முகப்பு
இது தான்டா போலீஸ்..! தாயின் 5 மாத தவிப்புக்கு ஒரே நாளில் உடனடி தீர்வு..! தாய்லாந்து கணவரிடமிருந்து குழந்தை மீட்பு..
May 26, 2025 07:09 AM
286
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த பூவரசூரை சேர்ந்தவர் கோல்டா . இவரை ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ் பெனிட்டஸ் காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர்.ஆகப் பணிபுரிந்து வந்த ராஜ் பெனிட்டஸ், தனது காதல் மனைவியுடன் சென்னையில் குடித்தனம் நடத்தி வந்தார்.
2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், கொரோனா பாதிப்பால் வேலையை இழந்து சென்னையை விட்டு ஆறுமுகநேரிக்கு குடிபெயர்ந்தனர்.
அதன் பின்னர் ராஜ் பென்னிட்டஸ் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் உள்ளூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டும் மது அருந்திக்கொண்டும் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்த கோல்டா தனது குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது மனைவி மீது சந்தேகப்பட்டு ராஜ் பென்னிட்டஸ் அவரை அடித்து உதைத்ததாகவும் அவரது செல்போனை வாங்கி சோதனை செய்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
கணவன் ஊதாரியாக ஊர் சுற்றியதால் மனம் வெறுத்துப் போன மனைவி கோல்டா தனது மகனுடன், தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பூவரசூர் தேவாலயத்திற்கு தனது மகனுடன் கோல்டா சென்றுள்ளார்.
அங்கு வைத்து கோல்டாவிடம் இருந்து மகனை, ராஜ்பென்னிடஸ் குடும்பத்தினர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கிறிஸ்மஸ் அன்றும் அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் தனது மகனை தேவாலயம் அழைத்து வராததால் சந்தேகப்பட்டு கோல்டா தனது கணவர் குடும்பத்தினரிடம் மன்றாடி உள்ளார்.
ஆனால் அவர்கள் குழந்தையை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட தனது ஐந்து வயது மகனை தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமியிடம் தாய் கோல்டா புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் மகாலட்சுமி கோல்டாவை வாராவாரம் அழைக்கழைத்து ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை எங்கே இருக்கிறது என்பதை கூட சொல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
தனது குழந்தை இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று பல்வேறு நாட்கள் காவல் நிலையத்தில் மணிக்கணக்கில் காத்துக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஒரு நாள் காவல் நிலையம் சென்று காத்திருந்த கொல்டாவிடம் உங்கள் புகார் விசாரித்து முடிக்கப்பட்டு விட்டது என்று கூறி காவல் அதிகாரிகள் கோல்டாவை வீட்டிற்கு திரும்பி செல்ல கூறியுள்ளனர்.
இதனால் மீண்டும் புதிய புகார் ஒன்றை கடந்த 16ஆம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவித்தார் கோல்டா
இந்த புகாரையும் விசாரித்த காவல் ஆய்வாளர் மகாலட்சுமி , குழந்தையை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஐந்து மாதமாக ஏற்கனவே அலைக்கழித்தது போதாது என்று மீண்டும் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த தாய் கோல்டா, கடந்த ஐந்து மாதங்களாக காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் தனது புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதத்திடம் புகார் தெரிவித்தார்.
உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் புகார் மீண்டும் அதே பகுதியில் உள்ள காவல் ஆய்வாளர்களுக்கே அனுப்பி வைக்கப்படுவது தான் வழக்கம்.
ஆனால் தனது குழந்தையைப் பிரிந்து மிகுந்த மனவேதனையுடன் தாய் கோல்டா அளித்த புகாரின் முக்கியத்துவம் கருதி சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமியை உடனடியாக சென்னைக்கு வருமாறு உத்தரவிட்டார் ஏடிஜிபி.
அந்தப் பெண்ணின் புகார் மற்றும் இதுவரை நடந்த விசாரணை குறித்த முழு விவரங்களையும் கேட்டு பெற்ற அவர் உடனடியாக சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினார்.
இதை அடுத்து தந்தை குடும்பத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த சிறுவன் ஒரே நாளில் மீட்கப்பட்டு தாய் கோல்டாவிடம் ஒப்படைக்கப்பட்டான்.
முன்னதாக விசாரணையில் மனைவி கோல்டாவை அலைக்கழிக்கும் நோக்கில் கணவன் ராஜ் பென்னிடஸ், தனது மகனை உறவினர் ஒருவர் வீட்டில் விட்டுவிட்டு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருப்பது தெரியவந்தது.
தனது குழந்தை மீண்டும் தனக்கு கிடைக்க உதவிய ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்திற்கு அந்தப் பெண் நன்றி தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உள்ள ஆய்வாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தாலே போதும் நீதி கேட்டு காவல் நிலையங்களுக்கு மாதக்கணக்கில் நடையாய் நடக்கும் புகார்தாரர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu