருக்கிறார்கள், சிறுமியின் தாயும் அவரது உறவினர்களும்.
“குழந்தையோட கழுத்துல மூணு இஞ்ச் அறுத்திருக்கானாம். குழந்தை இறந்துப்போச்சு, அவன் சாகல எப்படி? கடைசியா என் குழந்தை என்னை, அம்மான்னு கூப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? அவனை மாதிரியேதான் சார் இருக்கும் என் பாப்பாவோட முகம். அந்த குழந்தையை கொல்ல எப்படி மனசு வரும்?” என இதயமே வெடித்து சிதறும் அளவுக்கு, கதறி துடிதுடித்துக்கொண்டிருக்கிறார், குழந்தையை பறிகொடுத்த, தாய் ரெபாக்கா.
ஆறு வயது பெண் குழந்தையை பெற்ற தகப்பனே துடிதுடிக்க கழுத்தை அறுத்து, படுகொலை செய்யும் அளவுக்கு போனது ஏன்? அப்படி என்ன பிரச்சனை? பட்டா கத்தியுடன் வந்து மிரட்டிய கணவன் சதீஷ்குமார் மீது, குழந்தையின் தாய் ரெபாக்கா, காவல்நிலையத்தில் முன்கூட்டியே கொலைமிரட்டல் புகாரை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தபோதும், போலீஸார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிறுமி படுகொலையில் நடந்தது என்ன? என்பது குறித்து விவரிக்கிறது, இந்த கிரைம் செய்தி தொகுப்பு...
சிறுமியின் தாய் ரெபாக்கா கதறி அழுதபடி மேலும் கூறிய தகவல்கள், கதிகலங்கவைக்கின்றன. “அவன் சரியில்லைன்னுதான் அவன் வேணாம்னு முடிவு எடுத்தேன். கடைசியா என் குழந்தை என்னை அம்மான்னு கூப்பிட்டு, எத்தனை நாள் ஆகுது தெரியுமா? என் கண்ணுலக் கூட காட்டல சார் அவன்” என கதறி அழும் தாய் ரெபாக்கா, தான் சதீஷ்குமாரிடமிருந்து பிரிந்து குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தது குறித்தும் கூறுகிறார்.
“அவளுக்கு அம்மாவும் வேண்டும், அப்பாவும் வேண்டும். இரண்டு பேரிடமும் குழந்தை இருக்கட்டும் என்றுதான் எல்லாவற்றிற்குமே அமைதியாக இருந்தேன். சைக்கோ... மனசாட்சியே இல்லாம கடைசியாக என் குழந்தையை கொண்ணுட்டான் சார்... அவனை மாதிரியேதான் சார் இருக்கும். அப்படிப்பட்ட குழந்தையை கொல்ல எப்படித்தான் மனசு வந்ததுன்னே தெரியல. ஐயோ... என் குழந்தை எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்?” என மீண்டும் மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு கதறுகிறார்.
இரவு நேரங்களில் குடித்துவிட்டு வரும் சதீஷ்குமார், தொடர்ந்து அசிங்க அசிங்கமாக பேசுவதோடு, மனைவி ரெபாக்காவை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்வார் என்றும் கூறப்படுகிறது.
‘குழந்தையைக்கூட தரமாட்டேன். நான், சாவடிச்சிடுவேன். குழந்தை உன்கிட்ட இருக்கக்கூடாது’ என சொல்லிக்கொண்டிருந்த சதீஷ்குமார், சொன்னதைப்போலவே செய்வார், என யாருமே கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை.
அதுவும், “தனது குழந்தைக்கு பிங் கலர் பிடிக்கும் என்பதால் அவளுக்கு பிடித்த நிறத்தில் வீடெல்லாம் கட்டிக்கிருக்கிறோம். ஆனால், இப்படி ஆகிவிட்டதே” என கதறும் தாய் ரெபாக்கா, கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட சதீஷ்குமார் பெரிய கத்தியை எடுத்துவந்து மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.
இதையெல்லாம் தாண்டி, ஏற்கனவே குழந்தைக்காக பலமுறை சமாதானம் ஆகி சதீஷ்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார், ரெபாக்கா. ஆனால், ஒவ்வொரு முறையும் அடித்து சித்திரவதை செய்து வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது.
எப்போதும் பழிவாங்கும் எண்ணத்தோடும், பணம் இருக்கிறது என்கிற அதிகார திமிரோடும் சதீஷ் குமார் மற்றும் குடும்பத்தினர் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“யார்க்கிட்ட வேணா போ. என்ன வேணா பண்ணு. எங்கிட்ட காசு இருக்கு. குடும்பமே அப்படித்தான். நாங்க பார்த்துப்போம்” என்று சதீஷ் குமாரின் குடும்பம் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
சதீஷ்குமாரின் தாய்க்கூட, தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லி சொல்லவில்லை. சதீஷ்குமாரின் தவறுகளுக்கு அவரது குடும்பத்தினர், துணையாக நின்றதன் விளைவுதான் இதற்கெல்லாம் காரணம் எனவும் குற்றச்சாட்டியுள்ளார், ரெபாக்கா.
இதைவிட, ஒவ்வொரு முறையும் சதீஷ்குமார் அடித்து துன்புறுத்தும்போதெல்லாம், வீட்டில் உள்ள சதீஷ்குமாரின் அம்மா, அப்பா, அக்கா யாருமே தடுக்கமாட்டார்கள், கேட்கவும் மாட்டார்கள். மேலும், சதீஷ்குமாருடன், குடும்பமே சேர்ந்து தன்னை சித்திரவதை செய்தார்கள். அந்த குடும்பத்தினரால்தான் தனது குழந்தை தன்னை விட்டு போய்விட்டது என கதறி அழுகிறார், தாய் ரெபாக்கா.
“7 வருடங்களா எப்போ பார்த்தாலும் அடிப்பான். ஃபுல்லா குடி. ட்ரக் அடிக்டட்-ஆன்னு தெரியல. ஒன்றரை மணிநேரம் கழித்து வந்து Sorry கேட்பான். கால்ல விழுந்து மன்னிப்பு கேட்பான்.
குழந்தை இருக்காளேன்னு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். காலையில வெளிய கூட்டிக்கிட்டு போறது, ஜுவல்ஸ் வாங்கித் தர்றதுன்னு, அப்படி இருப்பான். நைட் ஆனா ஏதோ ஒரு டென்ஷன்ல வந்து, எல்லா டென்ஷனையும் எங்கிட்ட காட்டுவான். குழந்தை இருக்காளேன்னு எல்லாத்தை பொறுத்து பொறுத்து போனேன். என் பொண்ணு செத்ததுக்கு காரணமே அந்த குடும்பம்தான். அந்த குடும்பத்தை சும்மா விடாதீங்க. சின்ன குழந்தைங்க...எவ்ளோ துடிச்சிருப்பா என் குழந்தை?” என கதறி துடித்த ரெபாக்கா, தன்னுடன் குழந்தை வளராமல் சதீஷ்குமாரிடம் எப்படி வளர்ந்தது? என்பது குறித்த பின்னணியையும் கூறியுள்ளார்.
”அவன் கேர்கடர் சரியில்லை. அவன் வேணாம்னு சொல்லிட்டுதான், நான் வெளிய வந்துட்டேன். ஒரு வருஷம் ஆகப்போகுது. பாப்பா என்கிட்டதான் இருந்தா. ஆனா, ஸ்கூலுக்கு போகும்போது, பாப்பாவை கூட்டுகிட்டு போயிட்டான்.
அவங்க அம்மாவும் சேர்ந்து அவனோட அக்காவீட்டுல கொண்டுபோயி பாப்பாவை வெச்சுக்கிட்டாங்க. அவ்ளோதான், ஒவ்வொரு நாளும் டெய்லி வீட்டுக்கிட்ட வந்து சண்டை போடுவான். கடைசிவரைக்கும் என் குழந்தையை காட்டவே இல்ல சார்.
நானும் ஒவ்வொரு நாளும் ஃபோன் பண்ணி கேட்பேன். அட்லிஸ்ட் பாப்பாவோட குரலையாவது கேட்கணும். ஒரு வீடியோ காலாச்சும் பண்ணுன்னு...கொடுக்கமாட்டான். டிவோர்ஸும் அப்ளை பண்ணிட்டேன். ‘என்னைக்கு குழந்தை உன்கிட்ட வருதோ அன்னைக்கு நானும் பாப்பாவும் செத்துருவோம்’ அப்படின்னான். பாப்பா நல்லா இருந்தா போதும். டிவோர்ஸ் கேஸை கிடப்பில் போட்டுட்டேன். கடைசியில இப்படி பண்ணிட்டான் சார்.
எத்தனையோ சான்ஸ் கொடுத்தேன். அந்த குழந்தைக்காக... வாழ்ந்துட்டு போலாம் வாழ்ந்துட்டு போலாம்னு! நைட்டு ஆனா போட்டு அடிக்கிறது. ரெண்டரை மணிநேரம் மூணு மணி நேரம் போட்டு அடிக்கிறது. அப்புறம் கால்ல விழுந்து கெஞ்சி மன்னிப்பு கேட்பான். அப்புறம் பார்த்தா கேரக்டரே சரியில்ல.
எனக்கு லைஃபே வேணாம்னுதான் குழந்தையை கூட்டிக்கிட்டு வந்துட்டேன். மனரீதியா எவ்ளோ தொந்தரவுக்குள்ளாகியிருப்பா? அவள் நல்லாருப்பாள்ன்னுதான் இந்த முடிவையே எடுத்தேன். அவள் நல்லா இருக்கணும். நிம்மதியா படிக்கணும். டார்ச்சர் அனுபவிக்கவேணாம்.
அப்படின்னுதான், குழந்தையை என் அம்மா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டேன். ஆனா, குழந்தையை தூக்கிட்டுப்போயி அக்கா வீட்டுல வெச்சிருந்து, இப்படி பண்ணிட்டான் சார்” என பின்னணி குறித்து விவரிக்கிறார், ரெபாக்கா.
இந்த நிலையில்தான், படுகொலை நடப்பதற்கு முந்தைய நாள், அதாவது 21 ஆம் தேதி ரெபாக்கா ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “20-7-2025 அன்று, இரவு 11 மணியளவில் எனது கணவன், அம்மா வீட்டிற்கு கத்தி எடுத்து வந்து, என்னையும், குடும்பத்தினரையும் மிரட்டினார்.
நானும் எனது கணவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். மீண்டும் 21 ஆம் தேதி காலை 8 மணியளவில் வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது, அரசுப்பள்ளி அருகில் வந்து என்னை மிரட்டி என் வண்டி சாவியையும் , பிடுங்கி வைத்துக்கொண்டு சண்டையிட்டார்.
கடந்த ஆண்டு இதேபோல் பிரச்சனை செய்ததால், அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 6 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்தார். எனது குழந்தையையும் என்னிடம் தராமல் என்னை மிரட்டுகிறார்.
நான், குழந்தையை கேட்டால் என்னை கொலை செய்வேன் என்று மிரட்டுகிறார், அல்லது அவர் குழந்தையை ஏதாவது செய்துவிடுவேன் என்று கூறுகிறார்’ என புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், ஓட்டேரி காவல்நிலைய போலீஸார் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், தன் மகளை மிகக்கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதுவும், மகளைக் கொன்றுவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தவர், உஷாராக தனது சகோதரிக்கு ஃபோன் செய்து வரவைத்து, உயிர் தப்பியிருக்கிறார். ஆகவே, அவரது நோக்கம் ரெப்பாக்காவை பழிவாங்க, குழந்தையை கொல்வதுதான் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரெபேக்காவின் உறவினர்கள் ஓட்டேரி மங்களாபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20 ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்தின் போது, சதீஷை கைது செய்திருந்தால் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் எனவும், அலட்சியமாக செயல்பட்ட ஓட்டேரி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு பெரம்பூர் கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலை கண்டு, ரெபேக்கா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்தநிலையில், குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த சதீஷ் குமாருக்கு 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவல் என ஆலந்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீபிகா உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சை அளித்து, அதன் பின் அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலுள்ள கைதிகள் வார்டுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
6 வயது சிறுமியை பெற்ற தந்தையே கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu