BIG STORIES
குடிசை வீட்டு உண்டியல் கரையான் தின்ற ரூ.1லட்சம் கலக்கத்தில் ஏழைப் பெண் ..! ரிசர்வ் வங்கியின் உதவி கிடைக்குமா ?
May 08, 2025 02:09 AM
1820
குடிசை வீட்டு உண்டியல் கரையான் தின்ற ரூ.1லட்சம் கலக்கத்தில் ஏழைப் பெண் ..! ரிசர்வ் வங்கியின் உதவி கிடைக்குமா ?
மண் வீட்டில் குழி தோண்டி உண்டியலை புதைத்து வைத்து 2 ஆண்டுகளாக சேமித்து வந்த ஒரு லட்சம் ரூபாயை கரையான் தின்றதால் கதி கலங்கி நின்ற பெண்ணிற்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் ரிசர்வ் வங்கி உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கிளாதரி ஊராட்சி கக்கினியார்பட்டியை சேர்ந்தவர் குமார் - முத்துக்கருப்பி தம்பதியர். இவர் தனது கணவர் குமார், இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் ஓலையால் வேயப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
கிடைக்கும் கூலி வேலைக்கு செய்து பிழைத்து வந்த முத்துக்கருப்பி, 3 குழந்தைகளுக்கும் காது குத்து விழா நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை உண்டியலில் போட்டு சேமித்து வந்தார்.
போதிய படிப்பறிவு இல்லாததால் வங்கியில் கணக்கு துவங்காத அந்த தம்பதியர் செலவுக்கு போக மிஞ்சிய பணத்தை தகர உண்டியலில் சேமித்து வந்ததாக கூறப்படுகிறது.
குடிசை வீடு என்பதாலும், வேலைக்காக வெளியே சென்று விடுவதாலும் உண்டியலை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி தம்பதியர் புதைத்து வைத்தனர். சில மாதங்களுக்கு முன்பு உண்டியலை தோண்டி எடுத்து சேமித்த பணத்தை எண்ணிப்பார்த்தனர். அதில் ஒரு லட்சம் ரூபாய் வரை இருந்ததால் கூடுதலாக பணம் சேமிக்க எண்ணி உண்டியலை மீண்டும் மண்ணிற்குள் புதைத்தனர்.
பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் காது குத்தும் விழா நடத்த எண்ணிய தம்பதியர், சேமிப்பு பணத்தை கணக்கிடுவதற்காக உண்டியலை வெளியே எடுத்தனர். அப்போது, தகர உண்டியல் சேதமடைந்து உள்ளே கரையான் புகுந்து ரூபாய் நோட்டுகளை அரித்து தின்றிருப்பதை கண்டு கலங்கிபோயினர்.
இரண்டு ஆண்டு சேமிப்பு மொத்தமாக மண்ணாகி போனதால் கலங்கிய குடும்பம் திருபுவனத்தில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்று முறையிட்டனர். “இது கிழிந்த நோட்டு அல்ல; கரையான் சாப்பிட்டதால் மாற்றித்தர முடியாது” என தெரிவித்தனர்.
ஏழைப் பெண்ணின் சேமிப்பு கரையானுக்கு இரையான தகவல் கிடைத்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உடனடியாக விசாரணை நடத்த தாசில்தார் சிவராமனுக்கு உத்தரவிட்டார். அவர், முத்துக்கருப்பியை சிவகங்கையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அழைத்துச் சென்றார்.
கரையான்கள் அரித்தது போக மீதமிருந்த ரூபாய் நோட்டு எச்சங்களை வங்கி மேலாளர் பிரவீன்குமாரிடம் காண்பித்து வட்டாட்சியர் சிவராமன் உதவி கோரினார்.
சென்னையிலுள்ள வங்கி உயரதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் முத்துக்கருப்பியின் நிலையை வங்கி மேலாளர் பிரவீன்குமார் எடுத்துக் கூறினார். வங்கி விதிமுறையின் படி ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் கூலி வேலை செய்து சேமித்த பணம் என்பதால் கருணை அடிப்படையில் உதவி செய்ய ரிசர்வ் வங்கி உறுதியளித்திருப்பதாக பிரவீன்குமார் தெரிவித்தார்.
வங்கியில் கணக்கு துவங்கி பணம் சேமிப்பது எளிதானது என்பதோடு வட்டியும் கிடைக்கும் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வங்கி அதிகாரிகள் முத்துகருப்பிக்கு அறிவுறுத்தினர் .
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu