முகப்பு
நாட்டையே உலுக்கிய பகல்காம் தாக்குதல்.. மூளையாக செயல்பட்ட தீவிரவாத கும்பல் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட்' பின்னணி தெரியுமா?
Apr 23, 2025 04:43 PM
1049
தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத கும்பல்... 'தி ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட்' பின்னணி தெரியுமா?
ஜம்மு காஷ்மீரில் பகல்காமில் உள்ள பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட்' அமைப்பு யாருடையது? அதன் பின்னணி குறித்து பார்க்கலாம்..
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமின்றி கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகளில் சிலர் கையில் சிக்கியவர்களிடம் என்ன மதம் என்று கேட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்
இந்த கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட் பொறுப்பேற்றுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெர்வித்து ஷேக் சஜ்ஜாத் குல் என்பவரால் TRF என அழைக்கப்படும் ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது.
பாகிஸ்தானை மையமாகக் கொண்ட செயல்பட்டு இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பாக TRF இயங்கி வருவதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட் இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மதச்சார்பற்ற இயக்கமாக ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும் இந்த இயக்கம் இதுவரை நடத்திய தாக்குதலில் பொதுமக்களை குறிப்பாக காஷ்மீர் இந்துக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் மீதும், காஷ்மீரின் அரசியல்வாதிகள் மீதும் இந்த இயக்கம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ரெசிஸ்டன்ஸ் பிரெண்ட் இயக்கத்தின் குறிக்கோள் காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். எனவே அதனை முன்னிறுத்தி பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த இந்த இயக்கத்தை, கடந்த 2023ல் இந்திய அரசு தடை செய்தது. மேலும், இந்த இயக்கத்தின் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல்லை தேடப்படும் பயங்கரவாதியாகவும் இந்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தான் விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துவந்ததை கண்காணித்து இதுப்போன்ற ஒரு கொடூர தாக்குதலை இந்த அமைப்பு அரங்கேற்றி இருக்கிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது இந்த தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களை NIA அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர். இந்த தாக்குதலில் பெண்களை விட்டுவிட்டு ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu