BIG STORIES
இருப்பதே 30 குடும்பம்.. ஆறு பேருக்கு புற்றுநோய்..மீதி பேருக்கு தைராய்டு.. அதிர்ச்சி கிராமம்!
Jul 03, 2025 01:28 PM
101
இருப்பதே 30 குடும்பம்.. ஆறு பேருக்கு புற்றுநோய்..மீதி பேருக்கு தைராய்டு.. அதிர்ச்சி கிராமம்!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்டது ஈழங்கொண்டான் கிராமம். பூந்தாலங்குடி ஊராட்சியில் இருந்து, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தனித்தீவு போல இருந்து வருகிறது.
இந்த கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் பிரச்சனை கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் கிடைக்க பெறும் தண்ணீர், அதிக அளவு உப்பு நீராகவும் உப்பு படிமன் கலந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த தண்ணீரையே 15 வருடங்களுக்கு மேலாக குடித்து உயிர் வாழ்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தண்ணீரால் நோய்த் தொற்று ஏற்படுவதாகவும், ஏற்கனவே இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம், சுசிலா ஆகியோர் புற்றுநோயால் இறந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த கிராமத்தில் வசிக்கும் பாப்பையன், சின்னையன், ஜோதி, அஸ்வத்தாமன் ஆகியோர் தற்பொழுது குடல் புற்றுநோயால் ராயப்பேட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் இப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
மேலும், இங்குள்ள பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகள், இந்த தண்ணீரால் ஏற்படுவதாக இப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, தங்கள் பகுதிக்கு எந்த அரசு அதிகாரிகளும் வருவதில்லை எனவும் தங்கள் குறைகளை கேட்டு நிறைவேற்றவில்லை எனவும் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் தங்கள் கிராமம் தனி தீவு போல இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து தங்களுக்கு சாலை வசதி இல்லாமலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு நோய்த்தொற்று இருப்பதால் வேலைக்குச் செல்ல முடியாமல் இருப்பதால் குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், தங்களுக்கு அரசு தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கியும், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் தங்களை அலைக்கழிப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு உடனடியாக தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரனிடம் கேட்டபோது, இப்போதுதான் தனது கவனத்திற்கு இது வந்துள்ளதாகவும் உடனடியாக அப்பகுதியில் உள்ள தண்ணீர் மாதிரியை எடுத்து சோதனைக்கு அனுப்ப உத்தரவிடுவதாகவும், 100 நாள் வேலை சம்பந்தமான பிரச்சனை பற்றியும் அதிகாரிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu