முகப்பு
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவர்கள்; காப்பாற்றிவிட்டு தன்னுயிரை விட்ட, செருப்பு தைக்கும் தொழிலாளி!
Jun 03, 2025 05:24 AM
130
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவர்கள்;
“யாருய்யா நீ? உன்னோட உயிரைப்பற்றிக்கூட கவலைப்படாம, ரெண்டு பிஞ்சு உசிரைக் காப்பாற்றிட்டு, உயிரை விட்டிருக்க... நீ ஹீரோய்யா” எனக்கூறி மெய்ச்சிலிர்க்கும் அளவுக்கு, கண்கலங்கவைக்கிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம்!
ஜூன் -1 ஆம் தேதி...கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணை வழியாக இரண்டு பள்ளி மாணவர்கள், நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
அப்போது, திடீரென, இரண்டு மாணவர்களையும் ஆற்றுநீர் இழுத்துசென்றது. “அய்யய்யோ... காப்பாத்துங்க” என அலறல் சப்தம் கேட்க... அப்போது, ஆற்றிற்கு குளிக்க வந்த, 60 வயது பீட்டர் என்பவர், பதறியடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளார்.
இரண்டு மாணவர்களும் ஆற்றுத் தண்ணீரில் உயிருக்குப் போராடியபடி தத்தளித்துக்கொண்டிருக்க, தன்னுயிரைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், ஆற்றில் குதித்து, இரண்டு மாணவர்களையும் காப்பாற்றியுள்ளார், பீட்டர். ஆனால், அவரை தண்ணீர் இழுத்துச்சென்றது.
எவ்வளவு போராடியும் அவரால் கரையேற முடியவில்லை.
வெகுநேரம் ஆகியும் அவர் காணாமல் போனதால், குழித்துறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்து, நீருக்குள் மூழ்கிய பீட்டரை 24 மணிநேர தேடுதலுக்குப்பிறகு, மாலை 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.
மாணவர்களின் உயிரைக்காப்பாற்றிவிட்டு தன்னுயிரையே இழந்த, அவரது சடலத்தைப் பார்த்து பலரும் கண்கலங்கிப் போனார்கள்.
குழித்துறைப் பகுதியைச் சேர்ந்த 60 வயது பீட்டருக்கு ஒரு பெண், ஓர் ஆண் குழந்தை என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து தனது மனைவியையும் குடும்பத்தையும் காப்பாற்றிவந்துள்ளார்.
தற்போது, அவர் இரண்டு மாணவர்களின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மீட்புப் பணிக்கு, தலைமை தாங்கிய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பர்ட்-டம் கோரிக்கை வைத்த நிலையில், மக்களின் கோரிக்கையை, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்ற முயற்சி எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தங்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தவர்களின் உயிரைக் காப்பாற்றும் ஒவ்வொருவருமே ஹீரோக்கள்தான்.
செருப்பு தைக்கும் தொழிலாளியான பீட்டர், மறைந்தாலும் அந்தப் பகுதியின் ஹீரோவாக உயிர்பெற்றிருக்கிறார்...
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu