BIG STORIES
நடு ரோட்டில் பெண் மீது தாக்குதல்.. கடன் தொகை கேட்டு அத்துமீறல்.. போலீஸ் கண்முன்பே அட்டூழியம்..!
Jul 23, 2025 01:23 AM
234
நடு ரோட்டில் பெண் மீது தாக்குதல்.. கடன் தொகை கேட்டு அத்துமீறல்..
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காவல்துறை சோதனை சாவடி அருகே கடனைக் கேட்டு போலீஸ் கண் முன்பு பெண்ணை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கிய நிலையில், அப்பெண்ணை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் போலீஸ் சோதனை சாவடி அருகே ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மெயின்ரோடு பகுதியில் திங்கட்கிழமை மதியம் ஆட்டோவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மற்றொரு பெண் உள்பட சிலர் சேர்ந்து மடக்கிப் பிடித்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
தன்னைத் தாக்கியவர்களுடன் போராடிய அப்பெண்ணின் ஆடை கிழிந்து, அவர் கத்திக் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சோதனைச் சாவடியில் பணியிலிருந்த போலீசார் வந்து இருவரையும் விலக்கிவிட முயற்சித்தனர். போலீசாரைக் கண்டுகொள்ளாமல், அவர்கள் கண்முன்னே பெண்ணின் முடியைப் பிடித்து அந்த கும்பல் இழுத்துச் செல்ல முயன்றது.
தாக்குதலில் காயமடைந்த பெண்ணை போலீசார் ஒருவழியாக மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காயமடைந்த பெண் தூத்துக்குடி சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டிலா பென்சியா என்பது தெரியவந்தது.
அவரது கணவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், வருமானத்திற்காக பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வரவேற்பாளராகப் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த முனியசாமியிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக கிறிஸ்டிலா பென்சியா 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அதில் 10 விழுக்காட்டை மாத வட்டியாக செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அசல் மற்றும் வட்டித் தொகை முழுவதும் உடனடியாக செலுத்த வேண்டும் எனக் கூறி முனியசாமியின் மனைவி மற்றும் சிலர் அழகு நிலையத்திற்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அங்கிருந்து தப்பி ஆட்டோ மூலம் வெளியேற முயற்சி செய்தபோது தன்னை கே.டி.சி நகர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து தாக்கிதாக கிறிஸ்டிலா போலீசிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிறிஸ்டிலாவின் புகார் மனுவை பெற்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களும் காயமடைந்ததாக மருத்துவமனையில் சேர்ந்துள்ள நிலையில், அவர்கள் தரப்பு புகார் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu