தமிழ்நாடு
மாணவனின் அதிவேகம்.. வீதிக்கு வந்தது குடும்பம்.. இரு உயிர்கள் பலியானது..! பைக்ரேசர்களுக்கு கிடுக்கிப்பிடி எப்போது..?
Nov 06, 2025 03:49 PM
251
ராயப்பேட்டை மேம்பாலத்தில் போட்டி போட்டுக் கொண்டு, அதிவேகமாக பைக் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவனின் பைக் மோதியதில் அப்பாவி வாகன ஓட்டி ஒருவர் பலியானதால் , அவரது வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த , குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமரன்(45) இவர் தி.நகர் ராமசாமி சாலையில் லஷ்சிதா டெக்ஸ்டைல் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி ராஜவேணி (40) என்ற மனைவியும் சுஷ்மா (17), லட்சிதா(7) என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குமரன் ராயப்பேட்டை வீட்டில் இருந்து விமான நிலையம் செல்லுவதற்காக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பீட்டர் சாலை மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆயிரம் விளக்கு மசூதியில் இருந்து ராயப்பேட்டை நோக்கி அதிவேகமாக இரண்டு இருசக்கர வாகனங்களில் போட்டி போட்டு கொண்டு எதிர் திசையில் சென்ற இளைஞர்கள் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் குமரன் மற்றும் வேகமாக பைக் ஓட்டி வந்த சையத் சர்தார் பாஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சையத் உடன் மற்றோரு பைக்கில் அதிவேகமாக சென்ற முகமது ஜோயல்(23) என்ற இளைஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.. மேலும் சிதறி கிடந்த வாகனங்க பாகங்களையும் அப்புறப்படுத்தினர்.
பைக்ரேஸில் ஈடுபட்டு பலியான சையத் சர்தார் பாஷா , ராயப்பேட்டை பேகம் சாகிப் தெருவை சேர்ந்தவர் என்றும் நியூகல்லாரியின் முதலாம் ஆண்டு மாணவன் என்றும் போலீசார் தெரிவித்தனர். தினமும் இரவு 11 மணியளவில் மேம்பாலங்கள் மூடப்படும் நிலையில் 11:15 விபத்து நடைப்பெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரால் பேரிகார்டுகள் போடப்பட்டு மூடப்பட்டு இருந்தால் இளைஞர்கள் எவ்வாறு அங்கு பைக் ரேஸில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், உரிய நேரத்தில் மூடப்பட்டதா? இல்லையா என்பது குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த குமரனின் , ஜவுளிக்கடை வருமானத்தையே நம்பி இருந்த மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் குமரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மனைவி சாலையில் விழுந்து கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
வார இறுதி நாட்களில் பீட்டர்ஸ் மேம்பாலத்தில் இளைஞர்கள் மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பைக் ரேஸில் ஈடுபட்டு உயிரிழந்த கல்லூரி மாணவரின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்ததில், அவர் நீண்ட நாட்களாக பைக் ரேஸில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது. உயர் ரக இருசக்கர வாகனங்களை வாங்கி தரும் இளைஞர்களின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குமரனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பைக் ரேசர்களை, போலீசார் மடக்கி பிடிக்க முயன்றால், அவர்கள் தப்பி சென்று விடுவதாகவும் , நேற்றையை சம்பவத்தில் உயிர் இழந்த கல்லூரி மாணவர் நண்பரின் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி கொண்டு வேகமாக சென்று விபத்தில் சிக்கி உயிர் இழந்து இருப்பதாக தெரிவித்த போலீசார், பைக் ரேசில் ஈடுப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu