BIG STORIES
நைட் கிளப்பாக மாறும் தென்னந்தோப்புகள்.. விடிய, விடிய நடந்த திடுக்கிடும் சம்பவங்கள்!
May 28, 2025 07:27 AM
616
ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூருவில் ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் போதை பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக அவ்வபோது போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து அங்கு போதை கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது. இதனால் உஷாரான கும்பல், தற்போது மாற்றுவழிகளை கையாள்கின்றன.
இரவு நேர பார்ட்டிகளில் ஐடி ஊழியர்கள், கல்லூரி மற்றும் இளைஞர்கள் ஒன்றாக சந்திக்க வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன. குறிப்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லை ஓரங்களில் அமைந்துள்ள பண்ணை வீடுகளை தேர்வு செய்து அங்கு குத்தகைக்கு எடுத்து அவற்றை இரவு நேர கிளப்பாக மாற்றிவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழக கர்நாடக எல்லையான கக்கனூர் சோதனை சாவடியில் பேரிகை போலீசார் கடந்த 24ஆம் தேதி இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த கார்களை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயன்றபோது, இரு கார்கள் நிற்காமல் மின்னல் வேகத்தில் வேகமாக பாகலுரை நோக்கிச் சென்றது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த கார்களைத் துரத்தி சென்றனர். அப்போது அந்த இரு கார்களும் பேரிகை அருகே முதுகுருக்கி கிராமத்தின் அருகில் உள்ள தென்னந்தோப்பிற்கு நுழைந்தது. அங்கு சென்று பார்த்து போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்ப்பட்டது. அங்கு இரவு டிஜே சவுண்டுடன் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நடன நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் அரை நிர்வானத்துடன் போதையில் தள்ளாடி கொண்டிருந்தனர். மேலும் அதில் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பங்கேற்று இருப்பது தெரியவந்தது.
தென்னந் தோப்பிற்குள் மின் ஒளி அமைக்கப்பட்டு, டூரிஸ்ட் டெண்ட்கள் போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே விலை உயர்ந்த மதுபான பாட்டில்கள், கூல்டிரிங்கஸ் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட்கள் சிதறி கிடந்தன. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இந்து அமைப்பு கொடி காட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து காரில் தப்பி சென்று, அங்கு பதுங்கி இருந்த மூவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூர் ஜேபி நகரைச் சேர்ந்த பாலாஜி, பீகாரை சேர்ந்த ரஜினீஸ் குமார் மற்றும் கோவாவை சேர்ந்த இக்னேஸஸ் லாரன்ஸ் ஆகிய மூவரையும் பேரிகை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த விலை உயர்ந்த போதை பொருட்கள், உயர் ரக கர்நாடக மதுபானங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இரவு விருந்தில் கலந்துக்கொண்ட குத்தாட்டம் ஆடிய பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்று. பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
தைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இரவு விருந்து நடந்த இடம், முதுகுருக்கை கிராமத்தை அடுத்த தட்டனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பக்தவசலம் என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னந் தோப்பு என்பது தெரியவந்தது.
சுமார் 4 ஏக்கர் கொண்ட இந்த தென்னந்தோப்பை, பெங்களூரை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு வருட குத்தகையாக 2 லட்சம் ரூபாய்க்கு கொடுத்துள்ளார்.
இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஆரண்யா ஈகோ வில்லேஜ் மூவ்மெண்ட் என்ற பெயரில் இரவு நடன நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
பெங்களூருவில் இரவு நேர பார்ட்டிகளில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க, அந்த மாநில போலீசார் அதிரடி காட்டிவரும் நிலையில், கர்நாடக- தமிழ்நாடு எல்லைகளில் உள்ள தென்னந்தோப்புகளை குறிவைத்து அவற்றை கிளப்புகளாக மாற்றி இரவு நேர விருந்து என்ற பெயரில் போதைப் பொருட்களை விற்பனை செய்துவந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu