முகப்பு
கட்டப்பஞ்சாயத்து காவல்நிலையம்.. வெட்டிச் சாய்க்கப்பட்ட இளைஞர்.. இன்ஸ்பெக்டருடன் கூண்டோடு சஸ்பெண்ட் ஆன போலீஸார்..!
Jun 15, 2025 02:21 PM
155
வெட்டி சாய்க்கப்பட்ட இளைஞர் இன்ஸ்பெக்டருடன் கூண்டோடு சஸ்பெண்ட் ஆன போலீஸார்!
போகும் இடமெல்லாம் காவல்நிலையத்தை கட்டப்பாஞ்சாயத்து நிலையமாக மாற்றிவிடுவார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளானவர்தான், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம். புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்காமல் அசால்ட்டாக செயல்படுவதாக குற்றசாட்டிற்கு உள்ளான இந்த ‘அசால்ட்’ ஆறுமுகம் உட்பட, இவரால தற்போது கூண்டோடு சஸ்பெண்ட் ஆன போலீஸாரின் அலட்சியப் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்துக்கு சர்ச்சைகள் புதிதல்ல. ஏற்கனவே, நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக ஆறுமுகம் இருந்தபோது, முந்திரி வியாபாரியும் விசாரணை கைதியுமான செல்வமுருகன் என்பவர், 2020 ஆம் ஆண்டு நவம்பர்- 4 ஆம் தேதி, மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது மனைவி பிரேமா, தனது கணவர் செல்வமுருகனை போலீஸார் அடித்து சித்ரவதை செய்ததால்தான் உயிரிழந்துள்ளார் என்றும், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை கணவர் உடலை வாங்கமாட்டேன் என்றும் கூறி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் புகார் மனு அளித்தார்.
மேலும், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார், சாத்தான்குளம் லாக்கப் படுகொலை போல, செல்வமுருகனை அடித்தே கொன்றுவிட்டார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.=
மேலும், காவல்நிலையத்தில் துன்புறுத்தப்பட்டதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக கூறி அவரது இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் அப்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்
.
இதனைத் தொடர்ந்து, அப்போது அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டவர்தான் இந்த ஆறுமுகம். இந்த நிலையில்தான், மீண்டும் அவரது தலைமையிலான போலீஸார் சர்ச்சையில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட கோயில்பத்து பகுதியில் 23 வயது இளைஞர் பிரவீன் ராஜ் என்பவர், ஏழு பேர் கொண்ட கும்பலால் முன்விரோத தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட பிரவீன் ராஜ் உடலை உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்ல விடாமல் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், கொலையானவரின் உறவினர்களிடம் பேசியதன் பேரில், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கொலை சம்பந்தமான போலீஸாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட பிரவீன் ராஜ் என்பவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சிவராஜ் ஆகியோர்களுக்கு இடையே கடந்த ஆறாம் தேதி மோட்டார் பைக் வேகமாக ஓட்டியதில் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவராஜ், செந்தில், உள்ளிட்ட நபர்கள் பிரவீன் ராஜியிடம் கேட்டுள்ளனர் .
இதில், ஆத்திரம் அடைந்த பிரவீன் ராஜ், தான் வைத்திருந்த கத்தியால் மூவரையும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த ஏழாம் தேதி சிவராஜ் என்பவர் புகார் கொடுத்தார். ஆனால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸார், இரு தரப்பினரையும் கூப்பிட்டு சமாதானம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், சிவராஜ், செந்தில், சக்திவேல், கவியரசு ,ஆதவன், குட்டி என்ற விவேகானந்தன் ஆகியோர் கொண்ட கும்பல், பிரவீன் ராஜை இரும்பு கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
முன்விரோத தகராறு புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோரை, ஐ.ஜி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கொலை நடந்த சம்பவத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு மிக தாமதமாக தெரிவித்ததால், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா காவல்துறை கண்காணிப்பாளரால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காவல்நிலையத்துக்கு வரும் புகார்களை முறையாக வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கையை எடுக்காமல், கட்டப்பஞ்சாயத்து செய்ததால் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீஸார், சஸ்பெண்ட் செய்யப்பட்டது, கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu