ஆட்டோவை அடித்து தூக்கிய பாஸ்ட் கார் கொலையாளிகள்... சினிமா பாணியில் கொடூர சம்பவம்..! சித்திக்காக இவ்வளவு வெறியா ?
சினிமா பாணியில் ஆட்டோவுடன் ஓட்டுனரை காரால் அடித்து தூக்க திட்டமிட்டு மோதிய நிலையில், கார் தலைகுப்புக்குற கவிழ்ந்தது. வெறி அடங்காமல் விபத்துக்குள்ளான காருக்குள் இருந்து எழுந்து வந்த ஆசாமிகள், ஆட்டோ ஓட்டுனரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிகழ்ந்துள்ளது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கடக்கோடு திம்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோதண்டம். இவரது மனைவி ராதா, இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தன்னிடம் பேச வரும் மனைவியின் உறவினர்களை ஆபாசமாக பேசுவது, மிரட்டுவது என்று கோதண்டம் சற்று உக்கிரமாக நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் மனைவியின் அக்காள் மகன்களான ஜஸ்வந்த், கோகுல் இருவர் கோதண்டத்தை எச்சரித்துள்ளனர். பதிலுக்கு கோதண்டமும் சவால் விட்டதாக கூறப்படுகின்றது .
இந்த நிலையில் தங்கள் சித்தியை தினம் தினம் தாக்கிவரும் சித்தப்பாவை ஆட்டோவுடன் அடித்து தூக்கிவிட்டு விபத்தில் பலியானதாக கதையை முடித்து விட திட்டம் தீட்டிய ஜஸ்வந்த் மற்றும் கோகுல் காரில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த கோதண்டத்தின் ஆட்டோ மீது காருடன் மோதி உள்ளனர். ஆட்டோ இடது பக்கம் உள்ள தேயிலைத் தோட்ட பள்ளத்துக்குள் தூக்கி வீசப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆட்டோ வலது பக்கம் உள்ள சுவற்றில் மோதி ஸ்ட்ராங்காக நின்றது.
ஆனால் ஆட்டோவில் மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த காருக்குள் இருந்து லேசான காயங்களுடன் வெளியே வந்த ஜஸ்வந்த், கோகுல் ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் கோதண்டத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அரிவாளை தூக்கி வீசி விட்டு அங்குள்ள வீடு ஒன்றில் பதுங்கிக் கொண்டனர்
விரைந்து வந்த போலீசார் கோதண்டத்தின் உடலை சுற்றி அழுது கொண்டிருந்த உறவினர்களை அங்கிருந்து விரட்டி விட்டு, பதுங்கியிருந்த இரு கொலையாளிகளையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் தேயிலை தோட்டத்துக்குள் இருந்து கைப்பற்றப்பட்டது
போலீசார் கோதண்டத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட ஜஸ்வந்த், கோகுல் ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கள் சித்தியை கொடுமைப்படுத்தியதோடு தொடர்ந்து தங்கள் குடும்பத்தை அவதூறாக பேசியதால் கொலை செய்ததாக தெரிவித்தனர் இதையடுத்து இந்த கொலையில் கோதண்டத்தின் மனைவிக்கு தொடர்பு உள்ளதா? என்பதை அறிய அவரை அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments