முகப்பு
அரசியல்வாதிகள் அலப்பறைக்கு பறிபோன 13 அப்பாவி உயிர்கள்.. நெரிசலுக்கு காரணமான ஓசி பாஸ்..! கிரிக்கெட் மோகம்.. உண்டான சோகம்..!..
Jun 05, 2025 12:43 PM
32
பாகுபலி படத்தில் 100 அடி சிலை.. 100 பேரையாவது பலி கேட்காதா.. என்ற எக்காளச்சிரிப்புடன் வில்லன் வேடம் ஏற்றிருக்கும் நாசர் கூறுவார்.. அது போன்ற ஒரு மனித தன்மையற்ற நிலையில் போதிய பாதுகாப்போ முன்னேற்பாடோ செய்யாத கர்நாடக ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயலால் 18 ஆண்டு கழித்து கைக்கு வந்த சாம்பியன் கோப்பை , 13 அப்பாவி ரசிகர்களின் உயிரை காவு வாங்கி இருப்பதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்...
வெற்றிக் கொண்டாட்டம் சோகமாக மாற காரணம் யார் ? அங்கு நடந்தது என்ன ? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்...
ஐபிஎல் தொடங்கிய காலம் தொட்டே இ சாலா கப் நம்தே... அதாவது இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று மார்தட்டி ஒவ்வொரு முறையும் மண்ணை கவ்வி வந்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி..! 18 ஆண்டு அதி தீவிர முயற்சிக்கு பிறகு திட்டமிட்டப்படியே ஆர்.சி.பி அணி ஐ.பி.எல்லில் சாம்பியன் பட்டம் வென்றது. வங்கிகளில் கடன் பெற்று விட்டு நாட்டி விட்டே ஓடிய விஜய்மல்லையாவுக்கு சொந்தமான அணியாக ஆரம்பத்தில் இருந்தாலும் , தற்போது வேறு சிலருக்கு கைமாறி இருக்கின்றது பெயர் மாறவில்லை.
இந்த அணி ஒன்றும் கர்நாடக அரசுக்கோ அல்லது மாநில கிரிக்கெட் வாரியத்துக்கோ சொந்தமானது அல்ல, முழுக்க முழுக்க தனியார் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணியின் வெற்றியை கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர்களின் ஓட்டுக்களை கவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மாநில முதல் அமைச்சர் சித்தராமையா, துணை முதல் அமைச்சர் டிகே சிவக்குமார் ஆகியோர் வரிந்துகட்டிக்கொண்டு தங்கள் படை பரிவாரங்களுடன் அவசர கதியில் பாராட்டு விழா ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகின்றது.
கர்நாடக சட்டப்பேரவை வளாகமான விதான் சௌதாவில் அரசு சார்பிலும், அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் கர்நாடக கிரிக்கெட் வாரியம் சார்பிலும் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விதான் சவுதா விழாவில், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்ற நிலையில், விதான் சௌதாவிலிருந்து கோப்பையுடன் வீரர்கள் மைதானத்திற்கு பயணமானார்கள்.
மைதானத்தில் ஏற்கனவே ரசிகர்கள் நிறைந்திருந்த நிலையில் காசு கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டுமா, இலவச நுழைவா.. என்பது தெரியாமல் ஏராளமானவர்கள் ஒவ்வொரு வாசலிலும் முண்டியடித்தனர். அப்போது கேட் ஒன்று திடீரென திறக்கப்பட்டதால் டிக்கெட் எடுக்க காத்திருந்தவர்களும் , கையில் பாஸ் வைத்திருந்தவர்களும் , விதான் சௌதா பகுதியிலிருந்து நடந்தே வந்தவர்களும் மைதானத்திற்குள் ஒரே நேரத்தில் நுழைய முயன்றதால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக 6,7, 12, 18 ஆகிய நுழைவு வாயில் எண்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் 6 ஆவது நுழைவு வாயிலில் திடீரென நெரிசல் அதிகரித்து ஒருவர் மீது ஒருவர் ஏறியதால் சிலர் கீழே விழுந்ததாக கூறப்படுகின்றது.
ஆனாலும், மைதானத்திற்குள் நுழைய ஆர்வத்தில் இருந்த ரசிகர்கள் முண்டியத்து முன்னேறியதால் கீழே விழுந்தவர்களைக் கூட மிதித்துச் செல்லும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
ஸ்டேடியத்தின் வாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது ரசிகர்கள் ஏறியதால் அவையும் உடைந்து நொறுங்கியது
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 9 ஆம் வகுப்பு மாணவி உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த சுமார் 50 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரை போலீஸார் தங்களது கைகளில் தூக்கிக் கொண்டு காப்பாற்ற ஓடினர்.
இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் மைதானத்திற்குள் நுழைய முயன்ற கூட்டத்தினர் சிலர், எச்சரித்தும் கலையாததால் போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
மைதானத்திற்கு வெளியே பல உயிர்கள் பலியான நிலையிலும், மைதானத்தின் உள்ளே எவ்வித சலசலப்பும் இல்லாமல் ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தேறியது . இந்த சம்பவம் இந்த கோப்பை மீதே ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது
மைதானத்தில் இருந்த கூட்டம் ஊர் திரும்ப மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்ததால் சென்ட்ரல் காலேஜ், கப்பன் பார்க், விதான் செளதா, சின்னசாமி ஸ்டேடியம் உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க உடனடியாக அவை மூடப்பட்டன.
ஆனாலும் இந்த தகவல் சரிவர கிடைக்கப்பெறாத ரசிகர் கூட்டம் ரயில்களை இயக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
தங்களின் விளம்பர மோகத்துக்காக ரசிகர்களை காவு கொடுத்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமாருக்கு எதிராக பா.ஜ.க கடும் கணடனம் தெரிவித்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் பலியானவர்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கான காரணத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க முதல் அமைச்சர் சித்தராமையாக உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் ஆர்சிபி அணியை பாராட்ட இரு நிகழ்ச்சிகளை அவசர கதியில் அரசும் , கிரிக்கெட் வாரியமும் ஏற்பாடு செய்ய வேண்டிய நோக்கம் என்ன ? 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்தில் 4 லட்சம் பேர் திரளும் அளவுக்கு அனுமதி வழங்கியது யார் ? 5 ஆயிரம் போலீசாரை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது சரியான நடவடிக்கையா? ரசிகர்கள் கூட்ட நெரிசலில் உயிர்விட்டுக் கொண்டிருக்க கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் பாராட்டு நிகழ்ச்சி நடத்தியது மனிதாபிமான செயலா ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கர்நாடக அரசுக்கு எதிராக அந்த மாநில மக்கள் எழுப்பி வருகின்றனர். செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் முதல் அமைச்சர் சித்தராமையா சிடுசிடுத்தார்
முறையான நுழைவுச்சீட்டு இல்லாமல் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓசி பாஸில் உள்ளே சென்ற அரசியல் அதிகார புள்ளிகளுக்கும், அவர்கள் வீட்டு கிரிக்கெட் ரசிகர்களும் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் பாஸ் வைத்திருந்தும் ஏராளமானோருக்கு உள்ளே இருக்கை இல்லை என்று அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து, ஒரு கட்டத்தில் முண்டியடித்த ரசிகர்கள் ஒருவர் மீது ஏறிக் கொண்டு சென்றதால், கட்டுக்கடங்கா கூட்டத்தில் சிக்கி 13 அப்பாவி உயிர்கள் பறிபோயி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அதே நேரத்தில் 7 ஆம் நம்பர் கேட்டிற்கு முன்பாக கூட்ட நெரிசலில் ரசிகர்கள் விட்டுச்சென்ற செருப்புகள் அம்பாரமாக குவிந்து கிடந்தது, இதனை கிடைக்கும் வரை லாபம் என்று சிலர் தங்கள் கால்களுக்கு ஏற்ற சைஸில் காலணிகள் கிடைக்குமா ? என்று அங்கு தேடி எடுத்துக் கொண்டிருந்தனர்
சமூகத்தில் கூட்டம் சேரும் இடத்தில் நிகழும் சிறு குற்றமும் பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும், கொண்டாட்டத்தை காரணம் காட்டினாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu