முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
தமிழ்நாடு
பூப்பெய்துவது அவள் தவறா ? பள்ளி முதல்வர் - தாளாளர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு..! குழப்பத்தில் போலீசார் உண்மை என்ன ?
Apr 11, 2025 02:29 AM
443
பூப்பெய்துவது அவள் தவறா ? பள்ளி முதல்வர் - தாளாளர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு..! குழப்பத்தில் போலீசார் உண்மை என்ன ?
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து பொதுத்தேர்வு எழுத வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட 3 பேர் மீது சாதி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டை பாளையம் கிராமத்தில் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் பட்டியலின மாணவி கடந்த 5 ந்தேதி பூப்படைந்துள்ளார். இந்த நிலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் , பள்ளிக்கு சென்ற மாணவியின் தாய், மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டு விடகூடாது என்றும் தனது மகளை தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைக்குமாறும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.
அதன்படி 7ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக படியில் அமர வைத்து அறிவியல் தேர்வு எழுதவைத்தனர். இதனை மாணவி வீட்டில் தெரிவித்து கால் வலிப்பதாக கூறி உள்ளார். இதையடுத்து 9ந்தேதி நடந்த சமூக அறிவியல் தேர்வுக்கும் மாணவியை பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்ததாக கூறப்படுகின்றது.
தனது மகளை வகுப்பறைக்கு வெளியே ஒதுக்கி வைத்திருப்பதை கண்டு பதறிப்போன தாய் , அதனை வீடியோவாக பதிவு செய்ததோடு, பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது. “இங்கு அப்படி தான் நடக்கும் நீங்கள் வேண்டுமென்றால் வேறு பள்ளியில் உங்க மகளை சேர்த்துக்கொள்..” எனக் கூறியதாக சொல்லப்படுகிறது எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மக்கள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளரும் மாணவியின் தாத்தாவுமான தம்பு என்பவர் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
வழக்கமாக மாவட்ட ஆட்சிதலைவரிடம் அளிக்கப்படும் புகார்களே, ஒரு வாரம் கழித்து தான் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கைகளுக்கு வந்து சேரும் நிலையில், மாணவி வகுப்பறைக்கு வெளியே அமரவைக்கப்பட்ட வீடியோ மீடியாவில் வெளியான சில நிமிடங்களுக்கெல்லாம் பதறிப்போன கல்வித்துறை , காவல்துறை, வருவாய்துறை, சமூக நலத்துறை என பல்வேறு துறையினரும் அடித்து பிடித்துக் கொண்டு பள்ளிக்கு அடுத்தடுத்து ஆய்வுக்கு சென்றனர்
பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்திய பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் , செய்தியாளர்களிடம் , மாணவியின் தாய் கேட்டுக் கொண்டதற்கிணங்க பள்ளி நிர்வாகம் தனியாக அமரவைத்ததாக தெரிவித்தார். அந்த மாணவியின் தாய் சந்தியாவோ, வகுப்பறையில் தனி டெஸ்கில் தனது மகளை அமர வைப்பார்கள் என்று நினைத்தேன், இப்படி வகுப்பறைக்கு வெளியே தரையில் அமர வைத்து விட்டதாக குற்றஞ்சாட்டி இருக்கின்றார். அந்த மாணவி மட்டும் இல்லாமல் மேலும் 25 மாணவிகள் வெளியே தனியாக தரையில் அமர்ந்து தேர்வு எழுதி இருக்கிறார்கள் என்று தெரிவித்த சிருஷ்டி சிங் இந்த சம்பவம் சாதி ரீதியாக நடக்கவில்லை என்றார்.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்கெல்லாம் மாணவியின் தந்தை சுரேந்திரராஜ் அளித்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் சாதிய வன்கொடுமை வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். பள்ளி முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி, தாளாளர் தங்கவேல் பாண்டியன் ஆகிய 3 பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu