முகப்பு
பிரபல பாடகருக்கு மரண தண்டனை.. பாடலால் பறிப்போன வாழ்க்கை!!! யார் இந்த அமீர் ஹொசைன்..?
Jun 11, 2025 10:44 AM
89
பிரபல பாப் பாடகர் அமீர் ஹொசைனுக்கு ஈரான் நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. இதற்கு காரணம் என்ன? யார் இந்த அமீர் ஹொசைன்? விரிவாகப் பார்க்கலாம்..
ஈரானைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் அமீர் ஹொசைன் மக்சூட்லூ. உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர், 'டாட்டாலூ' என அழைக்கப்படுகிறார். ராப், பாப் மற்றும் R&B ஆகியவற்றை இணைக்கும் வகையில் அவர் உடல் முழுதும் பச்சை குத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அமீர், ஈரானின் அரசியல் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது உள்ளிட்ட வழக்குகளும் அவர்மீது தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 10 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதித்து கடந்த ஜனவரியில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த தீர்ப்பை அது உறுதி செய்துள்ளது.
1987, செப்டம்பர் 21 அன்று ஈரானின் தெஹ்ரானில் பிறந்த அமீர், குடும்ப வறுமை காரணமாக பள்ளி படித்துக்கொண்டிருக்கும்போதே வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். இதற்கிடையே அமிருக்கு இசையிலும் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் முதல் பாடல், 2003ஆம் ஆண்டு வெளியானது. அந்த பாடல் அவரது வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து 2014 FIFA உலகக் கோப்பையில் ஈரானிய தேசிய கால்பந்து அணிக்காக, அவர் ஒரு பாடலைப் பாடியபோது உலகம் முழுவதும் பிரபலமானார். 2015ல், ஈரானிய சார்பு அணுசக்தி பாடலான எனர்ஜி ஹஸ்டியை வெளியிட்டார். இந்தப் பாடல் பாரசீக பிரபலமாக கூகுள் தேடலில் முதலிடத்தில் இருந்தது. எனினும், இந்தப் பாடல் ஈரானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்லாமிய விதிகளை மீறுவதாகக் கருதப்படும் பாடல் வரிகள் மற்றும் வாழ்க்கை முறையை விளம்பரப்படுத்தியதற்காக கூறி 2016ஆம் ஆண்டில், அந்நாட்டு போலீசாரால் அமீர் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் 2018ஆம் ஆண்டில், துருக்கி சென்ற அவர், பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். ’2020ஆம் ஆண்டில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று அவர் கூறி, மீண்டும் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அவரது முதல் ஆல்பமான சைர் ஹம்காஃப் 2021ல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, அவர் 21 ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். யுனிவர்சல் மியூசிக் குழுமத்துடன் இணைந்து பணியாற்றிய முதல் ஈரானியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த, 2022ல் சரியாக ஹிஜாப் அணியாததற்காக மஹ்ஸா அமினி என்ற இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசை விமர்சிக்கும் பாடல்களை இவர் இயற்றினார். அதைத்தொடர்ந்து 2023ஆம் ஆண்டில் துருக்கிய அதிகாரிகளால் அமீர், ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இஸ்லாமிய புனிதங்களை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு ஈரான் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை தற்போது உறுதியாகியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu