BIG STORIES
போட்டோ ஷூட்டுன்னாலும் ஒரு நியாயம் வேணாமா சார் காவு கொடுக்கப்பட்ட தைலமரம்..! மரத்தை சாய்த்து ஒரு கிளிக்
May 03, 2025 02:39 AM
486
போட்டோ ஷூட்டுன்னாலும் ஒரு நியாயம் வேணாமா சார் காவு கொடுக்கப்பட்ட தைலமரம்..! மரத்தை சாய்த்து ஒரு கிளிக்
கிருஷ்ணகிரியில் காற்றில் சாய்ந்த மரங்களை விரைவாக அதிகாரிகள் அகற்றிய நிலையில் கலெக்டர் ஆய்வுக்கு வரும் தகவல் கிடைத்ததும் பொக்லைன் வைத்து குழி தோண்டி நன்றாக இருந்த மரத்தை பிள்ளையார் கோவில் மீது சாய்த்ததாக புகார் எழுந்துள்ளது
கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகர் பகுதியில் சூறாவளியாக சுழன்று சுழன்று வீசிய காற்றுடன் பெய்த கன மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த மரங்கள் சேதம் அடைந்தது. பெங்களூர் சாலையில் சென்ட்ரல் தியேட்டர் எதிரில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களில் இருந்த கிளைகள் முறிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் சேதம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் ஏதும் சேதம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து விழுந்த மரக்கிளைகளை நகராட்சி அலுவலர்கள் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். எல்லாம் நடந்து முடிந்த பின்னர் மீட்புபணியை பார்வையிட கலெக்டர் வருவதாக தகவல் வந்தது. மரங்கள் அகற்றப்பட்டு விட்டதால் என்ன செய்வதென்று சிந்தித்த சின்சியர் சிகாமணி ஆபீசர்ஸ் செய்த சம்பவம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உடனடியாக பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் விநாயகர் கோவில் பின்புறம் இருந்த பழமையான் தைல மரத்தை நகராட்சி அலுவலர்களின் அறிவுறுத்தலின் பேரில் மரத்தைச் சுற்றி ஜேசிபி மூலம் குழிதோண்டி மரத்தை விழ வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்து வீடியோ எடுத்தவர்கள் புகார் தெரிவித்தனர்
பொக்லைன் ஓட்டுனர் நீண்ட நேரம் மரத்தை தட்டியும் இழுத்தும் கஷ்டப்பட்டு சாய்த்து கீழே விழச்செய்தார், அந்த மரமும் விநாயகர் கோவிலில் மேல் பகுதியில் விழுந்தது. இதில் கோவிலின் மேல் பகுதி சேதமடைந்தது. தீயணைப்புத் துறையினர் அவர்களிடம் மரத்தை அழிக்க வேண்டாம் என்று கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அங்கு நின்றுந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அங்கு நடந்த இந்த கூத்து ஏதும் தெரியாமல் சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ் குமார் உண்மையாகவே மரம் விழுந்து இருக்கிறது என்று நினைத்து அதனை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
அதிகாரிகளும் அவரது முன்பே வேலையை தீவிரமாக செய்வது போல் நடித்தனர். கலெக்டர் அந்த பகுதியில் ஆய்வு செய்துவிட்டு சென்றுவிட்டார். கலெக்டர் போட்டோ ஷூட் நடத்துவதற்காக, உயிரோடு கம்பீரமாக நின்ற பழைமை வாய்ந்த தைல மரத்தை அதிகாரிகள் சிலரின் உத்தரவின் பேரில் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு சாய்த்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மரத்தை அகற்ற வேண்டும் என்றால் கோட்டாட்சியர் ஆய்வு செய்து உத்தரவு வழங்க வேண்டும். ஆனால் எந்தவித உத்தரவும் இன்றி பழைமை வாய்ந்த மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu