BIG STORIES
பெற்ற குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தந்தை.. மனைவி உடனான தகராறில் கொடூரச்செயல்.. போலீசாரின் அலட்சியத்தால் உயிர் போனதா..?
Jul 23, 2025 01:18 AM
270
பெற்ற குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தந்தை..
சென்னையில் மனைவியுடனான தகராறில் பெற்ற குழந்தையையே தந்தை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் கத்தியை காட்டி மிரட்டும் தனது கணவனால் தனக்கும் தனது குழந்தை உயிருக்கும் ஆபத்து என தாய் சென்னை ஓட்டேரி காவல்நிலையில் புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத போலீசாரின் அலட்சியம் காரணமாகவே குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை பெரம்பூர் மங்களபுரத்தைச் சேர்ந்த சதீஷ் - ரெபேக்கா இடையே கடந்த 2017ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ரெபேக்கா ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை சொல்லி அடிக்கடி சதீஷ் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டில் ரெபேக்கா வசித்து வருகிறார்.
தாய் வீட்டில் ரெபேக்கா வசித்து வந்த நிலையில் 7 வயது குழந்தை ஸ்டெபியை தனது கட்டுப்பாட்டில் சதீஷ் வைத்திருந்தார். இதனிடையே, ஞாயிறு இரவு மாமியார் வீட்டிற்கு சென்ற சதீஷ், மனைவி ரெபேக்காவை தன்னுடன் வருமாறு அழைத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ரெபேக்காவும் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என சதீஷிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, கூறப்படுகின்றது.
இந்நிலையில், குழந்தையை ஒருபோதும் தர முடியாது எனக்கூறி ரெபேக்காவை சதீஷ் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து குழந்தையை மீட்டுக் கொள்ள உள்ளதாக ரெபேக்கா தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தால், மனைவியையும், தன்னிடம் உள்ள குழந்தையையும் கொன்றுவிடுவேன் என சதீஷ் கத்தியை காட்டி பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த மனைவி ரெபேக்காவை வழிமறித்து மீண்டும் சதீஷ் தகராறில் ஈடுபட்டு வீட்டிற்கு வர சொல்லி வற்புறுத்தியுள்ளார். அப்போது ரெபேக்காவின் டூவீலர் சாவியை பறித்துக் கொண்டு சதீஷ் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் உடனடியாக சென்னை ஓட்டேரி காவல் நிலையத்திற்கு நேராக சென்ற ரெபேக்கா தனக்கும், தன் குழந்தைக்கும் கணவனால் ஆபத்து உள்ளதாக புகாரளித்தார். தன்னையும், தனது 7 வயது மகளையும் கொலை செய்துவிடுவதாக கணவர் கத்தியை காட்டி மிரட்டுவதாக எழுத்துப்பூர்வமாக ஓட்டேரி காவல் நிலையத்தில் அவர் புகார் மனுவும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் காலை சென்னை பரங்கிமலையில் உள்ள விஜய் பார்க் எனும் ஓட்டலில் வைத்து தனது குழந்தை ஸ்டெபியின் கழுத்தை அறுத்து சதீஷ் கொலை செய்துள்ளார். பிறகு தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்தவமனையில் அனுமதித்துள்ளனர்.
தாய் ரெபேக்கா கொடுத்த புகாரின் அடிப்படையில் சதீஷை தொடர்பு கொண்ட போலீசார் திங்களன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு ஓட்டேரி காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். ஏற்கனவே மனைவி கொடுத்த புகாரில் கைதாகி சிறை சென்ற சதீஷ் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்பதாலும் மனைவியை பழிவாங்க வேண்டும் என்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு விஜய் பார்க் ஓட்டலுக்கு சென்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவிருந்த குழந்தையின் உடலைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
கழுத்தறுக்கப்பட்டபோது குழந்தை எப்படியெல்லாம் துடித்திருக்கும் என அவரது உறவினர் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.
திங்களன்று மாலை விசாரணைக்கு அழைத்தும் சதீஷ் வராத நிலையில், அவரது செல்போன் எண்ணை டிரேஸ் செய்து போலீசார் கண்டுபிடித்து இருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் சதீஷ் விசாரணைக்கு வரும் போது வரட்டும் என ஓட்டேரி போலீசார் காட்டிய அலட்சியமே குழந்தை ஸ்டெபி கொடூரமாக கொலை செய்யப்பட காரணமாகியுள்ளதாக, தாயின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu