முகப்பு
”இந்தியாவில் தான் வாழ்வோம்” எதிர்காலம் தேடி புறப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த சோகம்!..
Jul 02, 2025 01:04 PM
169
இந்திய எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானிய தம்பதி.. பாலைவனத்தில் பயணித்த ஜோடிக்கு நேர்ந்த சோகம்..!
பாகிஸ்தானை சேர்ந்த இளம் தம்பதி, எதிர்காலம் தேடி இந்தியா புறப்பட்ட புறப்பட்ட நிலையில், தார் பாலைவனத்தில் சிக்கி, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தாகத்தாலும், நீரிழப்பாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சாந்திபாய். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பாகிஸ்தானில் சிறுபான்மையாக வசித்து வரும், இந்து குடும்பத்தைச் சேர்ந்த இந்த புதுமணத் தம்பதியரான இருவரும், பாதுகாப்பான மற்றும் நல்ல வாழ்க்கையை இந்தியாவில் உருவாக்க நினைத்தனர். இதற்காக இருவரும் இந்திய விசா கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான நட்புறவு அண்மையில் சிதைந்தன. இதனால் இருவரின் விசாக்களும் நிராகரிக்கப்பட்டன.=
இருந்த போதிலும் இந்தியா வருவதில், தம்பதி இருவரும் உறுதியாக இருந்ததால், சட்டவிரோத முறையில் இருவரும் சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவுக்கு வருவது என முடிவு செய்தனர். ஆனால் அது மிகப்பெரிய ஆபத்து என எச்சரித்த, இரு விட்டாரும் இவர்களது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரவி மற்றும் சாந்தி ஆகிய இருவரும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள மிகப்பெரிய தார் பாலைவனத்தை நடந்தே கடக்க தொடங்கினர். இதற்காக தேவையான குடிநீர் மற்றும் உணவை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் சர்வதேச எல்லையை கடந்த நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த நீர் மற்றும் உணவு ஆகியவை தீர்ந்து போனது. இதனால் தாகம் மற்றும் நீரிழப்பு ஏற்பட்டு, இருவரும் பரிதாபமாக பாலைவனத்தில் இறந்தனர்.
இறந்த இருவரிடமும் பாகிஸ்தான் அரசின் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. அவர்களது உடலின் அருகே பெரிய அளவிலான காலி குடிநீர் கேன்கள் இருந்துள்ளன. இருவரும் உயிரிழப்பதற்கு முன் கடுமையான தாகம் மற்றும் வறட்சியில் கஷ்டப்பட்டு இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய எல்லைக்குள் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இவர்களின் உடல்களை இந்திய அதிகாரிகள் மீட்டனர். தம்பதிகள் உயிரிழந்து 8 லிருந்து 10 நாட்கள் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இறந்த அந்தப் பெண் தனது கைகளில் சிவப்பு மற்றும் வெள்ளை வளையல்களை அணிந்திருந்தார். இது வழக்கமாக புதுமணத் தம்பதிகள் அணிவார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயிரிழந்த தம்பதி இருவரின் உடல்களையும் பாகிஸ்தானில் உள்ள அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பின்னர், பாகிஸ்தானில் உள்ள இருவரின் குடும்பங்களிடமும் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள இவர்களது உறவினர்களும் இருவரின் உடல்களை தகனம் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எப்படியும் இந்தியாவில் நுழைந்து ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டுமென்ற கனவுடன் புறப்பட்ட இளம் தம்பதி உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu