BIG STORIES
பிரியாணி அபிராமிக்கு தண்டனை கொடுத்த நீதிபதி சொன்னது என்ன ?.. சாப்பிட செல்லாமல் தீர்ப்பை வாசித்தார்
Jul 24, 2025 12:20 PM
280
பூமியில் பல கனவுகளோடு வாழ வந்த இரு பிஞ்சு குழந்தைகளை , காம இச்சைக்கு இடையூறாக இருப்பதாக கருதி கொலை செய்த வழக்கில் கைதான பிரியாணி அபிராமிக்கும், அவரது காதலனுக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளார்.
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில் பாலில் அதிக அளவு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தனது மகன் மற்றும் மகளை கொலை செய்த வழக்கில் டிக்டாட் அபிராமி , அவரது காதலன் பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பான விசாரணை முதலில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திலும், மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திலும் நடந்து வந்தது.
மகிளா நீதிமன்றத்திற்கு நீதிபதி இல்லாத நிலையில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்றும் காலை 10 மணியில் இருந்து 10:30 மணிக்குள் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்தை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்று 11;30 மணிக்கு மேல் தான் அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
காலதாமதமாக அழைத்து வந்த போலீசாருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி செம்மல், இந்த வழக்கிற்காண தீர்ப்பை அதிகாலை 3;30 மணிவரை அமர்ந்து எழுதி விட்டு சென்றிருக்கிறேன் என்றால் இந்த வழக்கு எந்த அளவிற்கு என்னை பாதித்திருக்கும் என்று பாருங்கள்.
இருவரையும் நீதிமன்றம் அழைத்து வருவதற்கு காலதாமதத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடபோவதாக எச்சரித்தார்.
அய்யா, தனது குழந்தைக்கு உடல் நலக்குறைவு என்பதால் மருத்துவமனை அழைத்து சென்றேன், அதனால் காலதாமதம் ஆனது என்று கூறி காவல் ஆய்வாளர் வருத்தம் தெரிவித்தார் .
அதனை ஏற்றுக் கொண்டு, மதியம் 12 மணிக்கு மற்ற அனைத்து வழக்குகளின் விசாரணையையும் தள்ளி வைத்து விட்டு, அபிராமி வழக்கை கையில் எடுத்து தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார் நீதிபதி செம்மல், அப்போது முகத்தை துப்பட்டாவால் மூடிக்கொண்டு நின்ற அபிராமியையும் முககவசம் அணிந்திருந்த மீனாட்சி சுந்தரத்தையும் அதனை கழட்ட உத்தரவிட்ட நீதிபதி, இப்படி மூடிக் கொண்டு நின்றால் இவர்கள் தான் என்று எப்படி அடையாளம் காண முடியும் ? என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். உடனடியாக முகமூடியை இருவரும் கழற்றினர்
தொடர்ந்து தீர்ப்பை வசித்த நீதிபதி, இந்த கொலை வழக்கில் குற்றத்திற்கு மூலகாரணமாக இருந்ததால் முதல் குற்றவாளி அபிராமி என்றும் மீனாட்சி சுந்தரம் 2 வது குற்றவாளி என்றும் , தான் மதியம் சாப்பிட்டு விட்டு 1 மணி நேரம் கழித்து வந்து தண்டனை குறித்த விவரங்களை வாசிப்பதாக கூறிச்சென்றார்.
ஆனால் அடுத்த 10 வது நிமிஷமே நீதிபதி செம்மல் , நீதிமன்றத்துக்கு திரும்பினார், இப்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும்? அதனால் தண்டனை விவரங்களை வாசித்த பின்னரே சாப்பிட இருப்பதாக கூறி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.
இந்த வழக்கில் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் இருந்தாலும் நான் வாழ்வது காந்தி தேசம், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்று பழிக்கு பழியாக தண்டனை வழங்க முடியாமல் சூழ்நிலை தடுக்கின்றது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கூட ஒரு வழக்கின் தீர்ப்பில் இதனை சுட்டிக்காட்டி உள்ளார். பல வழக்குகளை உதாரணமாக சொல்ல முடியும், இருந்தாலும் நீங்கள் இருவரும் செய்திருக்க கூடிய குற்றம் கொடூரமானது.
ஒரு தாயே தான் பெற்ற இரு குழந்தைகளை, தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒவ்வொரு தாயும் தான் 10 மாதம் சுமந்து பெறுகின்ற பிள்ளைகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பர். அந்த இரு குழந்தைகளும் இந்த பூமிக்கு எவ்வளவு கனவுகளுடன் வந்திருக்கும், உங்கள் காம இச்சைக்கு இடையூறாக இருப்பதாக கருதி அவர்களை கொலை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார் நீதிபதி செம்மல்
உங்களுக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லையென்றால் பிரிந்து சென்றிருக்கலாமே, குழந்தைகளை கொலை செய்ய வேண்டிய அவசியமே இல்லையே, நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனை பெண்கள் தவமிருக்கிறார்கள்? அப்படி இருக்க இது மன்னிக்க இயலாத குற்றம். எனவே முதல் குற்றவாளியான அபிராமிக்கும், அவருக்கு இணையாக மீனாட்சி சுந்தரத்திற்கும் வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன், இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன் என்று நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்
தீர்ப்பை கேட்டதும் அபிராமி கதறி அழுது மயக்கம் அடைந்தது போல விழுந்தார். அவரை வெளியில் அழைத்துச்சென்று அசுவாசப்படுத்தி அழைத்து வந்தனர்.
மீனாட்சி சுந்தரமும் அழுது கொண்டே, தான் ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன் தனது தாய் தந்தை இருவரும் 70 வயதை கடந்தவர்கள் அவர்களுக்கு உடன் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதால் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த பொறுப்புணர்வு காம இச்சைக்காக இரு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும் இரக்கம் காட்ட இயலாது என்றார் நீதிபதி செம்மல், அதே போல அபிராமியும் தான் தனது பெற்றோரை கவனித்துக் கொண்டு மீதி காலத்தை கழிக்க வேண்டும் அதனால் தனது தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
உங்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்ற நிலையிலே , காந்தி தேசம் என்பதால் அந்த தண்டனையை வழங்க இயலவில்லை, நீங்கள் இரு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பாக இவற்றை எல்லம் யோசித்திருக்க வேண்டும் என்று இருவரது கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதி செம்மல். இருவரும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தீர்ப்புக்கு பின்னர் கதறி அழுதபடியே முகத்தை கையால் மூடிக் கொண்டு அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனர்.
அழுது அடம்பிடித்த அபிராமி இத்தனை நாட்கள் சிறையில் இருந்தாலும் , இருகைகளிலும் நீளமாக நகம் வளர்த்து நெயில் பாலீஸ் போட்டு, முகத்தில் மேக்கப்புடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தது குறிப்பிடதக்கது. அபிராமியின் அழுகை கச்சேரியால் காஞ்சிபுரம் மகிளா நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu