தமிழ்நாடு
ராமேஸ்வரத்தில் +2 மாணவி படுகொலை.. காதலிக்க மறுத்ததாக கூறி கொன்றவன் கைது.. போலீசாரை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆவேசம்..!
Nov 19, 2025 04:34 PM
218
ராமேஸ்வரத்தில், காலையில் பள்ளிக்குச் சென்ற +2 மாணவி, கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் பிள்ளையை கொன்றவனை சுட்டுக்கொல்லுமாறு, போலீசாரை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆவேசமாக கூறினர். மாணவியை கொன்று கைதான நபரை தங்களிடம் ஒப்படைக்க கோரி, காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்களால், பதற்றம் ஏற்பட்டது...
இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி, ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்து வந்தார். காலை வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு பேருந்தில் செல்வதற்காக, வேர்கோடு பேருந்து நிறுத்தம் நோக்கி தனது தோழியுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த, உள்ளூரைச் சேர்ந்த 21 வயது மீனவ இளைஞர் முனியராஜ், திடீரென தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் +2 மாணவி ஷாலினியை குத்தினார். கழுத்தில் குத்தப்பட்ட கத்தி ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு வந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ராமேஸ்வரம் துறைமுக காவல்நிலைய போலீசார், மாணவி ஷாலினியின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி முனியராஜ், கடற்கரையோரம் அமர்ந்திருந்த நிலையில், போலீசார் அவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், ஒரு வாரகாலமாக மாணவியை பின்தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று மாணவி தனது தந்தையிடம் கூறிய நிலையில், சனிக்கிழமை காலையில் முனியராஜின் வீட்டிற்குச் சென்று, அவனை கண்டித்துள்ளார்.
இருப்பினும், அதையெல்லாம் பொருட்படுத்தாத முனியராஜ், மீண்டும், இன்று காலையில் +2 மாணவி ஷாலினி பள்ளிக்குச் சென்றபோது, பின்தொடர்ந்துச் சென்று, வழிமறித்து, காதலிக்குமாறு வற்புறுத்தி, மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு ஷாலினி மறுப்புத் தெரிவித்த நிலையில், திடீரென தாம் மறைத்து வைத்திருந்த, மீன்பிடி வலை பழுதுபார்க்க உதவும் கத்தியால், மாணவியின் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு முனியராஜ் தப்பியதாக, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒருதலை காதலால் பள்ளிக்குச் சென்ற +2 மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை அறிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். சந்தோஷமாக பள்ளிக்குச் சென்ற மாணவி, இப்படி கொலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கவில்லை என கண்ணீர் மல்க கூறிய உறவினர்கள், அந்த கொடூரனை கடுமையான தண்டிக்க வேண்டும் எனக்கூறி ஆவேசமாக தெரிவித்தனர்.
இந்நிலையில், ஷாலினியின் உடல் வைக்கப்பட்ட ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை முன்பு திரண்ட மாணவியின் உறவினர்கள், தங்கள் பிள்ளையை கொன்ற கொடூரனை தங்களிடம் ஒப்படைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த கொடூரனை கடுமையாக தண்டிக்கும் வரை, உடலை வாங்க மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மாணவி உடலை உடற்கூராய்வு செய்ய போலீசார் திட்டமிட்டனர். ஆனால், அதற்கும் உறவினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், ராமநாதபுரத்தில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, ராமேஸ்வரத்திலேயே, மாணவியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
அப்போது பெண் ஒருவர், விடிய, விடிய தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில், மதுபானமும், கஞ்சாவும் விற்கப்படுவதாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு இதனால் பாதுகாப்பு இல்லை என்று கூறினார், காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இதற்கிடையே, ராமேஸ்வரம் துறைமுக காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மாணவியின் உறவினர்கள், கைது செய்து வைக்கப்பட்டிருந்த நபரை தங்களிடம் ஒப்படைக்க கோரி, காவல்நிலையத்தின் உட்புகுந்து தாக்க முயற்சித்தனர். இதனால், காவல்நிலைய கதவுகளை மூடி, போலீசார், அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, கொலையாளியை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி தரப்படும் என ராமேஸ்வரம் ஏஎஸ்பி மீரா உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைத்து வகை போராட்டங்களையும் கைவிட்ட மாணவியின் உறவினர்கள், பள்ளிக்கு புறப்பட்டுச் சென்று படுகொலை செய்யப்பட்ட ஷாலினியின் உடலை பெற்றுச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu