முகப்பு
போதை வழக்கில் ஸ்ரீகாந்தை சிக்க வைத்த தயாரிப்பாளர்.. அடுத்து சிக்கப்போவது யார்?
Jun 24, 2025 02:40 AM
460
ஸ்ரீகாந்தை சிக்க வைத்த தயாரிப்பாளர்
போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கி உள்ள நிலையில், அவரை சிக்க வைத்த தீங்கிரை படத்தின் தயாரிப்பாளருடனான கூடா நட்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் நீண்ட இடைவெளி விட்டு சில படங்களில் நடித்து வந்தார். அண்மையில் பெண் தயாரிப்பாளர் ஒருவர் நாயகியாக நடித்த படத்தில் கூட நாயகனாக நடித்துள்ளார்.
அந்த வகையில் அதிமுக பிரமுகர் ஒருவர் தயாரித்த படத்தில் நடித்ததால் போதை வஸ்தை பழகிய ஸ்ரீகாந்த், அந்த தீங்கிரையால் போலீசில் சிக்கித் தவிக்கின்றார். ஸ்ரீகாந்த், எப்படி இந்த போதை பொருள் விவகாரத்திற்குள் வந்தார் என விரிவாக பார்க்கலாம்...
சென்னையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை காவல் ஆணையர் அருண் தீவிரப்படுத்தி உள்ளார். அவரது உத்தரவின் பேரில் நகரில் 12 தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 22 ந்தேதி மதுபான பார் மோதலில் கைது செய்யப்பட்ட சினிமா தயாரிப்பாளர் பிரசாத்திடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் உள்ள தொடர்புகளையும் , குறுந்தகவல்களையும் ஆய்வு செய்தபோது அவர் கொக்கைன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த பிரதீப் குமாருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 17 ந்தேதி பிரதீப் குமாரை சென்னையிலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரை ஓசூரில் வைத்தும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 11 கிராம் கொக்கைனையும் 40 ஆயிரம் ரூபாய் பணம் , 2 செல்போன்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.
பிரதீப்குமார் 2020 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் பெங்களூரூக்குச் சென்று கொகைன் போதைப்பொருளை வாங்கி வந்து சென்னையில் உள்ள நண்பர்களுக்கு விற்றுள்ளார். பெங்களூருக்கு செல்லும்போது தான் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் பழக்கம் ஆகி, அவர் மூலமாக அதிகளவில் கொகைன் போதைப்பொருளை வாங்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர் கொகைன் போதைப்பொருளை 7 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து 12 ஆயிரம் ரூபாய்க்கு பிரசாத்திற்கு விற்பனை செய்ததாக கைதான பிரதீப் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக படத்தயாரிப்பாளர் பிரசாத் , நடிகர் ஸ்ரீகாந்துக்கு என்று கூறி தன்னிடம் கொக்கைன் போதைப்பொருளை வாங்கிய விவரத்தையும் தெரிவித்தார். இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரித்த போலீசார், அவரின் ரத்த மாதிரியை சேகரித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது அவர் தடை செய்யப்பட்ட கொக்கைன், மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்தனர். அதாவது ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தால் 45 நாட்கள் அவரை ஆய்வு மூலம் அறிந்து கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
பிரசாத்தின் தயாரிப்பில் “தீங்கிரை” என்ற பெயரில் 2 வருடங்களுக்கு முன்பு படம் ஒன்று நடித்து வந்ததாகவும் அப்போது நடிகர்- நடிகைகளை அழைத்து பார்ட்டி வைத்த தயாரிப்பாளர் பிரசாத், தனக்கு கொக்கைன் போதையை பழக்கப்படுத்தி விட்டதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்காக பிரதீப் குமார் பெங்களூருவில் இருந்து கொகைன் போதைப்பொருள் வாங்கி வந்து பிரசாத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரசாத்திற்கு மட்டும் 2023 ம் ஆண்டிலிருந்து சுமார் 40 முறைக்குமேல் கொகைனை பிரதீப் குமார் விற்று கூகுள்பே மூலமாக மட்டும் 4 லட்சத்து 72,000 ரூபாய் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் பணமாகவும் பல லட்சத்திற்கு போதைப்பொருள் வாங்கியுள்ளார். பிரசாத் மூலம் போலீசில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்தை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் போதை பொருள் மற்றும் செல்போனும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணாவும் பிரதீப்குமார் மூலம் போதை பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளதால், அவரையும் பிடித்து ரத்த மாதிரிகளை சேகரித்து மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu