BIG STORIES
சென்னைக்குள் நுழைய இந்த 3 பேருக்கும் தடை ஏன் ? அரசியல் விளையாட்டு ஸ்டார்ட்..! ராக்கெட் ராஜாவுக்கு சொல்லும் காரணம்
Apr 26, 2025 01:30 AM
1962
சென்னைக்குள் நுழைய இந்த 3 பேருக்கும் தடை ஏன் ? அரசியல் விளையாட்டு ஸ்டார்ட்..! ராக்கெட் ராஜாவுக்கு சொல்லும் காரணம்
பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா , நடுவீரப்பட்டு லெனின் உள்ளிட்ட 3 பேர் அடுத்த ஒரு வருட காலத்திற்கு சென்னையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு ரவுடி லெனின்...! பாரதீய ஜனதா கட்சியின் பட்டியலின மாநில செயலாளர் நெடுங்குன்றம் சூர்யா..! பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவன தலைவரான ராக்கெட் ராஜா ஆகிய 3 பேரும் சென்னை நகருக்குள் நுழைய அடுத்த ஒரு வருட காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , சென்னை மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை பெரு நகர காவல் எல்லைக்குள் நுழைந்து பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கினற போக்கிரிகளை கண்டறிந்து உள்ளதாகவும், அவர்கள் மீண்டும் இது போன்ற கொடுஞ்செயல்களில் சென்னை காவல் எல்லைக்குள் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளாதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும், அச்சுருத்தல் தரக்கூடிய, தங்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடிய சாட்சிகளை மிரட்டக்கூடியவர்களாக கண்டறியப்பட்டதாக , காவல் மாவட்ட துணை ஆணையர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நடுவீரப்பட்டு லெனின், நெடுங்குன்றம் சூர்யா, ராஜா என்கிற ராக்கெட் ராஜா ஆகிய 3 பேர் மீதும் சென்னை காவல் சட்டம் 51 A யின் கீழ் வெளியேற்றுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவீரப்பட்டு லெனின் மீது 6 கொலை 12 கொலை முயற்சி உள்ளிட்ட 28 வழக்குகள் உள்ளதாகவும், நெடுங்குன்றம் சூர்யா மீது 5 கொலை 12 கொலை முயற்சி உள்ளிட்ட 64 வழக்குகள் உள்ளதாகவும், ராக்கெட் ராஜா மீது 5 கொலை 6 கொலை முயற்சி உள்ளிட்ட 20 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சென்னை காவல் எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ, காவல்துறை விசாரணை தொடர்பாக மட்டுமே வரலாம், இதனை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காகவும் சென்னைக்குள் நுழைவது இன்றிலிருந்து அடுத்த ஒரு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும், உத்தரவை மீறும் பட்சத்தில் , சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
லெனின், நெடுங்குன்றம் சூர்யா ஆகியோர் சென்னையில் பல்வேறு நிலவிவகாரங்களில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், பழைய வழக்குகள் தொடர்பாக சாட்சிகளை மிரட்டுவதாகவும் சுட்டிக்காட்டும் போலீசார் , ராக்கெட்ராஜாவுக்கு சொல்லும் காரணம் வித்தியாசமானது .
பாலவிவேகானந்தன் என்கிற ஆறுமுக பாண்டியன் என்கிற ராஜா என்கிற ராக்கெட் ராஜாவுக்கு சென்னை தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் சார்பில் காவல் ஆய்வாளர் ஒருவர் நேரில் ஆனைக்குடி வீட்டுக்கே சென்று இது தொடர்பான உறுத்து அறிக்கையை கடந்த 10ந்தேதி வழங்கி உள்ளார்.
அதில் கடந்த 1998 ஆம் ஆண்டு கொரட்டூரில் நடந்த கொலை வழக்கிலும், 2001 ஆம் ஆண்டு எழும்பூரில் நடந்த கட்டதுரை கொலை வழக்கிலும் எவரும் சாட்சி சொல்ல முன்வராததால், நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டூள்ளீர்கள், மேலும் 2018 ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் உங்கள் மிரட்டலுக்கு பயந்து எவரும் சாட்சி சொல்ல வருவதில்லை என்று எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் உங்கள் மீது சென்னை காவல் சட்டம் 51 Aயின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பாக 5 தினங்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் சம்மன் வழங்கி உள்ளனர். அதன் படி தியாகராய நகர் காவல் துணை ஆணையருக்கு , ராக்கெட் ராஜா தனது வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ராக்கெட்ராஜா உள்ளிட்ட 3 பேர் சென்னைக்குள் நுழையக்கூடாது என்று காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இவர்களை போல சென்னையில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து போலீசாரால் சாட்சிகளை நேர் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் இது போன்ற உத்தரவுகள் அடுத்தடுத்த நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் காரணங்களுக்காக தங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராக்கெட்ராஜா மற்றும் நெடுங்குன்றம் சூர்யா தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu