BIG STORIES
மாட்டை ஸ்டேசனில் கட்டி போலீஸை வம்பிழுத்த இளைஞர்.. செல்ஃபோன் டவரில் அட்ரா..!
Jun 24, 2025 05:42 AM
177
செல்ஃபோன் டவரில் அட்ரா
பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட தந்தையை விடுவிக்கக் கோரி மாடுகளை காவல் நிலையத்தில் கட்டி, செல்ஃபோன் டவர் மீது ஏறிய பாசக்கார மகன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார் பரமசிவன். அதே கிராமத்தை சேர்ந்த பாக்கியத்தாயின் மாடுகளை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் பரமசிவனை கரிவலம்வந்த நல்லூர் போலீஸார் கைது செய்தனர்.
பரமசிவனை கைது செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாத அவரது மகன் ரஞ்சித், தனது உறவினர்கள் ராமச்சந்திரன், செல்வக்குமார், முனீஸ்வரன் ஆகியோருடன் காவல் நிலையத்திற்கு 2 பசுமாடுகளை ஓட்டிச் சென்றார். அப்பாவை கைது செய்ததால் அவர் வளர்க்கும் பசுமாடுகளை பார்க்க ஆள் இல்லை எனவே மாடுகளை காவல் நிலையத்தில் வைத்து பராமரிக்குமாறு கூறி கட்டி வைத்துள்ளனர்.
இவர்களின் அடாவடியால் நொந்துப் போன காவலர் ஒருவர் தான் வேலைப்பார்க்கும் காவல் நிலையத்திலேயே அந்த 4 பேர் மீதும் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் செல்வக்குமார், முனீஸ்வரன் ஆகியோரை கைது செய்ததோடு, கட்டியிருந்த மாடுகளை வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தங்களை போலீஸார் தேடி வருவதை தெரிந்துக் கொண்ட ரஞ்சித் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள செல்ஃபோன் கோபுரத்தில் ஏறினர். தந்தை பரமசிவம் மற்றும் தங்கள் 4 பேர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிந்ததாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. கீழே இருந்த அவர்களது உறவினர்களும் இறங்கி வருமாறு கூறியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.
டவரில் அமர்ந்திருந்த இருவரையும் கீழே இறங்க சொல்லி வற்புறுத்திய பெண் ஒருவர் திடீரென டவர் மீது ஏற, அங்கிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை கீழே இறக்கி அப்புறப்படுத்தினர்.
கீழே இவ்வளவு களேபரங்கள் நடந்துக் கொண்டிருக்க மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் டவரிலே படுத்து உறங்கத் துவங்கினர்.
எஸ்.பி செங்குட்டு வேலவன் வந்தால் மட்டுமே மேலிருந்து கீழே இறங்கப் போவதாக மிரட்டல் விடுத்தவரிடம் டிஎஸ்பி நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், தீயணைப்பு வீரர்கள் 4 பேர் டவர் மேலே ஏறிச் சென்று அங்கிருந்த ரஞ்சித் மற்றும் ராமச்சந்திரனை பாதுகாப்பாக கீழே இறக்கினர். தாகமாக இருக்கிறது என தண்ணீர் கேட்டு குடித்து விட்டு சாலையில் படுத்த இருவரையும் போலீஸார் கைது செய்ததால் 4 மணி நேர பரபரப்பு அடங்கியது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu