RECENT NEWS

மா விவசாயிகள் கோரிக்கையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை - இபிஎஸ்

முகப்பு

வா.. வா..பக்கத்துல உட்காரு.. டாக்டரை அழைத்து மிரட்டல்.. கட்டபஞ்சாயத்து காவல் ஆய்வாளர்..!

Jun 12, 2025 02:07 AM

97

வா.. வா..பக்கத்துல உட்காரு.. டாக்டரை அழைத்து மிரட்டல்.. கட்டபஞ்சாயத்து காவல் ஆய்வாளர்..!

‘வா வா வந்து என் பக்கத்துல உட்காரு...’ என்கிற வைரல் விளம்பரத்தைப்போல கட்டப்பஞ்சாயத்து, லஞ்சம், மிரட்டல் என வரிசையாக சிக்கலில் சிக்கிக்கொண்டே இருக்கும், பெண் இன்ஸ்பெக்டர்களின் பட்டியல் கூடிக்கொண்டே போகிறது. அதுவும், ‘பிரிக்க முடியாதது எதுவோ?’ என பட்டிமன்றம் வைத்தால் ‘மகளிர் காவல்நிலையமும் கட்டப்பஞ்சாயத்தும்’ என கூறும் அளவுக்கு, எல்லை மீறிக்கொண்டிருப்பதாக, புகார் கொடுக்க செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி, சமீபத்தில் சிக்கலில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்கள் குறித்த குற்றப்பின்னணியை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

ஒரு பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தால்... குடும்ப ரீதியிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த வலியையும் வேதனையையும் வெளிப்படையாகச் சொல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முடியாத நிலை... ஆண் காவலர்கள் மட்டுமே சூழ்ந்திருக்கும் காவல்நிலையத்திற்குள் சென்று பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது முழுமையான பாதிப்புகளைச் சொல்லி, எப்படி புகார் கொடுக்கமுடியும்?

எந்த நிலையில் இருக்கிறார்கள் என்றுகூடப் பார்க்காமல், திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து, குற்றம் நிரூபிக்கப்படாத பெண்களை ஆண் போலீஸார் கைது செய்யும் சூழல்... பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக புகார் கொடுக்க வரும் பெண்களுக்கே, ஆண் போலீஸார் வலை விரிக்கும் சூழல்... இதெல்லாம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் அனைத்து மகளிர் காவல்நிலையம் உருவாக்கப்பட்டது. ஆனால், எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதை குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கிறார்கள், சில பெண் காவல் இன்ஸ்பெக்டர்கள்.

புகார் கொடுத்த பெண் வழக்கறிஞரை அலைக்கழித்த, அப்போதைய சென்னை எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு, தற்போது, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்ததாக, சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி. பாலியல் வன்கொடுமை முயற்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கை தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் மற்றும் கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பவருக்கு, சாதகமாக நடந்து கொண்டதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி.

மேலும், மற்றொரு வழக்கில், அதே காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த ஒரு பெண், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தன்னை மிரட்டியதாகவும், புகாரை வாபஸ் பெற வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். இப்படி, விஜயலட்சுமி மீதான புகார்கள் என்பது புதிதல்ல. அவரது, மகளே அவர் மீது புகார் கொடுத்த பெரும் பரபரப்பானது. இந்தநிலையில்தான், சென்னை மாநகர கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்தநிலையில்தான், பெண் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் டாக்டரை மிரட்டிய மற்றொரு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, சென்னை அடையாறு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரக்கூடியவர் ஷாம் பிரசாத். இவர், டிஜிபி அலுவலகத்தில் பெண் இன்ஸ்பெக்டர் கெளசல்யா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த பிப்ரவரி மாதம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்தபோது, அப்பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால், கணவனால் தாக்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து, டாக்டர் ஷாம் பிரசாத், இது தொடர்பாக மருத்துவச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண், இந்த மருத்துவச் சான்றிதழை அடிப்படையாக வைத்து, தி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில், கடந்த மூன்றாம் தேதி காவல் ஆய்வாளர் கௌசல்யா என்பவர் டாக்டர் ஷாம் பிரசாத்தைத் தொடர்பு கொண்டு, “உங்களிடம் ஒரு புகார் குறித்து பேச வேண்டும். உங்கள் மருத்துவமனைக்கு அருகே சந்திக்கலாம்” எனக் கூறி வரவழைத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற டாக்டர் ஷாம் பிரசாத்திடம், “அந்த பெண்ணுக்கு தவறான மருத்துவ சான்றிதழை வழங்கியுள்ளீர்கள். வழக்கில் சேர்க்கக்கூடாது என்றால் நான் கொண்டு வந்த ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். உங்களையும் இந்த வழக்கில் சேர்க்காமல் இருக்கவேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்கவேண்டும்” என மிரட்டியதாக புகாரில் குற்றம்சாட்டியுள்ளார், டாக்டர் ஷாம் பிரசாத்.

அதாவது, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண், 30 லட்சம் வரதட்சணை கேட்டு தனது கணவர் தாக்கியதாக தி.நகர் மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரினை, முறையாக விசாரணை நடத்தாமல், அப்பெண்ணின் கணவருக்கு சாதகமாக இன்ஸ்பெக்டர் கெளசல்யா , இந்த கட்டாபஞ்சாயத்தி ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில் தான், பெண் தாக்கப்பட்டதாக டாக்டர் கொடுத்த சான்றிதழ் பொய் என மாற்றிவிட்டால், அப்பெண்ணின் கணவரை இந்த வழக்கிலிருந்து தப்பிக்கவைத்துவிடலாம் என்கிற நோக்கத்தில், டாக்டரையே மிரட்டியதாகவும், அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டதாகவும் புகார் கிளம்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தி.நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கெளசல்யா மீது, டாக்டர் ஷாம் கொடுத்த புகார் தொடர்பாக, சி.சி.டி.வி ஆதாரங்களைக் கொண்டு, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் கவுசல்யாவிடம் விளக்கம் கேட்ட போது , இணை ஆணையர் அலுவலகத்தில் துறை ரீதியான விசாரணைக்கு வந்திருப்பதாகவும் , வெளியில் வந்ததும் பேசுவதாக கூறியவர் பின்னர் அழைப்பை ஏற்கவில்லை.

மாநகர கமிஷனர் அருணின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகப்போகும் அடுத்த பெண் இன்ஸ்பெக்டர் பட்டியலில் கெளசல்யா இடம்பெற்றிருக்கிறார் என காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சட்டம் ஒரு பளார் அறை..! பாலியல் புகாரில் சிக்கிய சந்துருவுக்கு நடந்தது என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies