உலகம்
பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகள் வீச்சு
May 08, 2025 01:26 AM
512
பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகள் வீச்சு
பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் 25 நிமிடங்கள் 24 ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் குண்டுகள் மூலம் இந்தியாவின் விமானப்படை தாக்குதல் நடத்தி பகல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எழில்மிகு பகல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று சுற்றுலாப் பயணிகளை சுற்றிவளைத்து பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றது.
இந்நிலையில், இத்தாக்குதலுக்கு பின்புலத்தில் பாகிஸ்தான் இருப்பது தெரியவந்த நிலையில் அந்நாட்டிற்கு எதிரான ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளையும் இந்தியா தீவிரப்படுத்தியது. அதன்படி சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த மத்திய அரசு, அந்நாட்டின் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்தவும், அந்நாட்டின் கொடிகள் ஏற்றிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழையவும் அதிரடியாக தடைகள் விதிக்கப்பட்டன. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததால் அந்நாட்டிற்கு செல்லும் செனாப் நதி வறண்டது.
நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி முப்படைகளின் தளபதிகள், தலைமை தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அவ்வப்போது ஆலோசனைகளை நடத்தி வந்தார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.
இந்நிலையில், இந்திய நேரப்படி சரியாக அதிகாலை 1.05 மணிக்கு பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது இந்தியா. இந்த தாக்குதலில் அங்கு செயல்பட்டு வந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களை இந்தியா தரைமட்டமாக்கியது. லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய இடங்கள் இந்தியாவின் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களின் தாக்குதலுக்கு இரையாகின.
அதிகாலை 1.30 மணி வரை சுமார் 25 நிமிடங்களில் முக்கியமான பயங்கரவாத நிலைகளை 9 இடங்களில் தீரத்துடன் இந்தியா அழித்தொழித்தது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூரில் ஜெய்ஷ் - இ - முகமது இயக்கத்தின் தலைமையகம், முரிட்கேவில் லஷ்கர் - இ - தொய்பா இயக்கத்தின் முக்கிய பயிற்சி மையம், சியால்கோட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் மையமாக செயல்பட்டு வந்த மெஹ்மூனா ஜோயா மையம் இந்தியாவால் தாக்கி அழிக்கப்பட்டன. அதேபோல், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிம்பரில் லஷ்கர் - இ - தொய்பா மையமாக செயல்பட்டு வந்த மையம், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் மையமாக செயல்பட்டு வந்த கோட்லியில் உள்ள மார்கஸ் அப்பாஸ், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் ஆயுதங்கள் வைக்கும் இடமாக செயல்பட்டு வந்த இடம் உள்ளிட்டவை துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் 8 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வரையிலான தூரத்தில் உள்ள இலக்குகளை இந்தியாவால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் நிலைகளையும், கட்டமைப்புகளையும் திட்டமிட்டு குறிவைத்து தாக்குதல் நடத்திய இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகளை தாக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. அதேபோல், இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கும் வகையில் பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு "ஆப்ரேசன் சிந்தூர்" என பிரதமர் மோடி பெயரிட்டார். பகல்காம் தாக்குதலில் பெண்களின் கண்முன்னே அவர்களின் கணவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை குறிப்பிட்டு அப்பெயர் சூட்டிய பிரதமர், இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை இரவு முழுவதும் கண்காணித்துள்ளார். பகல்காம் சம்பவம் நிகழ்ந்து 15 நாட்களில் ஆபரேசன் சிந்தூரை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது இந்திய பாதுகாப்புப்படைகள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu